அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளும்! - நிக்கொலஸ் ஸ்பைக்மான்

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
நிக்கொலஸ் ஜோன் ஸ்பைக்மான் (13 ஒக்ரோபர் 1893 – 26 யூன் 1943)


பூகோளஅரசியல் : தலைப்பு 04
இரண்டாம் உலகப் போர் நிகழ இருந்ததை முற்கூட்டியே தீர்க்கதரிசனமாகக் கூறியிருந்த பூகோள அரசியல் மூலோபாயவாதியான நிக்கொலஸ் ஜோன் ஸ்பைக்மான் அவர்கள் "ஆசிய றிம்லான்ட்"இனைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு போர் மூளும் என எதிர்வுகூறியுள்ளார்.


அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் என்னும் பாடத்துக்குரிய ஒரு பேராசிரியராகப் பணியாற்றிய டச்சு-அமெரிக்கரான நிக்கொலஸ் ஸ்பைக்மான், இரண்டாம் உலகப் போரின்போது இரண்டு நூல்களை எழுதியிருந்தார். அந்த நூல்களில், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபட்டிருந்த உலகளாவிய அடிப்படைப் பூகோள அரசியற் காரணிகளை ஆராய்ந்துள்ளார். 

'ஆசிய றிம்லான்ட்' என அவரால் அழைக்கப்பட்ட 'யுரேசியாவின் கடலோர நிலப்பரப்புகளை' கட்டுப்படுத்துவதற்கான போட்டியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு போர் ஏற்படும் என அவர் தனது நூலில் எதிர்வுகூறியுள்ளார்.

முதலாவது நூலான, 'உலக அரசியலில் அமெரிக்காவின் மூலோபாயம்: அமெரிக்காவும் அதிகாரச் சமநிலையும்' என்பதை 1942 ஆம் ஆண்டு எழுதினார். அதில், 'புவியியல் மற்றும் ஆதிக்க அரசியல்' குறித்து உலகில் அமெரிக்காவின் நிலைப்பாட்டினை மிகவும் விலாவாரியாக ஆராய்ந்துள்ளார். 

அரசுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான இலக்காக உருவெடுக்கின்ற ஆதிக்க நிலைப்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கைக்கான போராட்டம் ஆகியவற்றோடு முற்றிலும் ஒரேமாதிரியான அதிகாரத்துக்கான போரையே எல்லா சர்வதேச அரசியலும் உள்ளடக்கியிருக்கின்றது, என ஸ்பைக்மான் அதில் எழுதியுள்ளார். 

அமெரிக்காவின் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவிலும் தூரக்கிழக்கிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அதிகாரச் சமநிலையைப் பேணுவதிலே தங்கியுள்ளது என அந்த நூலின் முடிவில் குறிப்பிட்டுள்ளார்.

'புவியியல் அமைதி' என்னும் இரண்டாவது நூல் 1944 இல் அவரது மறைவுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. அதில், உலகின் முக்கிய புவியியல் அதிகார மையங்களை அடையாளங்கண்டு ஒரு பூகோள அரசியல் வரைபடத்தை ஸ்பைக்மான் வரைந்துள்ளார். 

அந்த வரைபடம், யுரேசியாவின்  “Heartland”  எனப்படும் 'இதயநிலம்' மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கியுள்ளது. எச்.ஜெ. மக்கின்டரின் கோட்பாட்டுப்படி, யுரேசிய கண்ட நிலத்தொடரின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கிய மையப் பெருநிலப் பகுதி “Heartland” எனப்படும். ஸ்பைக்மான் வரையறுத்த “Rimland” என்பது, மேற்கு ஐரோப்பாமத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா, தென்மேற்காசியா, தூரக்கிழக்காசியா நாடுகளை உள்ளடக்கிய யுரேசியாவின் 'கடலோரநிலப் பரப்பு' ஆகும். அவற்றுள் ஒவ்வொரு முக்கிய பிராந்திய அரசுகளின் தனித்துவங்களை மதிப்பீடுசெய்து ஸ்பைக்மான் பின்வருமாறு ஒரு கோட்பாட்டை எழுதினார்: 'ஓரநிலத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே யுரேசியாவை ஆள்வார்கள்யுரேசியாவை யார் ஆள்கிறார்களோ அவர்களே இந்த உலகின் தலைவிதிகளைக் கட்டுப்படுத்துவார்கள்'.



அவர் அந்த நூலை எழுதிக்கொண்டிருந்த போது, யப்பான் அமெரிக்காவின் எதிரியாகவும் சீனா அமெரிக்காவின் கூட்டணி நாடாகவும் இருந்தன.  இந்நிலை போருக்குப் பிந்தைய உலகில் நேர்மாறாக மாற்றமடையவிருந்த அடிப்படைப் பூகோள அரசியற் காரணிகளை, 'புவியியல் அமைதி' என்னும் நூலை எழுதிக்கொண்டிருந்த போதே எதிர்வுகண்டார். 

அதாவது, அமெரிக்காவின் கூட்டணி நாடாக யப்பானும் எதிரி நாடாக சீனாவும் தோற்றம்பெறும் என அவர் எதிர்வுகூறியிருந்தார். கடலுடன் ஒட்டிய ஒரு மிகப்பெரிய நிலப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதால், மிகப்பெரிய பரிமாணங்கள் கொண்ட ஒரு கண்டம் அளவிலான ஆதிக்க சக்தியாக சீனா வளர்ச்சியடையுமென ஸ்பைக்மான் 1942 இல் எழுதினார். 

சீனாவின் பரந்த கடற்பரப்பு ஆனது, பல நாடுகளின் பிராந்திய எல்லைக் கடல்களைக் கொண்டுள்ளது. அதனை அவர் “Asiatic Mediterranean” (ஆசியாவின் மத்தியதரைக்கடல்) என அழைத்தார். யப்பான் கடல், கிழக்குச் சீனக் கடல், தெற்குச் சீனக் கடல் என்பன ஆகியப் பிராந்தியக் கடல்களைக் கொண்ட 'ஆசியாவின் மத்தியதரைக் கடல்' எனவும் 'தீவுகள் சூழ்ந்த தனிச்சிறப்பு மிக்க ஓர் உலகம்' எனவும் விளக்கியுள்ளார். 


அந்தப் பிராந்தியக் கடல்கள், பசுபிக் சமுத்திரத்துக்கான சீனாவின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதோடு, இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரம் ஆகிய இரண்டையும் இணைக்கின்ற கடல் விநியோகப் பாதைகளுக்கான சீனாவின் போக்குவரத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

மலாக்கா நீரிணைக்கும் பனாமா நீரிணைக்கும் இடைப்பட்ட பூகோள அரசியல் ஒற்றுமையைக் கூட அவர் குறிப்பிட்டதோடு, குறித்த பிராந்தியங்களில் உள்ள மூலோபாய மற்றும் வர்த்தகப் பாதைகள், கால்வாய்கள் (chokepoints) ஆகியன குறித்தும் எழுதியுள்ளார்.

'ஒரு நவீன, வலுவூட்டப்பட்டதும் இராணுவமயப்பட்டதுமான 400 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட சீனா, யப்பானுக்கு மட்டுமன்றி ஆசியாவின் மத்தியதரைக் கடலில் மேற்குலக அரசுகளின் நிலைப்பாட்டிற்கும் கூட ஒரு அச்சுறுத்தலாக உருவெடுக்குமென,' ஸ்பைக்மான் எழுதியுள்ளார். சீனாவின் கடல் மற்றும் வான் ஆதிக்கவலு ஒரு நாள் ஆசியாவின் மத்தியதரைக்கடலைக் கட்டுப்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். 

அதுவே தற்போது துல்லியமாக சீனா, யப்பான் மற்றும் சிறிய பிராந்திய அரசுகளுக்கு இடையே பதற்றத்தைத் தோற்றுவிக்கின்ற பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவாகி இருப்பதோடு, அமெரிக்காவின் ஆசிய-பசுபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க அச்சுக்கும் (U.S. pivot) பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கிறது. 

அதனால்தான், தூரக் கிழக்கில் அதிகாரச் சமநிலையை மீள்நிறுவிப் பாதுகாப்பதற்காக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான அமெரிக்க-யப்பான் கூட்டணி ஒன்றை அமைக்கவேண்டும் என அவர் அப்போதே பரிந்துரைத்திருந்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர், தூரக் கிழக்காசியாவில் மேலாதிக்க சக்தியாக சீனா இருக்குமென புவியியல் அமைதி என்ற நூலில் சந்தேகத்துக்கு இடமின்றி எதிர்வுகூறியிருந்தார். அதன்காரணமாக, அவர் அமெரிக்க அரசியல்வாதிகளை யப்பானிலும் பிலிப்பீன்சிலும் தளங்களை நிறுவுமாறு வலியுறுத்தினார். 

அத்துடன், அந்தப் பிராந்தியத்தில் மிகப்பெரிய அரசாக வளர்ச்சியடையப்போகும் சீனாவின் எந்த முயற்சியையும் முறியடிப்பதற்கு ஆசியாவின் மத்தியதரைக் கடலில் பரவலாக எங்கும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

'சமாதான காலத்திலும் சரி, போர்க்காலத்திலும் சரி அமெரிக்கா என்றென்றும் அக்கறையெடுக்க வேண்டிய ஆதிக்க நட்சத்திரமாக ஆசியாவே உள்ளது என்பதை அமெரிக்கா மீண்டுமொருமுறை நிரந்தரமாகவே புரிந்துகொள்ள வேண்டும்,' என வலியுறுத்தியுள்ளார்.

எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் மூலோபாயவாதி ஸ்பைக்மான் சரியாக எதிர்வுகண்டிருந்தது போலவே சீனா, அமெரிக்கா, யப்பான் மற்றும் சிறிய பிராந்திய வல்லரசுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் ஒரு பூகோள அரசியற் போர்க்களமாகத் தற்போது 'ஆசியாவின் மத்தியதரைக் கடல்' உருவெடுத்துள்ளது.  

எரிசக்தி வளங்களைச் சுரண்டுதல், பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துதல், முக்கிய கடல் விநியோகப் பாதைகளைக் கட்டுப்படுத்துதல், நிலப்பரப்பை அரசியல்ரீதியாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆசியப்-பசுபிக் பிராந்தியத்தில் ஒட்டுமொத்த அதிகாரச் சமநிலையைப் பேணுதல் ஆகிய சிக்கலுக்குரிய காரணிகளாலே குறித்த பூகோள அரசியல் முறுகல்நிலை உருவாகியுள்ளது.

புவியியல் அமைதி என்னும் நூலின் முடிவில், அவரது காலத்தில் வாழ்ந்த அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு ஒரு இறுதித் துளி மதியுரையை ஸ்பைக்மான் வழங்கினார். அது, அமெரிக்காவின் சமகால மற்றும் எதிர்காலத் தலைவர்களுக்கும் தொடர்ந்து எதிரொலிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது, ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலும் எங்கேயும், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களை சர்வதேச நிறுவனங்களாலோ அல்லது உலக சமுதாயத்தாலோ பாதுகாக்கப்படவும் மாட்டாது பேணப்படவும் மாட்டாது என்றார்.

"நாங்கள் எமது சொந்த தேசத்தின் பலத்திலே முதன்மையானதாகத் தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும். ஒரு பலம்வாய்ந்த அரசு, அதன் அழிவுப் பாதைக்கும் வெற்றிப் பாதைக்கும் வழிவகுக்கக்கூடிய அதன் பலத்தை மதிப்பீடுசெய்யத் தவறியமையாலே அந்த அரசின் தோல்விக்குக் காரணம் என்பது எமக்குத் தெரியும். தயார்ப்படுத்தலற்று மந்த நிலைக்குள் இருந்துவந்தமையே எல்லாப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குமான காரணம்," என அந்த நூலின் முடிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ***
(சித்திரை 2015 அகரம் இதழில் வெளியான எனது கட்டுரையைச் சிறிது சீரமைத்து வெளியிடுகிறேன்)

- த.ஞா.கதிர்ச்செல்வன்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!