பூகோள அரசியலை நகர்த்தும் முக்கிய மையங்களாக ஆசியாவும்
பசுபிக்கும் மாறியுள்ளன. இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வட மற்றும் தென்
அமெரிக்காக்களின் மேற்குக் கரைகள் வரைக்கும் பரந்து விரிந்துசெல்லும் இந்து
சமுத்திரமும் பசுபிக்
சமுத்திரமும், கப்பல் போக்குவரத்து மற்றும் மூலோபாய ரீதியாக அதிகளவில் பிணைக்கப்
பட்டுள்ளன. உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானதை இந்த இரு சமுத்திரங்களும் கொண்டுள்ளன.
பூகோளப் பொருளாதாரத்தின் முக்கிய இயங்கிகளில் பலவற்றையும் இவை தன்னகத்தே கொண்டுள்ளன.
அமெரிக்காவின் முக்கிய பல கூட்டு நாடுகளின் தாயகமும் அதுவே. அதேவேளை, அமெரிக்காவின் பரம எதிரி நாடுகளும் அங்கேதான் உள்ளன. இந்தப் பின்னணியில்
தான் இந்த நூற்றாண்டின் பூகோள அரசியலை நகர்த்திச் செல்லும் தளங்களாக ஆசியாவும்
பசுபிக்கும் உக்கிரம் பெறுகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவை
விஞ்சக்கூடிய பலம்பெற்றுவரும் சீனாவின் புதிய பொருளாதார வளர்ச்சித் திட்ட நகர்வுகள் அமெரிக்காவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அச்சம், நாளுக்கு நாள் - சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை விஞ்சிவிடுமோ என்ற
வகையில் – மேலும் அதிகரித்துச் செல்கின்றது. அந்த அச்சத்தைக் குறிப்பதற்கு பூகோள
அரசியல் அரங்கில் “துசிடிடிசுவின் பொறி” என்னும் ஒரு சொல் பயன்படுத்தப் படுகின்றது.
அதாவது, ஏற்கெனவே பலம்பெற்று மேலாதிக்கத்தைப் பெற்றிருந்த ஓர் அரசுக்கு, புதிதாக எழுச்சிபெற்று மேலாதிக்க வலுவைப் பெற்றுவந்த மற்றொரு அரசால் அச்சம் ஏற்பட்டதால் பெலொப்பொனேசியன் போர் ஏற்படக்
காரணமாக அமைந்த நிகழ்வைக்
குறிப்பிட்டு, அதே அச்சம் இப்போது
அமெரிக்காவுக்கு இருப்பதாகவும், இதனால் இரு நாடுகளுக்கும்
இடையே போர் மூள அந்த அச்சம் வழிவகுக்கலாம் எனவும் பேசப்படுகின்றது.
அண்மையில், “அமெரிக்கப்
படைத்துறைப் போர்க் கல்லூரியின் மூலோபாய ஆய்வுகள் நிலையம்” அவ்வாறான போரைத்தவிர்ப்பது குறித்த அல்லது துசிடிடிசுவின் பொறியைத் தவிர்ப்பது குறித்த ஒரு நீண்ட
ஆய்வுகள் கொண்ட ஒரு தொகுதியை வெளியிட்டது. அதில், ஆசியாவிலும்
பசுபிக்கிலும் (Asia-Pacific) மீள்வலுச் சமநிலைக்கு (the Rebalance) அப்பாற்பட்டு போட்டிபோடக்கூடிய அமெரிக்காவின்
மூலோபாயம், கொள்கை என்பன
உள்ளடங்கியுள்ளன; அத்துடன், அமெரிக்கப்
படைத்துறை மற்றும் ஈரூடகப் படைத்துறையைச் சேர்ந்த கேணல் தர அதிகாரிகள் (Army
and Marine colonels), அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள், வெளிநாட்டு
இராசதந்திரிகள் (Foreign Service Officer) ஆகியோர் எழுதியுள்ள
நீண்ட கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பும் அந்தத் தொகுதி உள்ளடக்கியுள்ளது. மேலும், அமெரிக்கப் போர்க் கல்லூரியின்
பேராசிரியர்கள் முன்மொழிந்த துசிடிடிசுவின் பொறியைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகள்
என்பனவும் அந்த ஆய்வுகளின் தொகுதி உள்ளடக்கியுள்ளது.
