பன்னிரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் இன்று (23.08.2025) சனிக்கிழமை யாழ். செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து, மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமான குறித்த நிகழ்வில், நிகழ்வின் வடக்கின் ஏற்பாட்டுக்குழு இணைப்பாளர் திருமதி. ஜெயச்சித்திரா அவர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து கையொப்பங்கள் பெறும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும் இந்தக் கையொப்பப் போராட்டத்தினூடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்பதுடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்தப் போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத் தயார்ப்படுத்தலின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன: