மே-16: பிணக்கிடங்கில் இருந்து மீண்டவரின் நினைவுப் பகிர்வு!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0


நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருந்தான். சிறிய நிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்காக மக்கள் நிரம் பிவழிந்தார்கள். நடப்பதற்குக் கூட முடியாது தள்ளுப்பட்டு ஒருவர்பின் ஒருவர் சென்றுகொண்டிருந்தோம்.

முள்ளிவாய்க்கால்போல் வட்டுவாகல் எமக்கு சாதகமாய் அமைந்திருக்கவில்லை. காடும் சேறும் சகதியுமாகவே இருந்தது. ஈரநிலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என படுத்திருந்தார்கள்.

இராணுவம் முன்னேறிவர எமது பொருட்களையும் முன்னகர்த்திக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். விடுபட்ட பொருட்கள் எடுப்பதற்கென்று மீண்டும் திரும்பிச் சென்று எடுத்துவருவதும், மீண்டும் போவதுமாக இருந்தோம்.

இரண்டு கால்களிலும் காயப்பட்டு நடக்கமாட்டாத எம் உறவொருவரை தூக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், எம்மால் அவரைத் தூக்கிச்செல்ல முடியாமலே இருந்தது. ஏனென்றால், எமது உடல்நிலை திடமாக இல்லை. காய்ஞ்ச மாடு கம்பில பட்டு விழுந்த நிலைதான் எமது நிலையும்.

அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சனநெரிசலில் பல மணிநேரப் போராட்டத்தோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டு, மீண்டும் செல்ல ஆயத்தமானோம்,

எறிகணைகள் விழ ஆரம்பித்திருந்தது. எப்படியாவது திரும்பிச்சென்று பொருட்கள் எடுத்துவரப் புறப்பட்டோம். எமக்கருகில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத்தொடங்கியன. ஓடிச்சென்று பதுங்ககழிக்குள் குதிப்பதும் ஓடுவதுமாக இருந்தோம். அவ்வாறு ஓடிச்சென்று கொண்டிருக்கும்போது எறிகணை ஒன்று எம் அருகில் விழுவதுபோல் உணர்ந்தோம்.

பெரிய ஆலமரம் ஒன்றின்கீழே 'வக்கோ' எனப்படும் இயந்திரத்தால் வெட்டப்பட்ட பெரிய கிடங்கு ஒன்று இருந்தது. சரி, அதற்குள் குதிப்போம் என்று ஓடினோம். மரத்தில் கொழுவியபடி 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் போராளி ஒருவர் படுத்திருப்பதைக் கண்டேன்.

ஓடிச்சென்று, "அண்ணா, எறிகணை வருகுது. பங்கருக்க போவம், வாங்கோ," என்று கையைப்பிடித்து இழுத்து எழுப்பினேன். அவர் எழும்பமுடியாது கிடந்தார். என்னாலும் தூக்கமுடியாமல் இருந்தது.

அதன்பின்னர்தான் பார்த்தேன், அவர் காயத்தால் 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் இறந்துகிடப்பதை. எமக்கு அருகில் எறிகணைச் சிதறுதுண்டுகள் பறந்தடித்தன. எறிகணைகளுக்குப் பயத்தில அகழிக்குள்ள குதிச்சிட்டம். குதிச்ச பிறகுதான் தெரிஞ்சது, அது பிணக்கிடங்கென்று.


போராளிகளின் உடல்கள், பொதுமக்களின் உடல்கள் என்று 15 உடல்கள் அளவில் அந்தக் கிடங்கில் இருந்தன. இலையான்கள் மொய்த்தபடி காணப்பட்டன. பாரிய காயப்பட்ட உடல்களின் இரத்தவாடை குமட்டலை ஏற்படுத்தியது.

கிடங்கிலும் இருக்கமுடியாது. வெளியிலும் வரமுடியாது. எறிகணைகள் நின்றால்மட்டுமே வரமுடியும் என்ற நிலை. எனினும் நான் கிடங்கைவிட்டு மேலே ஏறிவிட்டேன்.

மனமெல்லாம் வேதனையில் துடித்தது. இப்படியே விட்டுட்டு, இந்தக் கிடங்கைக் கூட மூடாமல் உடல்களை போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களே என்று மனம் எண்ணியது. 

இராணுவம் நெருங்கி வந்துகொண்டிருந்ததால் நாம் பொருட்கள் எடுக்கச் செல்வதைக் கைவிட்டு, திரும்பிவந்துவிட்டோம். நாம் திரும்பி வரும்போது எறிகணைகள் வெடித்து இறந்த உடல்கள் அப்படியே ஆங்காங்கே பரவிக் கிடந்தன. காயத்திற்கு மருந்துகட்டுவதற்கே ஒருவரும் இல்லை என்ற நிலை.

இது நடந்தது இறுதி நாளான மே-16 என்பதால் பாரிய காயக்காரர்கள் முறையான சிகிச்சைகள் இன்றி, இரத்தம்போயே இறந்துகொண்டிருந்தார்கள்.
எம்மவர்களைப் புதைப்பதற்குக் கூட முடியாமல் அப்படியே விட்டுட்டு வந்தோம் என்று நினைக்கும்போது மனம் வேதனையில் துடிக்கிறது.
***
குறிப்பு: முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!