அந்த ஆய்வுகளை
வழங்கியோர், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினுடைய ஆசியாவும்
பசுபிக்கிற்குமான “மீள்வலுச் சமநிலை” அல்லது “அச்சு” எனப்படும் கொள்கைகளோடு
உடன்படுகின்றார்கள்; ஆனால், அவற்றை அமுல்படுத்துவதில் காணப்பட்ட அவற்றின் குறைபாடுகளையும் அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளார்கள். அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் தவிர்க்கமுடியாத
எழுச்சியை அணுகக்கூடிய ஓர் ஒத்திசைவான மூலோபாயக் குறைபாடு ஒபாமா நிருவாகத்திடம்
இருந்ததாக அவர்கள் குறைகூறியுள்ளார்கள். அதனை - அந்த “மீள்வலுச் சமநிலையை” - திறம்புவின் நிருவாகம்
இராசதந்திர முறையில், பொருளாதார முறையில், கலாச்சார மற்றும் படைத்துறை முறையில் அதிக விளைதிறன்மிக்க
வகையில் அமுல்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
சீனாவின் எழுச்சியை அமெரிக்கா மூலோபாய
முறையில் இடமளிக்கின்ற வரைக்கும் துசிடிடிசுவின் பொறியைத் தவிர்க்க முடியாது
என்பதில்லை – தவிர்க்கலாம் – என அவர்கள் நம்புகின்றார்கள். அதாவது, சீனாவின் எழுச்சியை அமெரிக்கா ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில்
அல்ல; மாறாக, “அமைதியான, நிலையான, செழிப்பான ஒரு சீனாவின்” எழுச்சியை வரவேற்பது என்று பொருள்படும் என அவர்கள்
விளக்கியுள்ளார்கள்.
அந்த
ஆய்வுகளை வழங்கியுள்ளவர்களுள் பெரும்பாலானோர் உயர் மட்ட படைத்துறை அதிகாரிகள்
என்றபோதிலும், அந்த ஆய்வுகளில் “கழுகுப்பார்வை” பற்றாக்குறையான தன்மை இருப்பதாக
விமர்சிக்கப்படுகிறது.
ஒரேயொரு
கட்டுரை மட்டும், “ஆசியாவினதும் பசுபிக்கினதும் பிராந்திய மேலாதிக்க சக்தியாக உருவாகுவதற்கு
சீனா தீர்மானிக்கின்றது எனவும், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவை நீக்குவதற்கு படிப்படியாக விரிவாதிக்க மூலோபாயத்தை
சீனா பின்பற்றி வருவதாகவும்,” குறிப்பிட்டுள்ளது. அந்த ஆய்வுகளை வழங்கியவர்களுள் இருவர், “சீனாவின் படைத்துறை வளர்ச்சியை
முறியடிக்கும் வகையிலான ஒரு சமநிலையைப் பேணுவதற்கு யப்பான், இந்தியா ஆகியவற்றோடு அமெரிக்கப்
பாதுகாப்பு உறவுகளை வளர்த்து, பலப்படுத்த வேண்டியது அவசியம்,” என வலியுறுத்தியுள்ளார்கள்.
தென் சீனக்
கடலில் சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்தோ, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவில்
சீனாவின் தரை-கடல் வழிப் பொருளாதார முன்னெடுப்பு (ONE BELT AND ONE ROAD Initiatives) வாயிலாக
அதன் செல்வாக்கை விரிவாக்கிக் கொள்வது குறித்தோ அல்லது இந்து சமுத்திரத்துக்கும்
அதற்கு அப்பாலும் அதன் அதிகரித்த கடல் நடமாட்டம் குறித்தோ அமெரிக்கா கவலைப்படத்
தேவையில்லை அல்லது அவசரப்படத் தேவையில்லை என அந்த
ஆய்வுகளின் பெரும்பாலான பகுதி குறிப்பிடுகின்றது. மாறாக, சீனாவோடு கூட்டிணைந்து – தென் சீனக்
கடலிலும் - அமெரிக்கா செயற்பட வேண்டியதன்
அவசியத்தை அந்த ஆய்வுகளில் பலவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளை
வழங்கியவர்களுள் ஒருவர், “சீனா தன்னை முற்றுகைக்குள் அடக்கப்பட்டிருப்பதை அனுமதிக்காது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதே வாதத்தைத்
தான் 1940களுக்குப் பின் “சோவியத் ஒன்றியம் தன்னை முற்றுகைக்குள் அடக்கப்படுவதை
அனுமதிக்காது,” என அமெரிக்கத் தலைவர்கள் முடிவுக்கு வந்திருந்தார்கள். எனினும், சோவியத் ஒன்றியம் முற்றுகைக்குள் அடக்கப்பட்டது, அவ்வாறு அமெரிக்கா முன்னுணர்ந்து
செயற்படவில்லை எனில், இன்று அமெரிக்காவின் நிலை கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.
