ஆசியா கண்டது ஓர் இன அழிப்பே: சர்வதேச மூலோபாய மேதை லீ குவான் யீவ்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

(அகரம் சஞ்சிகையில் ஏப்பிரல் 2015 வெளியானது)

லீ குவான் யீவ், தனது நாட்டைக் கட்டிய தந்தை என்ற நிலைக்கும் மேலானவர். கடந்த இறுதி அரை நூற்றாண்டில் சர்வதேச மூலோபாயத்தின் இரண்டு மேதைகளுள் ஒருவர் லீ குவான். மற்றையவர் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

லீ குவான் யீவ். நாட்டின் முதலாவதும், மூன்று தசாப்தங்களாகவும் பிரதமராகச் சேவையாற்றிய தலைவர். 1965இல் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூரை ஓர் அதிர்ச்சியான பிளவின் ஊடாக வழிநடாத்தி, ஒரு உப்பங்கழித் துறைமுக நகரத்தை உலகின் முதற்தர வர்த்தக, நிதி மையமாக மாற்றியவர்.

சிங்கப்பூரை கிரகத்திலேயே அதிநவீன இடங்களுள் ஒன்றாக செதுக்கியவர். அவரது நாடு சுதந்திரம்பெற்ற 50ஆவது ஆண்டில் 2015 மார்ச்-23 உள்ளூர் நேரம் அதிகாலை 3:18 மணிக்குத் தனது 91ஆவது வயதில் மறைந்தார். லீ குவான் யீவின் மனைவி குவா கியோக் சூ 2010 இல் 63ஆவது வயதில் சாவடைந்ததை அடுத்து அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது. 

கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு ஏழு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர்பிரிந்தார். அவரது மூன்று பிள்ளைகளுள் ஒருவரும் தற்போது சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமருமான லீ ஹசீன் லூங் அவரது மறைவை அறிவித்து இவ்வாறு குறிப்பிட்டார்: எங்களது 'சுதந்திரத்துக்காக அவர் போராடி, இல்லாத ஒரு தேசத்தை நிறுவி, எம்மை சிங்கப்பூரியர்களாக உருவாக்கி எமக்குப் பெருமை சேர்த்தார். அவரைப் போல் இனியொருவர் எமக்குக் கிடைக்கமாட்டார்,' என்றார்.

தொலைவிலிருந்து வளர்த்த ஒரு தந்தைக்கும் அவரை பக்தியோடு வளர்த்த ஒரு 16-வயதுடைய தாய்க்கும் மகனாக லீ குவான் யீவ் செப்ரெம்பர்-16, 1923 சிங்கப்பூரில் பிறந்தார். பிருத்தானியக் காலனித்துவத்தினதும் பூர்வீக மலாய் இனத்தினதும் கலாச்சாரத்தை உள்வாங்கிய அவரது குடும்பம், அவரது பிறப்புக் காலத்துக்கு அரை நூற்றாண்டுக்கு மேலான காலனித்துவத்தில் வாழ்ந்திருந்தது.

மலேசியாவின் பகுதியாக சிங்கப்பூர் இருந்தபோது, பல்லினத்துவம் (multiracialism) குறித்து ஓங்கிக் குரலெழுப்பிய லீ குவானை நம்பிய மலாய் அரசியல்வாதிகளுக்கு, லீ குவானின் சமத்துவ சமுதாயத்தின் (egalitarian society) மேலான நம்பிக்கை அவர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியது. எனினும், அந்த சமத்துவ சமுதாயம் சுதந்திர சிங்கப்பூரில் பெருமையோடு போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. 

இன்று சிங்கப்பூரின் சனத்தொகை 5.5 மில்லியனாக இருக்கையில் அவற்றில் கிட்டத்தட்ட 40 வீதம் வெளிநாட்டவர்களாவர். குடிமக்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று வீதம் சீனர்களாவர். ஆனால், பெரும்பான்மையினர் நாட்டின் சிறுபான்மையினர் மீது தமது கலாச்சாரத்தைத் திணிக்கமுடியாதிருப்பதை உறுதிசெய்வதற்கு லீ குவான் யீவ் வழிவகை செய்தார். 

சிங்கப்பூரின் பல்தேசிய இன அடையாளத்தின் பெயரில் சீனர்களின் இனவாதத்துக்கு எதிராக லீ குவான் போராடிய காலத்தில் லீ "வாழைப்பழம்" என விவரிக்கப்பட்டார் – வெளிப்புறம் மஞ்சளும் உட்புறம் வெள்ளையும். 

தமிழ், ஆங்கிலம், மண்டரின் மற்றும் மலாய் ஆகிய தேசிய மொழிகளை சிங்கப்பூரில் அரச மொழியாக அங்கீகரித்தார். எல்லா இனக் குழுமங்களின் மத விடுமுறைகள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகின்றன. உள்ளூர் மொழிச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிச் 'சானல்கள்' என்பவற்றுக்கு அந்த அரசாங்கத்தால் நிதி உதவி வழங்கப்படுகிறது. 

லீ குவானுடைய இலக்கு ஆனது, பழைய நாட்டுடனான பிணைப்புக்களைத் தாண்டி, சிங்கப்பூரியன் என்ற அடையாளத்தை உருவாக்குவதாக இருந்தது. லீ குவானின் வாழ்க்கை, நவீன கிழக்காசிய வரலாற்றில் ஒரு நீண்ட தடத்தைப் பதித்துள்ளது:

காலனித்துவத்தின் இறுதிச் சுவடுகள்; செல்வச் செழிப்பின் வருகை; சனநாயகத்தின் அறிமுகம்; உலகமயத்தின் பரவல்; யப்பானின் சரிவு மற்றும் சீனாவின் எழுச்சி; அத்துடன், தற்போது உலகப் போக்கின் தேசியவாதத்திலிருந்து பின்வாங்கல் என உலகின் மிக நீண்ட வரலாற்று ஓட்டத்தில் அவர் பயணித்துள்ளார். 

உலகளாவிய ஆட்டத்துக்கு அவர் வாழ்ந்த சிங்கப்பூர் என்னும் மேடை மிகச் சிறிய தேசம் என்பதால், அவர் மாற்றத்தின் மிகுந்த சிற்பியாக இல்லாவிடினும், தேசத்தை கட்டமைப்பதில் இருந்து பூகோள அரசியல், விடுதலைப் போராட்டங்கள், பயங்கரவாதம் என உலகப் போக்கின் ஒவ்வொன்றையும் மிக ஆழமாக அவதானித்தவர். 

ஆறு தசாப்தங்களுக்கும் மேலான அவரது பொது வாழ்க்கையில் லீ குவான் யீவ் தனது சொந்த மக்களுக்கு மட்டும் போதனைகளை, கடிந்துரைப்புக்களை, அறிவுரைகளை வழங்காது, ஏனைய நாடுகளுக்கும் நாட்டுத் தலைவர்களுக்கும் அவர் தனது மதியுரையையும் எதிர்வுகூறல்களையும் வழங்கினார்.

சிங்கப்பூர் உண்மையிலே அது அவரது நாடு: அதை நிறுவிய தந்தையாக, அதன் பிரதமராக (1959-90), அதன் மூத்த மந்திரியாக (1990-2004), அதன் அமைச்சர்களின் மதியுரைஞராக (2004-2011) எனச் சேவையாற்றியிருந்தார். லீ தனது நினைவுக் குறிப்புக்கள், சிந்தனைகள், உலகப் பார்வைகளை ஏழிற்கும் மேற்பட்ட நூல்களில் எழுதி வெளியிட்டார். 

"மூன்றாம் உலக நாடுகளில் இருந்து முதல்தரத்துக்கு: சிங்கப்பூரின் கதை" என்ற அவரது நூலுக்கான ஒரு திறனாய்வில், "ஏனைய தலைவர்களும் நாடுகளை மறுசீரமைத்துள்ளனர் — துருக்கியில் கேமல் அத்தாதூர்க், ரசியாவில் லெனின், சீனாவில் டெங்க் கியோப்பிங்க் — ஆனால், லீ குவான் யீவைக் காட்டிலும் தனது மக்களிடத்தில் ஒரு ஆழமான உணர்வுப்பதிப்பை ஒருவரும் விட்டுச்செல்லவில்லை," எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

சிங்கப்பூரின் எதிர்காலத் தலைவர்கள், தற்போது அந்த நாடு அனுபவிக்கின்ற அமைதியையும் சுபீட்சத்தையும் வழங்குவார்களா என்பதில் லீ குவான் அக்கறை கொண்டிருந்தார்.

மேலும், ஆசியாவின் இரண்டு அரக்கர்களான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வளர்ந்துவரும் மூலோபாய அவநம்பிக்கைக்கு மத்தியில் சிங்கப்பூர் பிழிந்தெடுக்கப்படலாம் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது.

உலகம் முழுவதுமுள்ள தலைவர்களுக்கு லீ குவானுடைய பார்வைகள் தேவைப்பட்டன. மூலோபாய மேதை ஹென்றி கிஸ்ஸிங்கருடைய (Henry Kissinger) கூற்றில் தெரிவிப்பதானால், "இரண்டு தலைமுறையைச் சேர்ந்த அமெரிக்க யனாதிபதிகள் லீ குவான் யீவ் உடைய மதியுரையால் நன்மை பெற்றிருந்தார்கள். 

சீனாவின் முன்னாள் தலைவரான டெங்க் கியோப்பிங்க் மற்றும் இந்தியாவின் "கிழக்கு நோக்கிய கொள்கை"யை (‘Look East policy’) வழிநடாத்தும் பிரதமர்கள் ஆகியோரது சிந்தனைகளில் லீ குவான் யீவ் செல்வாக்குச் செலுத்தியிருப்பதாக அறியப்படுகிறது. 

தற்போதைய சீன அதிபர் ஹி ஜின்பிங்க், "லீ குவானின் மாதிரியை கற்பதற்காக சிங்கப்பூருக்குச் சென்ற பல பத்தாயிரக்கணக்கான சீன அதிகாரிகளாலே சீனாவின் நவீனமயமாக்கல் செயற்றிட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளன," என அவரே தெரிவித்துள்ளார். 

லீ குவான் 30 தடவைகளுக்கும் மேல் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் சென்று, மாவோ சேதுங் இல் இருந்து ஹி ஜின்பிங்க் வரையான தலைவர்களைச்
சந்தித்து மதியுரை வழங்கியுள்ளார். சீனா மீது லீ குவானுடைய செல்வாக்கு இருந்துவந்த நிலையில், மேற்கத்திய தலைவர்களும் சீனாவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மதியுரையைப் பெறுவதற்காக அவரிடம் சென்றுள்ளார்கள். 

ஹென்றி கிஸ்ஸிங்கரில் இருந்து ரொனி பிளேயர் வரைக்கும் லீ குவான் பல தசாப்தங்களாக அரசியல் தலைவர்களுக்கு மதியுரை வழங்கியுள்ளார். 2009இல் சிங்கப்பூருக்குச் சென்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா லீ குவானிடம் அமெரிக்காவின் "ஆசிய அச்சு" குறித்து மதியுரை பெற்றிருந்தார்.

லீ குவானைப் பாராட்டி அமெரிக்க யனாதிபதி பராக் ஒபாமா தெரிவிக்கையில், "ஆசியா, பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரம் என்பவற்றின் மீதான அவரது நுண்ணறிவு, உலகெங்குமுள்ள பலரின் சிந்தனைகளை வடிவமைத்துள்ளது," என்றார். 

"ஆசியப் பசுபிக்கிற்கான அமெரிக்காவின் மீள் சமநிலைக் கொள்கையை மறுசீரமைப்பதற்குத் தனக்கு உதவியதில் லீ குவான் மிகப்பெரிய முக்கியத்துவம் வகித்துள்ளார்," என ஒபாமா தெரிவித்திருந்தார்.

கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு தலைவர்களையும் சந்திப்பதற்கான வாய்ப்பு கிஸ்ஸிங்கருக்கு இருந்தது. "கிரான்ட் மாஸ்ரர்" என்ற நூலுக்கான முகவுரையில், "அவர் மிக அதிகம் கற்றுக்கொண்ட ஒருவர் லீ குவான் யீவ்," எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த முகவுரையில், "தனித்துவமான மூலோபாய அறிவுஜீவி" என லீ குவானை கிஸ்ஸிங்கர் போற்றுகிறார். "ஒரு அமைதியான உலகின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் அவரது கருத்துக்கள் அமெரிக்காவுக்கு தவிர்க்கமுடியாத பங்களிப்பாக அமைந்திருந்தன," என கிஸ்ஸிங்கர் தெரிவித்துள்ளார். 

பலர் அவதானித்தது போல் லீ குவானால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்தது. உண்மையில், சிங்கப்பூரில் ஒரு எதிர்காலத்தையே அவர் கட்டியுள்ளார். சுதந்திரச் சந்தைக்கான வெற்றிகரமான சீனத் தலைவர்களின் விரைவான பாய்ச்சலுக்கும், நிக்சனிலிருந்து ஒவ்வொரு அமெரிக்க யனாதிபதிக்கும் அறிவுரைவழங்கும் வழிகாட்டியாக இருந்த லீ குவானுடைய மதியுரை எதிர்காலத்தை வடிவமைத்தது. 

தேசத்தைக் கட்டியெழுப்பக் கூடியவர்கள் எனக் கருதப்பட்டவர்களான இனப்படுகொலையால் சூறையாடப்பட்ட ருவாண்டாவின் போல் கெகமி
என்பவரிலிருந்து சோவியத் யூனியனுக்குப் பிந்தைய கஸகஸ்தானின் நுர்சுல்தான் நஷார்பயேவ், மொங்கோலியாவின் திஸாகியாகியின் எல்பெக்டோர்ஜி வரை வெறுமனே அவருடைய எழுத்துக்களைப் படித்தது மட்டுமன்றி, பல தடவைகள் அடிக்கடி சிங்கப்பூரின் ஞானியிடம் வழிகாட்டலுக்காக நாடியுள்ளார்கள்.

"லீ குவான் யீவ்: சிறந்த மேதையின் சீனா, அமெரிக்கா மற்றும் உலகம் குறித்த நுண்ணறிவு" என்ற நூலின் ஆசிரியரான கிரகம் அல்லிசன் என்பவர் லீ குவானை நேர்கண்டபோது, சீனாவின் அண்மைய தலைவர்கள் எதிர்கால ஆசியாவில் அமெரிக்காவை முதற்தர வல்லரசிலிருந்து மாற்றியமைப்பதில் தீவிரமாக உள்ளார்களா எனக் கேட்டதற்கு, அவர் கூறிய விடை: 

"நிச்சியமாகத் தீவிரமாக உள்ளார்கள். ஆசியாவில் முதற்தர வல்லரசாக இருப்பதற்கு எப்படி அவர்களால் ஆசைப்படாமல் இருக்கமுடியும்?" எனப் பதிலளித்துள்ளார். சீனாவுடைய எழுச்சியை அமெரிக்கா தடுத்துநிறுத்துமா என்று கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்:

"சீனாவின் எழுச்சியைத் தடுத்துநிறுத்த முடியாது. எப்போதும் அமெரிக்காவின் நிலைக்குச் சவால்விடுக்கப் போதிய பெரிய நாடு இல்லாதிருந்துவந்த அமெரிக்காவுக்கு, முற்றிலும் புதுமையாக இருக்கக்கூடிய, ஒரு மிகப்பெரிய சீனாவுடன்தான் வாழவேண்டி இருக்கும்." என்றார். 

