தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், எந்தவிதமான படைக்கலங்களெனினும் அவற்றின் இயங்குநிலைகள் தடைப்பட்டுப் போகும் வேளைகளில் அவற்றை மறுசீரமைத்து, பூச்சியவழுத் திருத்தம் செய்து, நேர்த்தியான சுடுநிலைக்குக் கொண்டுவரும் சிறந்த போரியல் ஆசானாகவும் எமது விடுதலை இயக்கத்தின் மிகச்சிறந்த முதல்தரக் குறிச் சூட்டாளராகவும் பெருந் தளபதிகளில் ஒருவராகவும் விளங்கியவர் பிரிகேடியர் கடாபி அவர்கள். (மேலதிக குறிப்புகளுக்கு இந்த இணைப்புக்குச் செல்லவும்)
அதேபோல், எமது விடுதலை இயக்கத்தின் கடற்புலிகள் அணியில் எந்தவொரு வெளியிணைப்பு இயந்திரமும் இயங்குநிலைத்தடை ஏற்படும்போது, அதனைத் திருத்தம் செய்து, மறுபடியும் இயங்குநிலைக்குக் கொண்டுவரும் வகையில் மிகத் திறமையான வெளியிணைப்பு இயந்திரப் பொறியியலாளனாகச் செயற்பட்டவர் கடற்புலி லெப். கேணல் கடாபி ஆவார்.
கடற் போரியலில் கடற்புலிகளின் வளர்ச்சியென்பது, அமெரிக்காவின் ''சீல்'' கடற் கொமாண்டோக்களுக்கு நிகரான வளர்ச்சியை எட்டிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது, புதியவகை விசைப் படகுகளை அதிகூடிய வேகத்தில் சென்று கடற் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம்.
அந்தவேளையில், எமக்குப் பெரும் சவாலாக இருந்துவந்தது வெளியிணைப்பு இயந்திங்களின் கோளாறுகளே. அநேகமான தாக்குதல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்த கடற் சமர்களெல்லாம் அதிகம் இயந்திரக் கோளாறுகளாலேயே ஏற்பட்டன.
உண்மையில் கடற்புலி கடாபியைப் பொறுத்தளவில் சாதாரணப் பொதுத் தராதரப் படிப்பை (O/L) படித்துவிட்டு 1995 காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர்.
அடிப்படைப் பயிற்சி முடிந்ததுமே கடற்புலிகளின் இயந்திரப் பொறியியற் பயிற்சிக் கல்லூரியிலேதான் தனது அனுபவத்தினூடான படிப்பை மேற்கொண்டார். அங்கு படிக்கும்போதே அந்த அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இயக்கம் மீதான விசுவாசமும், தமிழீழ விடுதலையின்பால் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்திருந்த தியாக உணர்வுமே அவனைப் பொறுப்பாளனாக அடையாளப் படுத்தியிருந்தது.
சண்டைப் படகுகளிலும் விநியோகப் படகுகளிலும் இயந்திரப் பொறியியலாளனாக வலம்வந்து கொண்டிருந்தார், லெப்.கேணல் கடாபி. தனது திறமையால், தான் செல்லும் படகின் இயந்திரங்களைத் தொடர் செயற்பாட்டில் வைத்திருந்து மிக நேர்த்தியாகப் பராமரித்தார்; மோசமான காலநிலைகளில் கடற் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும் இறுக்கமான கடற் சண்டைகளின் போதும் அதற்கு ஈடுகொடுத்துச் செயற்பட மறுக்கும் இயந்திரங்களையும், வெடிபட்டுச் செயலிழந்த இயந்திரங்களையும் இருள்சூழ்ந்த அந்தக் கடலில் தனது விடாமுயற்சியால் திருத்தி, ஓடவைத்து, படகுகளைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்த பல சாதனைகளுக்குக் கடாபியே காரணமாயிருந்தான்.
வெள்ளோட்டம் விடப்படும் படகுகளில் தேசியத் தலைவர் வந்து ஏறும் பொழுதெல்லாம் அந்தப் படகின் இயந்திரப் பொறியியலாளனாகக் கடாபியும் நின்றிருப்பான். ”என்னிடமும் ஒரு கடாபி இருக்கு, நீயும் ஒரு கடாபியை வச்சிருக்கிறாய், சூசை,” என எமது சிறப்புத் தளபதி பிரிகேடியர் சூசையிடம் தலைவர் அவர்களே குறிப்பிட்டுக் கூறும் அளவிற்குத் தனது திறமையை (கடற்புலி) கடாபி வெளிப்படுத்தியிருந்தார். தலைவரின் உதடுகள் கடாபி என்று அவனது பெயரை உச்சரிக்கும் நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட மிகவும் திறமைவாய்ந்த ஒருவன்.
கடற்புலி மேஜர் கண்ணன் அவர்களின் வீரமரணத்துடன் கடற்புலிகளின் வெளியிணைப்புப் பகுதிப் பொறுப்பாளராக லெப்.கேணல் கடாபி அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார் என்பதை இங்கே பதிவுசெய்யத் தக்கது.
கடலிலும் தரையிலும் இனத்தின் விடுதலைக்காய் ஓய்வுறக்க மின்றிச் சுழன்றடித்த எங்கள் கடற்புலிக் கடாபி இதே நாளன்று (8.5.2008), சிங்களத்தின் ஆழ ஊடுருவும் அணியின் ''கிளைமோர்'' கண்ணிவெடித் தாக்குதலொன்றில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.
***
ஒவ்வொரு வெற்றிச் சண்டைகளுக்குப் பின்னாலும் எங்களோடு நீயிருந்தாய் கடாபி!
உனது உடலிற்கும் உள்ளத்திற்கும் உள்ள வேறுபாட்டை எங்களோடு வாழ்ந்து நிரூபித்துக் காட்டினாய்!
தொட்டுக் கதைப்பதுகூட உனக்குப் பிடிக்காது, அந்த அளவிற்குக் கூச்ச சுபாவமுடையவன் நீ!
ஆனாலும், "கிளைமோர்" குண்டுகள் உன் உடல் துளைத்த போதினில் மகிழ்வோடு ஏற்றிருப்பாய்! ஆனால், உந்தன் இழப்பு எமக்கு மிக வலிக்கிறது!
***
நினைவுகளுடன்,
புலவர்/தும்பன்
கடற்புலிகள்.
***
குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.