முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாயமும் ஆயுத மௌனிப்பும்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

பூகோளஅரசியல்: தலைப்பு-03


"யாருடைய கட்டுப்பாட்டில் இலங்கைத் தீவு இருக்கிறதோ, அவர்களே இந்து சமுத்திரப் பெருங்கடலைக் கட்டுப்படுத்துவார்கள். இந்து சமுத்திரப் பெருங்கடலை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே அனைத்துலக வர்த்தகப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவார்கள். அனைத்துலக வர்த்தகப் போக்குவரத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே இந்த உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவார்கள்." - த.ஞா.கதிர்ச்செல்வன்.



பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் இருந்தே பூமியின் அரசியல் சமத்துவம் மேலாதிக்க சக்திகளாக உருவாக இருந்த நாடுகளால் சாவாலுக்குள்ளாகி வந்துள்ளது. உலகின் அரசியல் முறைமைக்கு வித்திட்ட புரட்சிகர நெப்போலியப் பிரான்சு முன்னெடுத்த போர்கள் - இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட தொடர்ச்சியாக நீடித்த அந்தப் போர்கள் - உறைபனி சூழ்ந்த ரசியாவின் வயல் வெளிகளிலும் "வோட்டர்லூ" போர்க்களத்திலும் முடிவடைய மட்டுமே இட்டுச்சென்றது. 

பேரரசர் வில்ஹெல்மைன் காலத்தில் யேர்மனிடம் இருந்த விரிவாதிக்க இலக்குகள் முதலாம் உலகப் போரின் பிரளையத்தைத் தோற்றுவித்தது. அந்தப் போர் முடிவடைந்து 1919 இல் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை ஓர் உலகக் கட்டமைப்பை உருவாக்கியது. அந்த உலகக் கட்டமைப்பு, இருபது ஆண்டுகளின் பின்னர் ஹிட்லரின் யேர்மனியாலும் யப்பானியப் படைகளாலும் மீறப்பட்டு, வரலாற்றில் மிகப்பெரிய அழிவுகளுக்கு இட்டுச் சென்றது. 

இரண்டாம் உலகப் போரின் முடிவில் உருவாக்கப்பட்ட உலகக் கட்டமைப்பு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சோவியத் ஒன்றியத்தால் சவாலுக்குட்பட்டு வந்தது. அந்த சவால் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளால் containment strategy எனப்படும் “முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாயம் என்னும் கொள்கைத் தந்திரத்தால் கையாளப்பட்டது.

ஆண்டு 1989 இற்கும் 91 இற்கும் இடையில் பனிப்போரின் முடிவில் சோவியத் பேரரசு வீழ்ச்சியடைந்ததில் இருந்து, அடுத்த வல்லரசு உலக அரசியல் முறைமைக்குப் பெரும் சவாலாக இருக்குமென மூலோபாயவாதிகள் ஊகித்தனர். அவ்வாறு ஊகித்தவர்களுள் அனேகமானோர் சீனாவின் மீதே கவனம் செலுத்தினர். 

ஏனெனில், ஒரு மேலாதிக்க நாட்டுக்கு இருக்கவேண்டிய பின்வரும் பண்புகளை சீனா கொண்டுள்ளது: அவை, கண்டம் போன்ற நிலப்பரப்பின் அளவு; சமுத்திரத்தை அடைவதற்கான கடல்வெளி; உலகின் மிகப்பெரியதும் அதிகரித்தும் வருகின்ற சனத்தொகை; வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரம்; வளர்சியடைந்துவரும் படைத்துறைக் கொள்திறன்; மற்றும் விரிவாதிக்க இலக்குகள் என்பன அடங்கும்.

அத்துடன், ஒரு புரட்சிகரமான கோட்பாட்டின் மூலம் அதன் தொடர்ச்சியான எதேச்சாதிகார ஆட்சியை நியாயப்படுத்தும் ஒரு ஆட்சியால் சீனா ஆளப்பட்டுவருகிறது. அதன் கடற்கரைப் பகுதிகளுக்கும் அதற்கு அப்பாலும் அமெரிக்கக் கடற்படை அணுகுவதைத் தடுத்துவரும் சீனா, அதன் விரிவாதிக்க இலக்குகளில் சிலவற்றை அடைவதே அதன் நோக்கமாக இருக்க முடியும்.

