(மீள் பதிவு: தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கற் பிரிவின் பொறுப்பாளர் திரு.யோகரத்தினம் யோகி அவர்களின் முழுமையான உரை)
சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனை களுக்குத் ஒரு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை அனைத்துலகம் உணரவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட போராட்ட வரலாற்றில் பல அரிய வகை செயல்கள் செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் உள்ள போர்களைப் பார்க்கிறோம். அதில் உள்ள அரிய, பெரிய விடயங்களைப் பற்றி பேசுகிறோம்.
ஆனால் குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட ஒரு தேசிய இனமானது, மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட படைக்கு எதிராக தற்போதும் போராடி வருகிறது. உலகின் 4 ஆம் வல்லரசு என்று சொல்லப்படுகிற இந்தியாவுக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தியது.
இந்த போராட்டத்தில் புதிய, புதிய உத்திகள், தற்கொடைகள் மற்றும் சாதனைகள் புரியப்பட்டிருப்பதை உலகமும் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழரின் நீண்ட வரலாற்றில் எமது தேசியத் தலைவரின் காலம் என்பது வேறுபட்ட ஒன்றாகும். கரிமருந்து என்பது வந்த பின்னர் தமிழரின் வரலாறு என்பது சரியானதாக பதிவு செய்யப்படவில்லை. பண்டார வன்னியன், சங்கிலியன் ஆகிய மன்னர்கள் போராடினார்கள். ஆனால் அவர்கள் புதுமைப் படைக்கலன்களை முறையாகப் பயன்படுத்தினார்களா? என்ற கேள்வி உள்ளது.
கரி மருந்தின் வருகைக்குப் பின்னரான அந்த புதுமைப் படைக்கலன்களை சரியான முறையிலும் வித்தியாசமான முறையிலும் கையில் இருக்கின்ற வளங்களோடு புதிது புதிதாக அதனை புனைந்தது கையாள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. அதற்கு ஊக்க சக்தியாக எமது தலைவர் பிரபாகரன்தான் இருந்திருக்கிறார். இந்த வரலாற்றிலே- போரியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் சமர் நூலாக்கப் பிரிவு செயற்படுகிறது.
முன்பும் இத்தகைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் போராட்டம் எப்படி வளர்க்கப்பட்டது- எவ்வளவு பெரிய சிக்கல்களோடு இந்தப் போராட்டம் வளர்க்கப்பட்டது- உலகத்தில் இருக்கின்ற பல இயக்கங்களை மிஞ்சிய இயக்கமாக எப்படி உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவது ஒரு நோக்கம்.
இன்று 30 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது 3 அல்லது 4 தலைமுறையை இந்தப் போராட்டம் கடந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகளாக இருந்தவர்களில் பலர் வீரச்சாவடைந்தனர். அதன் பின்னர் தளபதிகள் வந்தார்கள். இப்படியாக 4 ஆம் தலைமுறை நிலை வந்துள்ளது. இவர்களுக்கும் இந்த நீண்ட போராட்டத்தில் எப்படியெல்லாம் சாதித்தோம் என்பதை கற்றுத் தருவதற்கும் அதனூடாக அவர்கள் ஒரு படிப்பறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்த சமர் நூலாக்கப் பணிகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
அந்த வகையில்தான் இந்தப் பிரிவு தலைவர் அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு தொடங்கப்பட்டது. இன்றுள்ள சூழலில் அந்தப் பணியை நாம் முழுமையாக செய்ய முடியாது போயினும் ஓரளவுக்கேனும் செய்து கொண்டு வருகிறோம்.
இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி நாம் இந்த சமர் நூலாக்கப் பணிகளைச் செய்து வருகிறோம். இதில் ஒரு சிக்கலும் உள்ளது. இன்னமும் போராட்டம் தொடர்ந்து நடப்பதால் பல விடயங்களை நாம் வெளிப்படுத்த இயலாது. பாதுகாப்பான முறையிலே வெவ்வேறான இடங்களிலே இதனைச் செய்வதில் சிக்கல் உண்டு.
