சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துத் தமிழீழத்தைச் சுற்றி எங்கும் பல்வேறு முனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய மறிப்புச் சமர்களில் 2006 நடுப் பகுதியில் இருந்து 2009 மே மாதம் வரை ஈடுபட்டுவந்தனர்.
தமிழீழத்தின் நிலப்பரப்பைச் சுற்றி மறிப்புச் சமரில் ஈடுபடுவதற்காகப் பல்வேறு போர்முனைகள் திறக்கப்பட்டன. அவை: மன்னார் கட்டளைப் பணியகம். வவுனியா கட்டளைப் பணியகம். மணலாறு கட்டளைப் பணியகம். வடபோர்முனைக் கட்டளைப் பணியகம். பூநகரிக் கட்டளைப் பணியகம் என்பன.
இவற்றுடன் பல சிறப்பு நடவடிக்கை அணிகள், பிரிவுகள், படையணிகள் என்பன செயற்பட்டன.
தென் தமிழீழத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக, நாள்தோறும், 24 மணித்தியாலமும் தமிழீழத்தின் முனைகள் எங்கும் போர்ககள் நீண்டு விரிந்தன. அவ்வாறு நீண்ட பெரும் தமிழீழப் போரை மறித்துத் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பெருஞ் சமராடினார்கள்.
அவ்வாறான சமர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வு மையம் தொடர்ச்சியாக அந்தந்தக் களமுனைகளுக்குச் சென்று, சமராய்வுப் பணிகளில் ஈடுபட்டு, அந்த ஆய்வுகளை உடனுக்குடன் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அனுப்பி வந்தது.
இந்நிலையில், சமர்களில் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளை மதிப்பளிக்கும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாராய்வு மையம் "சிறப்புச் செயற்பாட்டிற்கான சான்றிதழ்"களை வழங்கிவந்தது.
இந்தச் சான்றிதழ் 'தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பாராட்டுதலைத் தெரிவித்து' வழங்கப்பட்டது. குறித்த சான்றிதழ்களைப் பெறும் போராளிகள் அதன்மூலம் தேசியத் தலைவரின் பாராட்டுதலைப் பெற்றார்கள்.
இந்தப் பதிவோடு இணைக்கப்பட்டுள்ள குறித்த சான்றிதழ்ப் படம், போர் நடைபெற்ற பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பன்னாட்டுப் பிரதிநிதிகளால் முள்ளிவாய்க்கால் பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றுக்குள் இருந்து (மார்ச்சு-16, 2018) மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மூலப்பதிவு:- சமராய்வு இணையம்.
***