ஆனால், சீனாவின் விடயத்தில் உலக வரலாற்றிலே சீனாதான் மிகப்பெரிய ஆட்டக்காரன், எனப் பலதடவை அவர் கூறியுள்ளார்.

விசாலமான ஞானம், இராசதந்திரம், தொலைநோக்கிப் பார்க்கும் திறன், பூகோள அரசியல் மற்றும் மூலோபாயம் ஆகியவற்றில் கடந்த அரை நூற்றாண்டின் சிறந்த மேதையான லீ குவான் யீவ், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்துத் தமிழர்களுக்கு உரிமைகள்
வழங்கப்படவேண்டும் என்பதை எப்போதும் வலியுறித்திவந்தார். 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.பன்னீர்ச்செல்வம் மறைந்த லீ குவான் யீவ் இற்கான தனது இரங்கல் செய்தியில், "உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டனர்," என்றார். முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிஞர் அண்ணாத்துரை 1965இல் சிங்கப்பூர் சென்றிருந்தவேளை, அங்கு அவர் ஆற்றிய உரையை லீ குவான் மிகவும் ரசித்திருந்தார். 

உலகில் எத்தனையோ நாடுகள் இருக்கையில், 2003 சமாதானகாலத்தில் நோர்வேயின் ஏற்பாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்கள நாயகனும் வரலாற்று நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு லீ குவானுடைய சிங்கப்பூர் நாட்டிலேதான் இதயச் சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.

தமிழர்களை மேலாதிக்கம் செய்யும் சிங்களவர்களை விமர்சிப்பதில் லீ குவான் சிறிதும் தயக்கம் காட்டியதில்லை. "ஆதிக்க இனத்தின் இராணுவ பலம் என்னவாக இருந்தாலும், அடக்குமுறையில் இருந்து சுதந்திரத்துக்கும் தன்மானத்துக்குமான தமிழர்களுடைய தாகம் ஒருபோதும் தணிந்துவிடாது," என்று பல சந்தர்ப்பங்களில் லீ குவான் கூறியுள்ளார். 

"லீ குவான் யீவ் உடனான கலந்துரையாடல்கள்: சிங்கப்பூர் குடிமக்கள்: ஒரு நாட்டை எப்படிக் கட்டுவது?" என்ற நூலின் எழுத்தாளரான ரொம் பிளேட், லீ குவானை நேர்கண்ட போது அவர் இனவாத சிங்கள தேசம் குறித்தும் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் வெடித்ததன் அவசியம் குறித்தும் மிகத் தெளிவாக சர்வதேசத்துக்கு உண்மைகளைப் பதிவுசெய்துள்ளார். 

தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் இந்த உலகிற்கு, இந்த உலகமே அறிவுரைக்காக நாடும் ஒரு மேதையிடம், ஆசியா கண்டது இனஅழிப்புத் தானா என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் : “That's right.”
"ஆம். அது இனஅழிப்புத்தான்," என்றார்.

கடந்த 2013 இல் வெளியிடப்பட்ட லீ குவானின் இறுதி நூலான "ஒற்றை மனிதனின் உலகப் பார்வை" இல் அவர் தான் செய்த கடமைகளை மீட்டுள்ளதோடு, பின்வருமாறு கூறி அந்த நூலை நிறைவுசெய்துள்ளார்: 

"என்னைப் பொறுத்தவரை, நான் என்ன செய்யவேண்டியிருந்ததோ, அதை நான் எனது ஆற்றலுக்கு எட்டியவரை செய்துள்ளேன். நான் மனநிறைவடைகிறேன்."

சிங்கப்பூரைக் கட்டுவது அவரது பேரார்வம் எனக்கூறி, அந்நாட்டின் பிரதமர் தனது தந்தையின் பின்வரும் மேற்கோளை வாசித்தார்:

"ஒரு நாளின் முடிவில் எதை நான் பெற்றேன்? ஒரு வெற்றிகரமான சிங்கப்பூரை. நான் எதை இழந்தேன்? எனது வாழ்க்கையை."
நன்றி.
- த.ஞா.கதிர்ச்செல்வன்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!