சோழர்கள் மிகப் பெரிய கப்பற்படை வைத்திருந்தனர் என்றாலும் அது தொடர்பிலான பதிவுகள் இல்லை. தமிழர்களைப் பொறுத்தவரை இத்தகைய பதிவுகளைப் பேணுவது அதை அடுத்த தலைமுறைகளுக்கு தருவது என்பதில் ஒரு குறைபாடு உண்டு. அந்தக் குறையை இல்லாது செய்ய இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த இக்கட்டுக்குள்ளும் அவை தப்பிப் பிழைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
புலம்பெயர் நாடுகளில் இந்தப் போராட்டத்திலே பங்கேற்று பல சாதனைகளைச் செய்த பலரும் இப்போதும் உள்ளனர். முன்னாள் போராளிகள் என்று மட்டுமல்ல- இந்தப் போராட்டத்துக்கு மறைமுகமாக உதவிய பொதுமக்களும் புலம்பெயர் நாடுகளில் உள்ளனர். அவர்களைப் பற்றிய பதிவுக்குமான ஒருங்கிணைப்பு பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது நடைபெறுவது ஒரு “அரசியல்”
சிறிலங்கா அரசாங்கமானது ஒரு இராணுவ வழி தீர்வின் மூலம் அரசிய தீர்வை காண முயற்சிக்கிறது என்று பொதுவாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது இராணுவத் தீர்வின் மூலம் தமிழ் மக்களை அழிக்கவே பார்க்கிறது. அது எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க முயலவில்லை. ஆகவே அதனது குறிக்கோள் என்பது எந்தவித தீர்வுக்கும் போகாமல் தமிழர்களை அழிப்பது என்பதுதான். அதற்காக அனைத்து அரசியல் கட்சி குழுவானது ஒரு தீர்வைத் தருவது போல் நடிக்கிறது. காலம் காலமான சிறிலங்காவின் நோக்கம் என்பது ஒன்றுதான்.
அதாவது தமிழ் மக்கள்- இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் இல்லை- அவர்கள் இந்த மண்ணிலே வாழ அருகதை அற்றவர்கள்- அவர்கள் ஏதோ ஒருவகையில் அழிக்கப்பட வேண்டும் அல்லது சிங்களவர்களுக்கு ஏதோ ஒருவகையிலே சேவகம் செய்து அடிமைபோல் வாழ வேண்டும் என்ற நிலையில்தான் சிங்கள அரசு காலம் காலமாக செயற்படுகிறது. இந்த நிலையிலிருந்து அது மாறவும் இல்லை. அண்மைக்கால நடவடிக்கைகளும் கூட இதனைத்தான் வெளிப்படுத்துகின்றன. எனவே சிறிலங்கா அரசாங்கமானது அரசியல் தீர்வு என்று பேசுவது அனைத்துமே பொய்யானது. இராணுவத் தீர்வைத்தான் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு விடயத்தை திரும்ப, திரும்பக் கூறி வருகிறார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் தெரிவிக்கப்பட்டதுதான். இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்காதபோதும் ஏதோ ஒரு வகையில் அதனைச் செயற்படுத்தி தமிழ் மக்களினது விருப்பங்களைத் தீர்க்குமாக இருந்தால் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தலைவர் பிரபாகரன் கூறிய போதும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். சிங்கள இனவாத பூதமானது இதனையெல்லாம் விழுங்கிவிடும் என்றார். ஆனால் அப்போது அதனைக் கேட்கவில்லை. பலர் அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாகவும் மக்களாட்சி முறைக்கு வந்து விட்டதாகவும் பலர் நாடகமாடினார்கள்.
ஆனால் அந்த ஒப்பந்தம் என்பது ஒரு நாளிலே தூக்கி எறியப்பட்டு வெற்று காகிதமானது.
தமிழர்கள் தனிநாட்டில்தான் உரிமைகளோடு வாழ முடியும் என்பது முடிந்த முடிவு.
ஆனாலும் நாம் தனியாக இயங்க முடியாது. அனைத்துலகம் என்பது உள்ளது. ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட முடியும் என்று அந்த அனைத்துலகம் கூறுகிறது. அதனூடே அமைதியைப் பெற்றுவிட முடியும்- தமிழர்கள் தங்களது உரிமையைப் பெற்றுவிட முடியும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
சிங்கள தேசம் உண்மையில் எதனையும் செய்யாது என்று அந்த அனைத்துலகம் நம்பும் வரை அவர்கள் சொல்லுகிற இந்த நாடகத்துக்குள்ளே நாங்களும் நடிக்க வேண்டியதுள்ளது.
சிங்கள தேசமானது சமாதானமாக வாழ விரும்பி ஏதாவது ஒரு தீர்வை முன்வைக்குமேயானால் நாம் அதனை பரிசீலிப்போம் என்று கூறியுள்ளோம். அந்த வகையில்தான் தற்போதைய “அரசியல்” நடைபெறுகிறது.
புலிகள் அமைதி காக்கின்றார்களா?
சமாதானம் என்ற நாடகத்தினால்தான் தமிழர்கள் மீது படுகொலைகள் நடைபெறுகின்றன- தமிழர்கள் தாங்கொண்ணா துயருக்குள்ளாகின்றனர். புலிகள் அமைதி காக்கின்றனர் என்று புலம்பெயர் தமிழர்கள் நினைக்கின்றனர். ஆனால் அப்படியொன்றும் இல்லை.
