இன்று, தமிழ் இனஅழிப்பின் பலியாட்களாக நூறாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளின் 9ஆவது ஆண்டை நாம் நினைவேந்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாள், தமிழின வரலாற்றிலே மிகக் குறுகிய மாதங்களில் சிறிலங்கா அரச படைகளின் அதி உச்ச சூட்டு வலுவைக் கொண்டும், திட்டமிட்ட பட்டினிச் சாவை ஏற்படுத்தியும், காயப்பட்ட மக்களுக்கான மருந்துப்பொருள் விநியோகத்தைத் தடுத்தும் 150,000 வரையான தமிழர்கள் மிகக் கொடூரமாக வதைத்துக் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் நாள்.
எமது தேசியத் தலைவரால் நிறுவப்பட்ட தமிழீழ நிழல் அரசாட்சிக்குள் சுதந்திரக் காற்றை சுவாசித்து இறுதிவரை அந்த மண்ணிலே வாழ்ந்து மடிந்த, தேசிய விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாக நின்று உயிரூட்டம் தந்த அந்த மக்களை, அந்த மக்களின் ஆன்மாக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்கின்ற ஒரு வரலாற்று நினைவு நாள் இன்று.
கடந்த
2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் 2009 ஆம் ஆண்டிலும், மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாகக் கூறி உலகத்தை ஏமாற்றிக்கொண்டு, 'போர் தவிர்ப்பு வலயம்' என்னும் ஒரு கொலைக் களப் பொறியை ஏற்படுத்தி, அங்கு எமது மக்கள் சென்று தஞ்சமடைந்ததும் அவர்கள் மிகச் சாதாரணமாகக் கொன்றொழிக்கப் பட்டார்கள்.
அவர்கள், சிங்கள தேசத்தின் கொடிய அடக்குமுறையை எதிர்த்த தமிழ் இறைமையின் பக்கம் நின்றதைத் தவிர எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவித் தமிழர்கள். மனிதகுலத்துக்கு எதிரான இந்தக் குற்றமானது மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு ஒரு குறிக்கோளுக்காகவே இழைக்கப்பட்டது.
அதாவது, தமிழீழத் தேசிய எழுச்சி உணர்வுகொண்ட தமிழ் மக்களுள் பெரும்பாலானோர் அங்குதான் இருந்தார்கள் என்ற காரணத்தால் அந்த மக்கள் குழுமத்தை அழித்தல், அந்த மக்களில் பெருந்தொகையானோரைப் படுகொலை செய்வதன் மூலம் அவர்களின் சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குதல்,
அதன்பின்னர் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் வழங்காது வரலாற்றுக்கு முற்பட்ட பூர்வீகத் தமிழர் தாயகத்தை முற்றுமுழுதாக ஆக்கிரமித்தல், அவ்வாறான தேசிய எழுச்சிகொண்ட மக்களுக்கு உடல் உளவியல் ரீதியாகப் பாரதூரமான தீங்கிழைப்பதன் வாயிலாகத் தாயகத்தை விட்டு அவர்களைப் படிப்படியாக வெளியேற்றுதல் அல்லது அடிமைப்படுத்துதல்,
பின்னர் திட்டமிட்ட மென்தீவிர இனக்கலப்பு ஊடாக காலப்போக்கில் இலங்கைத் தீவில் தமிழரின் அடையாளங்களான - மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் தேசிய வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றை - அழித்தல், தொடர்ந்து இவ்வாறாகப் பல வருடங்களுக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தீவையும் முழுமையான தனிச் சிங்கள பௌத்த தேசமாக்குதல் என்பதே அந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையான குறிக்கோள்களாகும்.
அதுவே தாயகத்தில் இன்றளவும் பல்வேறு வடிவங்களில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை வடிவங்களாக நீள்கின்றது.
