பிரபாகரனியம்: அடிபணியாத மரபும், விட்டுக்கொடுக்காத உரிமைப் போராட்டமும்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
1

பிரபாகரனியம்: அடிபணியாத மரபும், விட்டுக்கொடுக்காத உரிமைப் போராட்டமும்!

தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவை நினைவுகூரும் நிகழ்வு சுவிற்சர்லாந்து,  அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் எதிர்வரும் 02.08.2025 அன்று புலம்பெயர் வாழ் தமிழ்மக்களால் மிகவும் உணர்வெழுச்சியோடு முன்னெடுக்கப்பட உள்ளது.



உலகத் தமிழர்களாகிய நாம் வரலாற்றுத் தலைவனுக்கு  எங்கள் வணக்க  மரியாதையை செலுத்துவதோடு, அவருக்கான வரலாற்றை சரியாகப் பதிவுசெய்யவேண்டியது ஒரு வரலாற்றுப் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத் தத்துவமாக வாழ்ந்து மடிந்தார். பிரபாகரனியம் என்பது வெறும் ஒரு தலைவர் பற்றிய அடையாளம் அல்ல. அது,  ஜனநாயகம்  இழந்த மக்களின், இனஅழிப்பாலும்  வன்முறையாலும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் நீதி சார்ந்த எதிர்ப்பின் தத்துவ வடிவமாகும்.

தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அளப்பெரிய தியாகத்தின் ஊடாக பிறந்ததுதான் பிரபாகரனியம். அஃது, மக்களின் ஆழமான அரசியல் விழிப்புணர்வை மட்டுமல்ல, ஒரு தேசத்தின் சுயநிர்ணய உரிமையை, வாழ்வுரிமையை பாதுகாக்கும் வீர மனநிலையை - உறுதிப்பாட்டை -  பிரதிபலிக்கிறது.

பிரபாகரனியம்:
    • அச்சமின்றி நியாயத்திற்கு குரல் கொடுக்கும் தைரியம்!
    • மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கப் போராடும் வரவிலக்கணம்!
    • போராளிகளுக்கான மனவுறுதி, ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் தியாகத்தின் அடையாளம்!
    • நெறிமுறையான போராட்ட வாழ்வின் வழியான சாவை மாவீரத்துவமாக்கி, போராடும் இனத்துக்கு ஆன்ம வலுவேற்றும் தத்துவம்!

தன்னுடைய வாழ்க்கையையே போராட்ட வழிகாட்டியாக மாற்றினார். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் ஓர் இலட்சியத்தின் வெளிப்பாடு. 
அவர் தன் வாழ்நாளில் சத்தியத்தை பேசினார். சத்தியமான போராட்ட அறத்தைப் பின்பற்றினார். 

படைத்துறை, அரசியல் மற்றும் திட்டமிடல்களில்  தீர்க்கதரிசியாக விளங்கினார். முடிவுகளில் மலை போன்ற உறுதியும், இறுதி மூச்சுவரை நிலை தடுமாறாத, அடிபணியாத அதியுச்ச வீரத்தோடும் செயல்பட்டார். 

அவரது தத்துவங்கள் உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு அரணாக அமையப்பெற்றுள்ளது.

இன்று 'பிரபாகரனியம்' என்பது, ஒடுக்குமுறை எங்கு கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, அங்கே அது நியாயம் கேட்கும் சட்டகமாகப் போராடுகிறது.
இன்றைய தலைமுறைகள், கடந்த காலத்தில் நடந்த இனஅழிப்பின் கோரத்தை மறந்து விடாமல், தலைவர் பிரபாகரன் அவர்கள் காட்டிய வழியில் உணர்வோடும் புரிதலோடும் போராடவேண்டும். 

#பிரபாகரனியம் என்பது ஒருவரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, அது எல்லாத் தலைமுறைகளின் இன விடுதலைப் போராட்டத்துக்கும், உறுதியான எதிர்ப்புக்கும் வழிகாட்டி.

அவர் சிந்தித்ததை நம் வாழ்வில் செயலாக்குவது, நம் வரலாற்றுப் பொறுப்பும், நம் தலைமுறைக் கடமையும் ஆகும்.

#பிரபாகரனியம் ஒரு மனிதனின் நினைவுக்குறிப்பு  அல்ல – அது ஓர் இனத்தின் உரிமைக் குரல்!

அது அடிபணியாத மனவுறுதி, அச்சமின்றி எதிர்க்கும் ஆற்றல், அமைதிக்கான நியாயப்போராட்டத்தின் அடையாளம்!

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள், இந்த நினைவுநாளில், மாபெரும் வீரத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரது தத்துவங்களை உணர்ந்து, நியாயமான சமூக, இன விடுதலைப் போராட்டங்களில் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.

எனவே, மேதகு வே. பிரபாகரன் அவர்களை நினைவுகூர்வது என்பது அவரின் வாழ்க்கையை மதிப்பதுமட்டுமல்ல அவரது எண்ணங்களை நம் செயலில் உயிர்ப்பிக்க வேண்டிய பொறுப்பையும் அது நமக்கு அளிக்கிறது.

ஓர் இனத்தின் நெஞ்சங்களில் என்றும் வேரூன்றியிருக்கும் உணர்வின் பெயர் தான் – பிரபாகரனியம்!
***

  - த.ஞா. கதிர்ச்செல்வன்.

Post a Comment

1 Comments

  1. சிறப்பான பதிவு.

    ReplyDelete
Post a Comment

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!