கரும்புலி மாவீரர் லெப்ரினன்ட் கேணல் தேனிசை!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
உலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய "யூலை-5 கரும்புலிகள் நாள்" நினைவுகூரப்படுகின்றது.
இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன்.
சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு "லெப்ரினன்ட் கேணல் தேனிசை" ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத் தன்னைக் கொடையாக்கிய ஒரு அற்புதமான போராளி தேனிசை.
ஆண்டு 2002 அளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டவர். விடுதலைப் புலிகளின் "#படைய_அறிவியற்_கல்லூரி" என்னும் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று, அந்த அணியின் மகளிர் பிரிவில் கடமையாற்றினார்.
படைய அறிவியற் கல்லூரியால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான படைத்துறை சார் நூல்களையும் கட்டுவதற்கென்றே (binding) ஒரு பகுதி இருந்தது. அது ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவிலும் இருந்தது. இரகசிய ஆவணங்களை வெளியில் கொடுத்து கட்டுவிக்க முடியாது என்பதற்காகவே இந்தப் பகுதி உருவானது.
குறித்த இந்த நூல்களைக் கட்டும் பகுதியில் ஆரம்பத்தில் பணியாற்றிவந்தார் தேனிசை.
பின்னர், விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு, அது விரிவாக்கம் பெற்றுக்கொண்டிருந்த போது அதற்கான துறைசார் ஆளணி தேவைப்பட்டது. அதனால், படைய அறிவியற் கல்லூரியில் இருந்து சமராய்வுப் பிரிவிற்கு போராளி தேனிசை பிரிவு மாற்றம் செய்யப்பட்டார். அந்த ஆண்டு 2007 இன் தொடக்கத்தில் என நினைக்கிறேன்.
சமராய்வுப் பிரிவின் நூலகத்திற்குப் பொறுப்பாக போராளி தேனிசை கடமையாற்றினார். அதேவேளை, அங்கே பல்வேறு பணிகளை அவர் ஏனைய போராளிகளோடு இணைந்து செய்தார். நூல்கள் தயாரித்தல், கட்டுதல், அறிக்கை தயாரித்தல், வடிவமைத்தல், தட்டச்சு செய்தல் போன்ற கடமைகளையும் அவர் ஆற்றிவந்தார்.
இவ்வாறு பணிகள் பல முனைகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, தமிழீழம் எங்கும் போர் மிகவும் தீவிரமாகிக்கொண்டு இருந்தது. படிப்படியாக நிலங்கள் விடுபட்டுக்கொண்டிருந்தன.
இறுதியாக புதுக்குடியிருப்பு வரை எதிரி முன்னேறியதால், அந்தப் பகுதியில் பாரிய மறிப்பு வரிசை அமைத்து, எதிரியின் முன்னகர்வுகள் முறியடிக்கப் பட்டுக்கொண்டு இருந்தது.
அந்த வேளை, பரவலாக கரும்புலியாக இணைய விரும்புவோர்களது பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது, சமராய்வுப் பிரிவிலும் எடுக்கப்பட்டது. இதன்போது, போராளி தேனிசையிடம், "கரும்புலியாக இணைந்துகொள்ள விருப்பமா?" என்று அறிக்கை எடுத்த போராளி கேட்டார்.
அதற்கு தேனிசை தனது வழக்கமான புன்னகையுடன் மிகச் சாதாரணமாக, "ஆம்" என்று கூறித் தலையசைத்தார். அறிக்கை எடுத்தவரும் அதனைப் பார்த்தவர்களும் தேனிசை ஏதோ பகிடியாகக் கதைக்கிறார் என்று நினைத்து, மறுபடியும் கேட்டு, "என்ன உண்மையாகவா ஆம் என்கிறீர்கள்," என்று கேட்டு உறுதிப்படுத்தினார்கள்.
கறுத்த உருவம். என்றும் இழையோடும் அழகிய புன்முறுவல். கடமைகளை நேர்த்தியாக முடிக்கும் பக்குவம். சக போராளிகளோடு அன்பாய் பழகும் மனம். அதேவேளை, அதிகம் பேசாத தனித்துவம். இதுதான் போராளி தேனிசை.