புலிகள் அமைதி காக்க இல்லை. அப்படி அமைதி காத்திருந்தால் யாழில் 40 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர் அச்சத்திலே வாழ வேண்டியதிருக்காது. எரிமலையின் விளிம்பில் கொழும்பு உள்ளிட்ட சிங்கள தேசம் நடக்க வேண்டிய தேவையுமிருக்காது. ஆக “ஏதோ” நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம்.
இது ஒன்றும் கிரிக்கெட் மட்ச் அல்ல. எடுத்தவுடன் சிக்சர் அடிக்க. இது ஒரு விடுதலை அமைப்பு. காலம், சூழல் அதற்கேற்பவான நகர்வுகள் உண்டு.
கொலைகளும் தாங்கொணாத் துயரும் இந்த விடுதலைப் போரோடு தொடர்புபட்டது. அந்தக் கொலைகளைத் தடுக்கவும் துயரை நீக்கவுமே இந்த விடுதலைப் போராட்டம்.
இந்த மண்ணில் குருதியும் நாளாந்த சாவும் என்பது எமது போராட்டத்தினோடு இணைந்த ஒரு பக்கம். இதற்கூடாகத்தான் இந்தப் போராட்டம் நகர்கிறது.
தமிழ் மக்களைக் கொல்ல வேண்டும்- அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்ற ஒரு அரசாங்கத்துக்கு எதிராக போராடுகிறோம் நாம். நமக்கு துன்பங்கள் வரத்தான் செய்யும்.
ஆகவே புலம்பெயர் தமிழ் மக்கள் நினைப்பது போல் சமாதானம் என்ற நாடகத்துக்குள் மட்டும் நாம் நடிக்கவில்லை. அப்படியானால் இப்போதும் போராளிகள் வீரச்சாவடையத் தேவையில்லை.
ரணில் வந்தால் தீர்வைத் தருவாரா?
கடினமான பாதையூடாக பயணிக்கின்ற போது வேறு ஒரு பக்கத்தை காண்பிக்கின்ற போது அதனூடே தப்பித்து வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ளலாம் என்பதைப் போன்ற நிலை சிக்கலானது.
கடந்த கால தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இத்தகையதொரு நிலைப்பாட்டில்தான் மாவட்ட சபை, மாகாண சபை என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தன. அவர்களுக்கு ஒன்றுமே நடைபெறாது என்பது தெரியும்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தவர் ரணில் விக்கிரமசிங்க.
ஒற்றையாட்சிக்கு வெளியே வந்து சந்திரிகா கொண்டு வந்த ஒரு தீர்வுத் திட்டத்தை எதிர்த்தவர் ரணில் விக்கிரமசிங்க.
தமிழ் மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஏதும் செய்துவிடுவார் என்று கருதுவது பொய்யானது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான போராட்டம் நடத்தும் ஆளுமையற்றவர் ரணில் விக்கிரமசிங்க. ஆளுமையுடன் அவர் போராட்டம் நடத்தியது இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால்
2 ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்து அவர்களின் மரபணுக்களுக்குள்ளே ஊறிவிட்ட சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்க வேண்டும். ரணிலுக்கு அது கொஞ்சம் கூட கிடையாது.
ஆக ரணில் வந்தால் தீர்வுத் திட்டம் வந்திருக்கும் என்று கருதுவது கடினமான பாதையூடே செல்லும் போது தப்பித்தல் போன்றதாகும்.
ரணில் வந்தால் என்ன? மகிந்த ராஜபக்ச வந்தால் என்ன? அடுத்த தலைமுறை தலைவராக இருந்தால் என்ன? எல்லாமும் ஒன்றுதான்.
கடந்த அரச தலைவர் தேர்தலில் விடுதலைப் புலிகள் முடிவெடுத்தது என்பது மகிந்தவோ ரணிலோ வெல்ல வேண்டும் என்பதற்கல்ல. அரச தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கு ஏதும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்கிற கொள்கை சார்ந்த முடிவுதான் அது.
அன்று ரணிலோடு நின்று சமாதானத்தில் கெட்டிக்காரர்களாக காட்டிக்கொண்ட மிலிந்த மொறகொடவும் ஜி.எல்.பீரிசும் இன்று பேசுகின்ற பேச்சுக்கள் என்ன? பதவிக்காக கட்சி மாறிப் போகின்றார்கள். அவர்கள் அனைவருமே ஒரு நாடகத்தின் மிகப்பெரும் நடிகர்கள்.
ஆகவே அவர் வந்தால் தீர்வு கிடைக்கும்? இவர் வந்தால் தீர்வு கிடைக்கும் என்று குழம்பக்கூடாது.
அமைதிப் பேச்சுகள் என்பது அனைத்துலக ஒழுங்கின் கீழ் நடைபெறுவதானது. சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை அந்த அனைத்துலகம் உணர வேண்டும். அதிலே அனைத்துலகம் சரியாக இருந்தால் இந்தப் போராட்டத்தில் பல சிக்கல்கள் வராது .
***