இறுதிப் போரில் 70,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா.வின் அறிக்கை குறிப்பிடுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே உள்ளக இடம்பெயர்ந்தோர் விபரம் 360,000 சனத்தொகை என ஒர் அரச அதிகாரி பதிவுசெய்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னிப் பெருநிலப்பரப்பானது முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஏனைய கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலிருந்தும் கணிசமானளவு மக்கள் இடம்பெயர்ந்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்கள்.
ஒக்ரோபர் 2008 இல், வன்னி மக்களின் மொத்த சனத்தொகை 429,000 என்ற புள்ளிவிபரத்தை மற்றுமொரு அரச கிராம சேவகர் பதிவுசெய்திருந்தார். அதேவேளை, அங்கே 350,000 சனத்தொகை இருந்ததாக ஐ.நா. நம்பியதாக ஐ.நா.வின் ஓர் அறிக்கை தெரிவித்திருந்தது. ஆனால், ஐ.நா.வின் உள்ளகப் பொது அறிக்கைகள் 150,000 இலிருந்து 350,000 வரையான சனத்தொகையென ஒரு குறைவான மாறுபட்ட விபரத்தைத் தெரிவித்தன. இவையனைத்தையும் மறைத்த சிறிலங்கா அரசு அங்கே போர் தவிர்ப்பு வலயத்துள் 70,000 சனத்தொகைதான் இருந்தனர் என உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருந்த வேளை, இறுதிப் போருக்குப் பின்பு 280,000 பொதுமக்கள் படையினரிடம் சரணடைந்திருந்தனர் என்ற உண்மையானது, அங்கே சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட பொதுமக்களைப் படுகொலை செய்யவேண்டுமென்ற உத்தேசத்தை தெளிவாகக் காட்டி நிற்கின்றது.
ஆனால், எம்மைப் பொறுத்தவரை 2006 இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் விடுதலைப் புலிகளை உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 500,000 சனத்தொகை இருந்ததாக அன்று பேசப்பட்டது. ஒரு ஐயப்பாட்டில் உண்மையான சனத்தொகை மதிப்பீட்டை சில தரப்புக்கள் குறைத்துப் பதிவிட்டுள்ள நிலை ஒருபுறமிருக்க, ஐ.நா.வின் குறைவான சனத்தொகை மதிப்பீடு என்பது சர்வதேசம் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறையின்மையை தெளிவாகச் சுட்டிநிற்கின்றது.
ஏனெனில் 2006 இல் ஆரம்பித்து 2009 வரையான 3 வருடகால தொடர்ச்சியான நீண்டகாலப் போரின்போது அங்கே போரில் சிக்கித்தவித்த மக்களின் ஒரு சரியான சனத்தொகையைக் கூட இந்த உலகம் கணக்கிடத் தவறியிருப்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
மாறாக, வன்னியில் நிலைகொண்டிருந்த ஐ.நா. மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தமிழ்மக்களைப் படுகொலைப் பொறிக்குள் தவிக்கவிட்டு அங்கிருந்து வெளியேறிய ஒரு வரலாற்றையும் நாம் பார்க்கின்றோம். இதன் விழைவாக அங்கே 150,000 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமற் போயினர் என்பதே சரியான ஒரு மதிப்பீடாக தமிழ் மக்களால் நம்பப்படுகின்றது.
இவ்வாறு உலகத்தால் கைவிடப்பட்டு, சிறிலங்கா இனஅழிப்பு அரசின் கொடுமைகளுக்கு அஞ்சி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று தஞ்சமடைந்த அந்த மக்களைப் பாதுகாப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னேறிவரும் இனஅழிப்பு சிங்களப் படையை எதிர்த்து அந்த மக்களுக்கான கவசமாக, பாதுகாப்பு அரணாக நின்று தமது சக்திக்கு உட்பட்டு இறுதிவரை போராடினார்கள் என்பதே உண்மையான பதிவு.
அனைத்துலக நாடுகளின் சகல ஒத்துளைப்புகளோடு, தனது அரசாட்சிக்குட்பட்ட அனைத்துக் கூட்டுவளங்களையும் ஒன்றுதிரட்டி சுயநல அரசியலுக்காக ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கோடு எமது தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்து முன்னேறிய சிங்களத்தின் வரலாறுகாணாத தமிழின அழிப்புப் போரை எதிர்த்து, எந்த நாட்டின் ஆதரவுமற்று தமிழீழ விடுதலைப் புலிகள் எமது மக்களின் பலத்தோடு மட்டுமே தனித்து நின்று களமாடினார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்து இன்றுடன் 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தமிழரின் பாதுகாப்பும் இறைமையும் கேள்விக்குறியாகவே தொடர்கின்ற அவலத்தைப் பார்க்கின்றோம்.
நாட்டின் இறைமையுள்ள அரசாங்கம் என்ற அதிகார அலகுகளுக்கு ஊடாக, ஒரு இனத்தை அழித்தொழிப்பதற்காக நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்கு வேண்டுமான சட்டங்களை உருவாக்கி, தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை அதன் சட்டங்கள் ஊடாக நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் பழிவாங்கல் செயற்பாட்டை பன்னாட்டு அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சட்டங்கள் வாயிலாக குற்றங்களைப் புரிகின்ற இனஅழிப்புச் சிங்கள இனவாதிகள் காப்பற்றப்பட்டு, அப்பாவித் தமிழர்கள் தண்டிக்கப் படுகின்றார்கள்.
மே - 18 என்பது 'தமிழ் இனப்படுகொலையின்' ஒரு குறியீட்டு நாள். தமிழர் இனப்படுகொலை ஒரே நாளில் நிகழ்த்தப்பட்டதல்ல என்பது யாவருக்கும் வெளிச்சம். அது கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் 60 ஆண்டுகளாக நடைபெற்று, முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தில் அதன் உச்சத்தைத் தொட்டு, இன்றளவும் ஒன்பது ஆண்டுகளாக ஒரு முடிவற்றுத் தொடர்ச்சியாக நீடித்துச் செல்கிறது.
மேலும், சிங்களப் பேரினவாத அரசுகள் குற்றத்தை முற்றுமுழுதாக மறுத்துவரும் அதன் கொள்கை தொடரும்வரை, ஓர் இனக்குழுமத்தை அழித்த நாளை தமது வெற்றி நாளாகக் கொண்டாடுகின்றவரை தமிழினம் மீதான இனப்படுகொலையின் உயிர்ப்பு தொடரவே செய்யும்.
ஒரு குற்றத்தை மறைப்பதே அதன் அசல் குற்றத்தின் நேரடித் தொடர்ச்சி. ஆகவே, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு ஒரு வலுவான பன்னாட்டு விசாரணைப் பொறிமுறைகளை உருவாக்கி, குற்றத்தை கண்டறிந்து அதற்கான தண்டனைகளை வழங்குவதோடு, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்குமாறு தமிழ்மக்கள் அனைத்துலக அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்திவர வேண்டும்.
அதேவேளை, தமிழர்களது சுதந்திரத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது இலக்கை அடையும்வரை ஒருபோதும் தணியாது என்பதையும் தமிழ்மக்கள் தொடர்ந்து பன்னாட்டு அரசுகளுக்கு உணர்த்த வேண்டும்.
இந்நேரத்தில், இதுவரை காலமும் தமிழ் இனப்படுகொலைக்குப் பலியான பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை நாம் சிரந்தாழ்ந்து வணக்கம் செலுத்துவோம்.
தமிழீழத்துக்காகவே வாழ்ந்து மடிந்த எமது மக்களுக்கும் மாவீரர்களுக்கும், தமிழீழத்தை விடுதலைபெறச் செய்து, எஞ்சிய எமது அடுத்த தலைமுறைக்கு நின்மதியான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதுதான் நாம் செய்யும் உண்மையான கடமையாக இருக்கும்.
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'