அவ்வாறு அவர் சம்மதம் தெரிவித்து சிலநாட்கள் கழிய, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் திரு.பொட்டு அம்மான் அவர்கள் சமராய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் திரு.யோகி அவர்களுடன் பேசிவிட்டு போராளி தேனிசையை கரும்புலிகள் அணியில் இணைத்தார்.
அவ்வாறு அவர் இணைக்கப்பட்டு, அடுத்த சில நாட்களிலேயே அவர் கரும்புலிக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகளை மிகக் குறுகிய நாட்களுக்குள் பெற்றார். அத்துடன் தனது இலக்கையும் பார்வையிட்டார்.
தான் இலக்கில் சென்று வெடிப்பதற்கு ஒரிரு நாளிற்கு முன்னர் தான் பணியாற்றிய சமராய்வுப் பிரிவுக்கு வந்து, தனது சகோதரர்களாகவும் ஒரு கூட்டுக் குடும்பமாகவும் இருந்த சக போராளிகளிடம் இறுதி விடைபெற்றுச் சென்றார்.
மற்ற எல்லோருக்கும் அது மிக உணர்வுபூர்வமான விடயமாக இருக்க, தேனிசைக்கு மட்டும் அது ஒரு விடுமுறைக்கான விடுப்பு எடுத்துச் செல்வதுபோன்ற உணர்வு. அப்போதும் தேனிசை புன்னகையும் கலகலப்பான முகபாவனையுடன் தான் விடைபெற்றுச் சென்றார். விடைகொடுத்த போராளிகளுக்கு தேனிசையைக் கடைசி முறையாகப் பார்க்கின்ற தருணம் அது. அந்தக் கணத்தை எழுத்தில் உணர்த்திவிட முடியாது.
"சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேகணே்டும்," என்ற கூற்றைப் போன்று, அன்று தேனிசை தனது இறப்புக்கான இறுதி விடைபெறும்போதும் புன்னகையோடுதான் இருந்தாள். அவள் வெடித்த கணத்தில் சாம்பலாகும் போதும் புன்னகையுடன் தான் இருந்திருப்பாள்! தனது இறப்பால் தமிழினம் விடிவுபெறட்டும் என்பதற்காக.
தேனிசை விடைபெற்றுச் சென்று ஓரிரு நாட்கள் கழித்து, பொட்டு அம்மான் அவர்கள் யோகி அண்ணையைச் சந்தித்து தேனிசை புதுக்குடியிருப்புப் பகுதியில் கரும்புலியாக வெடித்து 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்தார் என்ற செய்தியைத் தெரிவித்தார். "கரும்புலி தேனிசை மிகவும் சிறந்த போராளி. மிகக் குறுகிய நாட்களுக்குள் தனது கடமையைச் சரியாகச் செய்துமுடித்தார்," என்று யோகி அண்ணையிடம் பாராட்டினார் பொட்டு அம்மான் அவர்கள்.
தேனிசைக்கு லெப்ரினன்ட் கேணல் என்ற நிலை வழங்கப்பட்டது.
இன்று, கரும்புலி மாவீரர் லெப்.கேணல் தேனிசை அவர்களின் படம் எங்களிடம் இல்லை! அவர் குறித்த முழுமையான தரவு எங்களிடம் இல்லை! ஆனால், அவரோடு பணியாற்றிய எஞ்சிய ஓரிரு போராளிகளிடம் மட்டுமே அவரது இந்த நினைவுக் குறிப்பு உள்ளது.
இப்படி எத்தனையோ ஆயிரம் மாவீரர்களின் வரலாறுகள் பதியப்படாமல் எமது இனம் வாழத் தங்களது உயிர்களைக் கொடையாக்கினார்கள்.
வாழ்ந்துகொண்டிருக்கின்ற எங்கள் இனம் அவர்களின் தியாகத்தையும் வரலாற்றையும் கற்றுணர்ந்து அவர்களின் நினைவுகளுடன் வாழவேண்டும்; அவர்கள் எந்த உயரிய நோக்கத்துக்காகத் தங்களைக் கொடையாக்கினார்களோ, அந்த உயரிய நோக்கம் நிறைவேற ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை சரியான கட்டங்களில் செய்யவேண்டும்.
இதுதான் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குச் செய்யும் உயரிய மாரியாதையாக இருக்கும்.
---
த.ஞா.கதிர்ச்செல்வன்.
****

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!