வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன்.
மூலம்:- புவியரசன்.
2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்பின்னர் இறுதியாக எனது போர்க்கால ஊடகப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம். வழமை போலவே மக்கள் மீதான தாக்குதல்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் வீடியோ எடுத்துவிட்டு, அதனை வெளியில் அனுப்புவதற்காக முகாமுக்குச் செல்கிறேன்.
மக்கள் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலம் எவ்வாறு தமது பதுங்கு குழிகளை எப்படி இடம் மாற்றினார்களோ அதே போலத்தான் விடுதலைப்புலிகளும் தமது இடங்களை மாற்ற வேண்டிய நிலை.
ஒவ்வொரு நாளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 13ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைக் களஞ்சிய வெடி விபத்தில் என்னுடைய வீடும் அதில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்களும் எரிந்துபோயின. அதை இந்த இடதில் சொல்வது விடயத்தை நீட்டிச்செல்லும் என்பதால் அதனை இதில் சொல்லவில்லை.
எனது வீடு எரிந்ததால் எனக்கு மாற்றி உடுத்துவதற்கு எந்த உடையும் இல்லை. ஒரு சறம் மட்டுமே மிச்சம். அந்த சாறத்துடன் முகாமுக்கு செல்கிறேன். முகாமில் (புலிகளின் குரல் பொறுப்பாளர்) யவான் அண்ணர் என்னைப் பார்த்ததும், "என்னடா காயப்பட்டிட்டியோ?.. என்ன?.." என்றார்.
நான், "இல்லை அண்ணை, என்ர வீடு நேற்று எரிஞ்சு போச்சு," என்றேன்.
"அப்ப வீட்ட யாருக்கும் பிரச்சினையோ? அம்மா எப்படி இருக்கிறா?"
"இல்லை அண்ணை, ஆட்களுக்கு ஒண்டும் பிரச்சினை இல்லை. வீடு தான் எரிஞ்சுபோச்சு..."
என்றவாறு நான் வேலையை கவனிக்கத் தொடங்கினேன். அப்போது யவான் அண்ணர் அருகிலிருந்த புலித்தேவன் அண்ணர் அவர்களைப்பார்த்து,
"புலித்தேவன், புவியரசனுக்கு ஏதாவது ஒழுங்கு செய்து கொடுங்கோ," என்கிறார்.
அவரும் அதற்கு, "சரி, பார்ப்போம்,"
என்று தலை அசைக்க... என்னுடைய இறுதி நாள் வேலையை தொடங்குகிறேன்...
***
குறிப்பு:- திரு.சிவகரனின் (Siva Karan) முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.