தாய்வானைத் தன்னோடு இணைப்பதற்கான அதன் இலக்குக் காரணமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்வான் ஆகிய நாடுகளோடு சீனா முறுகலில் ஈடுபட்டுள்ளது. ஸ்பிறற்லி தீவுகள் (Spratley Islands) விடயத்திலும் அத் தீவுகளின் கடற்பகுதிகளுக்குள் இருக்கும் எரிபொருள் எண்ணெய்ப் படிமங்கள் விடயத்திலும் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே சர்ச்சைகள் இருந்துவருகின்றன. கிழக்குச் சீனக் கடலில் செங்காகு-சோட்டோ தீவுகள் மற்றும் எரிவாயு, எண்ணெய் கண்டுபிடிப்பு விடயங்களில் சீனாவுக்கும் யப்பானுக்கும் இடையே பிரச்சினைகள் உள்ளன. அதேபோல், பார்சல் தீவுகள் விடயத்தில் தாய்வான் மற்றும் வியட்நாமுடன் சீனா பிரச்சினைகளைக் கொண்டுள்ளது.

அதன் கடற்கரைப் பிராந்தியங்களுக்கு அமெரிக்கக் கடற்படை அணுகுவதை அனுமதி வழங்குதல்,மறுத்தல் எனும் சீனாவால் விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நடைமுறையானது, தமது பாதுகாப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருக்கும் யப்பான், தென் கொரியா போன்ற ஏனைய பிராந்திய அரசுகளின் மனநிலையைப் பாதிக்கும் விடயமாக உள்ளது.

ஆசியப் பசுபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வழிமுறையான “முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாயத்தை நடைமுறைப் படுத்துவதானது, அமெரிக்கக் கடற்படை மற்றும் வான்படை அந்தப் பிராந்தியத்தை நம்பகமாக அணுகுவதில் தான் தங்கியுள்ளது.

அதுவொன்றும் நெப்போலியன், கைசர், கிட்லர் ஆகியோர் ஈடுபட்டதற்கு ஒப்பான அல்லது சோவியத் ஒன்றியம் ஈடுபட்டதற்கு ஒப்பான ஒரு மேலாதிக்கத்துக்கான முயற்சியை சீனா நிச்சியமாகச் செய்யும் என்று பொருளல்ல. ஆனால், அவ்வாறான திசையைக் குறித்துக்காட்டுகின்ற சீனாவின் அபிவிருத்திகளையும் அறிகுறிகளையும் பார்த்துக்கொண்டு நிச்சியம் அமெரிக்கா பொறுமையாக இருக்கப்போவதில்லை. 

சீனாவின் பொருளாதாரத் தாராளமயமும் உலகமயமாகும் தோற்றப்பாடும் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் நலன்களுக்கிடையேயான அதிகரித்துவரும் மிகப்பெரும் போட்டியில் முடிந்துள்ளது.

தாய்வானை இணைத்துக்கொள்தல் அல்லது வெற்றிகொள்தல், கிழக்காசியத் தலைநிலப் பகுதியை (East Asian mainland) அணுகுவதற்கான கடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற விடயங்களில் சீனா பிராந்திய இலக்குகளை மட்டும் கொண்டிருந்தாலும் கூட, அவ்வாறான பிராந்திய இலக்குகள் அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களுக்கும் அந்தப் பிராந்தியத்தின் உறுதிப்பாட்டுக்கும் முரணாக அமைகின்றன.

இந்த விடயங்கள் அனைத்தும், சீனாவை பூகோள ரீதியாக “முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாயத்தால் கையாளப்படுவதற்கான அவசியத்தை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் பூகோளஅரசியல் மூலோபாயவாதி “நிக்கொலஸ் ஸ்பைக்மான் என்பவரால் உருவாக்கப்பட்ட Asian Rimland theory (ஆசியன் றிம்லான்ட்) எனப்படும் கோட்பாட்டுக்கு அமைய, யுரேசியாவின் கீழ்க் கடலுடன் இணைந்த பூமியின் பெருந் தொடர் நிலப்பகுதியில் ஒரு  பெரும் பகுதியைச் சீனா தன்னகத்தே கொண்டுள்ளது.

'றிம்லான்ட்' என்பது, கடலோடு இணைந்திருக்கும் யுரேசியாவின் "பிறை" வடிவ விளிம்பு நிலத்தொடர் ஆகும். "யாருடைய கட்டுப்பாட்டில் றிம்லான்ட் இருக்கிறதோ அவர்களே யுரேசியாவை கட்டுப்படுத்துவார்கள், யுரேசியாவை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் இந்த உலகத்தையே கட்டுப்படுத்துவார்கள்" என்பதுதான் நிக்கொலஸ் ஸ்பைக்மான் அவர்களின்  ''ஆசியன் றிம்லான்ட் கோட்பாடு'' ஆகும். 

இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின், தூரக் கிழக்கில் மிகப் பலம்வாய்ந்த ஆதிக்க சக்தியாக சீனா உருவாகும், என ஸ்பைக்மான் தெரிவித்துள்ளார். 

அத்துடன், "அந்தப் பிராந்தியத்தில் விரோத சக்தியாகவோ அல்லது கூட்டணிகள் கொண்ட வல்லாதிக்க சக்திகளாகவோ இல்லாது, மிகப்பெரிய மேலாதிக்கக் கட்டுப்பாட்டு மையத்தை - மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்று - நிறுவி வைத்திருப்பதை அமெரிக்கா உறுதிசெய்ய வேண்டியது அவசியம்," என எச்சரித்துள்ளார்.

இதே விடயத்தையே ஸ்பிக்நெவ் பிர்ஸெஸின்ஸ்கி (Zbigniew Brzezinski) என்ற பூகோள மூலோபாயவாதி இன்னொரு விதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்: 'அமெரிக்கா, தூரக் கிழக்கின் “பூகோள அரசியல் பன்மைத்துவத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்' என்றார்.

தற்போது தரைத்தோற்ற ரீதியாக ஏனைய பிராந்திய அரசுகளால் சீனா திறம்பட முற்றுகைக்குள் உள்ளாக்கப்படுகிறது; வடக்கில் ரசியா மேற்கில் இந்தியா தெற்கில் இந்தோ-சீன நாடுகள் (வியட்நாம், லாவோஸ், கம்போடியா) என்பன. அத்துடன், தெற்கே சீனாவின் விரிவாதிக்கத்துக்குத் தடங்கலாக - மிகவும் பலவீனமாக - தொடர் தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ளன.

சீனாவின் நோக்கமான விரிவாதிக்க மற்றும் கடற்படை எழுச்சியானது கிழக்கிற்கான அதன் மிக அகன்ற கடற்கரைப் பரப்பில் இருந்தே வெளிப்படும். அதுவே அமெரிக்க - சீன நலன்கள் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொள்ளும் திசையாகவும் இருக்கின்றது. 

அதன் காரணமாகவே, அமெரிக்காவின் முற்றுகைக்குள் வசப்படுத்தும் கொள்கையில் சீனாவின் கிழக்குப் பிராந்தியக் கடலுக்கு அப்பாலான பகுதியை – பூகோள ரீதியாக கடல் மற்றும் வான் பிராந்தியங்களை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மிகவும் சாதகமான ஒரு பகுதி - அமெரிக்கா முதன்மையான கவனத்தைச் செலுத்திவருகிறது.

சீனாவின் தலைநிலத்துக்கு (mainland) நெருக்கமாக உள்ள யப்பானுக்குச் சொந்தமான கடல், யப்பானின் பிரதான தீவுகளால் சூழப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்குச் சீனக் கடலுக்கான செல்வழியை தென்கொரியாவில் இருந்து கட்டுப்படுத்த முடியும். மேலும், தெற்கே தாய்வான், அதன் பெஸ்கடோர் (Pescadores) தீவுகளால் வலுவூட்டப்பட்டு, சீனாவின் சமுத்திரத்துக்கான செல்வழிக்குத் தடையாக மிகவும் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடத்தில் நிலைகொண்டுள்ளது. தென் சீனக் கடலின் ஒரு பகுதி, பிலிப்பைன்சினாலும் இந்தோனேசியாவாலும் சூழப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்துக்கான சீனாவின் செல்வழி, சிங்கப்பூர் துறைமுகம் உள்ளடங்கலாக, மலாக்கா நீரிணையாலும் மாலாய் வளைகுடாவாலும் முறையாகக் கட்டுப்படுத்தப் படுகிறது.

ஸ்பைக்மான் அவர்கள் இந்தப் பூகோள அமைப்பை “ஆசியாவின் மத்திய தரைக்கடல் (Asiatic Mediterranean) என அழைத்தார். அதேபோன்று, பூகோள அமைப்பு ரீதியில் தாய்வானின் அமைவிடமானது, ஜிப்றால்ரர் (Gibraltar) போன்று விளங்குகிறது எனக் குறிப்பிட்டார். 

சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் தாய்வான் விழுவதாக இருந்தால்ஒரு மையமானதும் கேந்திர முக்கியத்துவம் மிக்கதுமான அதன் தீவு இணைப்புகளின் தொடர்ச்சி மற்றும் தீபகற்பத் தடைகள் என்பன உடைபட்டு, அமெரிக்காவால் ஏற்படுத்தப்படும் இந்த முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாய வளைவை சீனாவால் முடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என ஸ்பைக்மான் விவரித்துள்ளார்.

இதையே பனிப் போரின் மேதையான மூலோபாயவாதி யேம்ஸ் பூர்ன்ஹாம் (James Burnham) அவர்கள், ‘தாய்வானைக் கைவிடுவதென்பது அமெரிக்காவுக்கு ஒரு மூலோபாய அழிவாக இருக்குமென எழுதியுள்ளார்.

அமெரிக்கா அதன் கடல் மற்றும் வான் ஆதிக்க வலுவைக் கொண்டும் அதன் பிராந்தியக் கூட்டணி நாடுகளின் பலத்தைக் கொண்டும் சீனாவுக்கு எதிரான முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாய வழிமுறைக்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு அந்தப் பிராந்தியத்தின் பூகோள அமைப்பு மிகவும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இதே மூலோபாய முக்கியத்துவம் தான் பூகோள அமைவிட ரீதியாக இலங்கைத் தீவுக்கும் உள்ளது. இந்த முக்கியத்துவத்தை கோட்பாட்டு ரீதியில் பின்வருமாறு விளக்குகிறேன்: 

"யாருடைய கட்டுப்பாட்டில் இலங்கைத் தீவு இருக்கிறதோ, அவர்களே இந்து சமுத்திரப் பெருங்கடலைக் கட்டுப்படுத்துவார்கள். இந்து சமுத்திரப் பெருங்கடலை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே அனைத்துலக வர்த்தகப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவார்கள். அனைத்துலக வர்த்தகப் போக்குவரத்தை யார் கட்டுப் படுத்துகிறார்களோ, அவர்களே இந்த உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவார்கள்."

இந்த நிலையை அடைவதற்கான வல்லாதிக்க நாடுகளின் பூகோள அரசியற் போட்டி காரணமாகவே இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டது. தனித் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முதலில் "முற்றுகைக்குள் அடக்கும் மூலோபாயமே" கையாளப்பட்டது. 

விடுதலைப் புலிகளின் கடற் போக்குவரத்தை - ஆயுதம், வர்த்தகம் உடப்பட அனைத்தையும் - துண்டித்தல், புலிகளின் கடற்படைப் பலத்தை செயலிழக்க வைத்தல், நிதிப் பரிமாற்றத்தை முடக்குதல், தமிழீழத்துக்கு வெளியே தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் ஆதரவையும் எழுச்சியையும் அடக்குதல் இவை அனைத்தும் "முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாயத்துக்குள்" அடக்கம். 

இதன் பின்னர் ஆயுதவழியில் விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு மூன்று ஆண்டுகளாக எதிரித் தரப்புகள் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. வேறு வழியின்றி, கடைசி உத்தியாக அப்பாவிப் பொதுமக்களை அழித்து,  அவர்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரித்தபோதுதான் எதிரித் தரப்புக்கு வெற்றி கிட்டியது.

சீனாவை முற்றுகைக்குள் வசப்படுத்தும் வழிமுறைக்கான வேலைப்பாடுகளின் ஒரு அங்கமாகவே அமெரிக்கா இந்தியாவுடனான அதன் மூலோபாய உறவுகளை முன்னெப்போதையும் விட புதுப்பித்து வருகிறது. அத்துடன், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பை அடுத்து, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சிறிலங்காவில் சீன ஆதரவு ஆட்சியை மாற்றியமைத்தது மட்டுமல்ல, இன்றுவரை சீன ஆதரவு ஆட்சி சிறிலங்காவில் ஏற்படாதவாறு திட்டமிட்டு செயற்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

இரண்டாம் உலகப் போரில் பெரிய பிருத்தானியாவைப் போன்று, தற்போது யப்பான் சீனாவை முற்றுகைக்குள் வைத்திருப்பதற்குரிய எந்த முயற்சிக்கும் அதன் முக்கியப் பூகோள அமைவிடத்தாலும் மனித வளத்தாலும் ஒரு சிறந்த மூலோபாயத் தளமாக விளங்குகிறது. தென் கொரியா மிக முக்கிய மூலோபாய மற்றும் படைத்துறைத் தளத்தை ஆசியத் தலைநிலத்தில் அமெரிக்காவுக்கு வழங்குகிறது. அதன்மூலம் முக்கிய கடல் பாதைகளை, கடற்படை மற்றும் வான்படை மூலம் பாதுகாப்புக்கு உள்ளடக்க உதவும் வகையில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தென்கொரியா அமைந்துள்ளது.

அதேபோல், பிலிப்பீன்சும் போர் விமானங்கள், கப்பல்கள், படைத்துறை உபகரணப் பொருட்கள் மற்றும் படைத் துருப்புக்களை தரித்துவைத்திருப்பதற்கெனப் பல படைத் தளங்களை அமெரிக்காவுக்கு வழங்குகியுள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டில் (யூலை 4, 1776) அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து ஐரோப்பாவை மையப்படுத்தியே அதன் பூகோள அரசியற் கவனக்குவிப்பு இருந்துவந்தது. அதன் பாதுகாப்புக்கான முக்கிய அச்சுறுத்தல்கள் ஐரோப்பாவிலே இருந்தன.

ஐரோப்பாவின் அதிகாரம் பல கூறுகளாகச் சமநிலைப்படுத்தப்பட்ட நடவடிக்கையால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு குறிப்பிட்டளவு உத்தரவாதம் இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அதிகாரச் சமநிலையைப் பாதுகாப்பதற்காக ஐரோப்பாவில் இருதடவைகள் அமெரிக்கா போரிட்டது.

பனிப் போரின் போது, மேற்கு ஐரோப்பாவைத் தற்காப்பதற்காக ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் அமெரிக்கப் படைகள் போருக்குப் போகும் உறுதியோடு - அவசியப்பட்டால் அணுவாயுதப் போரைச் செய்யவும் தயார்நிலையில் - நிலைகொண்டிருந்தனர். 

அதேவேளை, இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ஆசியாவிலும் போரிட்டது. அத்துடன், பனிப் போர்க் காலத்திலும் கூட ஆசியாவில் இரண்டு ஆயுதப் போர்களில் அமெரிக்கா ஈடுபட்டது. அப்போதுகூட உலகை அதன் பூகோள அரசியல் ரீதியாக அணுகுவதில் அமெரிக்கா ஐரோப்பாவையே முதன்மையாகப் பார்த்தது.

பனிப் போரின் முடிவும் ஐரோப்பா மீதான சுருங்கிவரும் பூகோள அரசியல் முக்கியத்துவமும் அமெரிக்காவின் மூலோபாயக் கவனக்குவிப்பை மாற்றியமைத்தது.

அதிகரித்த அளவில், அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய பகுதியாக ஆசியா மாறியது. அது, 21ஆம் நூற்றாண்டில் மிக உச்சமாக மாறிவிட்டது.

ஆசியாவின் மேற்கு கோடியில் இசுலாமிய நாடுகளுக்கும் போராட்ட அமைப்புகளுக்கும் எதிராக அமெரிக்கா போரை தொடுத்துவருகிறது. அமெரிக்கப் பிராந்திய நலன்களுக்கு மிகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தலையெடுத்துவரும் இரண்டு அணுவாயுத நாடுகள் ஆசியாவிலேதான் உள்ளன - வடகொரியாவும் ஈரானும். அமெரிக்க வல்லரசுக்கு மிக உச்ச சவாலாக விளங்கக்கூடிய போட்டிக்குரிய நாடும் ஆசியாவிலேதான் உள்ளது - சீனா.

ஆகவே, ஆசியாவுக்குள் சீன எழுச்சியின் மூலோபாய அமுலாக்கங்களையும் அதன் விளைவுகளையும் எதார்த்தமாகவும் விவேகமாகவும் முறியடிப்பதற்காக அமெரிக்கா “முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாயத்தையே கையாண்டுவருகிறது. 

அதையொட்டிய அமெரிக்காவின் நகர்வுகளும் அதற்கு அணை போடுவதற்கான சீனாவின் நகர்வுகளுமே 21ஆம் நூற்றாண்டில் ஆசியாவை மையங்கொண்டிருக்கும் சமகாலப் பூகோள அரசியல் போட்டியாக வலுவடைந்து செல்கிறது.

இந்தப் பூகோளஅரசியற் போட்டிகளைத் தமிழர்கள் துல்லியமாகப் புரிந்துகொண்டு செயற்படுவதன் மூலமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சரியான வழிவகைகளுக்கு ஊடாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
***

(பங்குனி 2015 அகரம் இதழில் வெளியான எனது கட்டுரையைச் சீரமைத்து வெளியிடுகிறேன்)


- த.ஞா.கதிர்ச்செல்வன்.


Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!