அமெரிக்காவும்
சீனாவும் ‘இணையவெளிக் களத்தில்’ (cyber domain) கூட்டிணைந்து செயற்பட வேண்டுமெனவும், இந்த விடயத்தை மறுக்கும் பட்சத்தில் அந்தப்
பிராந்தியங்களில் பெரு வல்லாதிக்கப் போட்டி ஏற்படும் அல்லது ஏற்படுத்த வேண்டும் என
மற்றுமொரு கட்டுரை பரிந்துரைக்கின்றது. அந்த ஆய்வுகளை வழங்கிய பலர், சீனாவின் எழுச்சியைக் கையாள்வதில் “மென்
வலுவை” பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள்.
அந்த
ஆய்வுகளை வழங்கியவர்களு சிலர், ஐரோப்பாவில் நேட்டோ (NATO) உருவாக்கப்பட்டது போல் ஆசியாவிலும் பசுபிக்கிலும்
அமெரிக்கா தலைமையிலான ‘பல்தரப்புப் பாதுகாப்புக் கட்டமைப்பு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்கள்; அதேவேளை, அவ்வாறான ஒரு கூட்டமைப்பில் சீனாவை இணைத்துக்கொள்ள
அமெரிக்கா அழைப்பு விடுக்கவேண்டும் எனவும் முன்மொழிந்துள்ளார்கள்.
ஆய்வுகளை
வழங்கிய ஏனையோர், அணு ஆயுதங்களும் அவற்றுக்கான ஏவுகணைத் தொகுதிகளும் வட கொரிய ஆட்சிக்கு கிடைக்க
அனுமதித்த முன்னைய அதிபர் ஒபாமாவின் கொள்கையான “மூலோபாய அமைதியை” (strategic patience) குற்றஞ்சாட்டி வட கொரிய அணுவாயுதப் பிரச்சினையை
விமர்சித்துள்ளனர்; அதேவேளை, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வட கொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க சீனாவை
அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கியுள்ளார்கள்.
அந்த ஆய்வுகளின் தொகுதியில் முக்கிய ஒரு விடயம் பேசப்படவில்லை
என நோக்கர்களால் விமர்சிக்கப்படுகின்றது. அதாவது, சீனாவை தனித்த ஒரு கட்சியே மிக நீண்ட காலமாக ஆட்சிசெய்து வருகின்றது. சீனாவின்
ஒற்றைத் தலைமையும் அதன் ஆட்சியின் தன்மையும், அது வெளிநாட்டுக் கொள்கையை அணுகுவதில் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்தும்
அந்த ஆய்வுகளை வழங்கியோர் விவாதிக்கத் தவறியுள்ளார்கள் என விமர்சிக்கப் படுகின்றது.
“அச்சம், நலன், மதிப்பு
ஆகியவற்றைக் கடந்து நாடுகள் செயற்பட வேண்டும். குறைந்தளவு சாத்தியம் இருந்தாலும் இராசதந்திரிகள்,
அமைதியையும் பாதுகாப்பையும் கடைப்பிடிப்பதற்கான கொள்கைகளை
மேம்படுத்தவதோடு, எதார்த்தத்தையும் உணர்ந்துகொள்ளக் கடமைப் பட்டவர்கள்,” என துசிடிடிசு எழுதியுள்ளார்.
துசிடிடிசுவின் பொறியைத் தவிர்ப்பதற்கு
அல்லது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான போரைத் தவிர்த்து, சீனாவை
ஏதோவொரு வகையில் மென்வலு ஊடாக அடக்குவதற்கு அமெரிக்கா மிகவும் கடுமையாக முயன்றுவருவதை
அவதானிக்க முடிகிறது. அமெரிக்கா எந்த வகையான முற்றுகையைப் போட்டாலும், சீனாவின் பலத்தையும் இராசதந்திர முன்னெடுப்புக்களையும் அதன் எழுச்சியையும்
அமெரிக்காவால் அசைக்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.
***
- த.ஞா.கதிர்ச்செல்வன்.
தொடர்புடைய இணைப்பு:
தொடர்புடைய இணைப்பு: