இறிசாட் நிக்சனின் 3ஆம் உலகப் போரும் ஓர் இசுலாமிய உலகிற்கான திட்டங்களும்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0


பூகோள அரசியல் - தலைப்பு:- 05 :

முன்னாள் அமெரிக்க சனாதிபதி இறிசாட் நிக்சன் (Richard Nixon) அவர்கள் பனிப் போரின் முடிவு, அதிகாரச் சமநிலை மற்றும் அதையொட்டிய பல விடயங்களை முற்கூட்டியே கணித்துள்ளார். உலகின் பூகோள அரசியலை முற்கூட்டியே தொலைநோக்கிப் பார்க்கின்ற, உலகிலே மிகவும் புகழ்மிக்க முன்னணியானவர்களுள் இறிசாட் நிக்சனும் ஒருவர். 

ஆண்டு 1980 மற்றும் 1994 இற்கு இடைப்பட்ட காலத்தில் அனைத்துலக உறவுகள் குறித்து ஆறு பகுதிகள் கொண்ட நூல்களை நிக்சன் எழுதினார். அவை அனைத்தும் வரலாற்றின் மேல் அவருக்கிருந்த அறிவு, சர்வதேச அரசியல் எதார்த்தங்களில் அவரது ஆழுமை மற்றும் சர்வதேச அரசியலின் எதிர்காலப் போக்குகள் குறித்து அவருக்கிருந்த நுண்ணறிவு ஆகியவற்றை நிரூபித்துள்ளன. 

அந்த நூல்களுள் மிக அதிக நூண்ணறிவு உட்பார்வை கொண்ட நூல்கள், 'உண்மையான போர் (The Real War - 1980)' மற்றும் 'சமாதானத்துக்கு அப்பால் (Beyond Peace  - 1994)' ஆகிய இரண்டும் ஆகும். உண்மையான போர் என்ற நூலில், சோவியத் ஒன்றியத்தின் தோல்விக்கும் உடைவுக்கும் வழிவகுத்த பனிப் போரின் பூகோள அரசியல் அடித்தளங்களை ஆராய்ந்துள்ளார். அத்தோடு, அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலான கொள்கைகளையும் பரிந்துரைத்துள்ளார். 

சமாதானத்துக்கு அப்பால் என்ற நூலில், ஆசியாவுக்கான அமெரிக்க அச்சு (U.S. pivot) மற்றும் 21ஆவது நூற்றாண்டு உலக அரசியலில் இசுலாமிற்கு உள்ளேயான போராட்டத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை முற்கூட்டியே கணித்துள்ளார்.

உண்மையான போர் என்ற நூலை நிக்சன் எழுதிய போது, இந்தோ-சீனாவில் (Indochina - இன்றைய மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளடங்கிய பகுதி) அமெரிக்கா தோல்விகண்டதால் ஏற்பட்ட ஒரு எழுச்சியில் பூகோள அரசியல்ரீதியான தாக்குதல் நடவடிக்கையில் சோவியத் ஒன்றியம் ஈடுபட்டது. 

அப்போது அமெரிக்க சனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஆட்சிக்கு வருவதற்கான எழுச்சி ஏற்பட்டு, அவரது முதலாவது மிக முக்கியமான வெளிநாட்டுக் கொள்கைப் பிரகடன உரையில், 'கொம்யூனிசம் எனப்படும் பொதுவுடைமையில் ஒரு மட்டுமீறிய அச்சம்' அமெரிக்கர்களுக்கு இருக்கிறது எனக் குறிப்பிட்டார். அதேவேளை அக்காலப் பகுதியில் சோவியத் ஒன்றியத்துக்கு சார்பான தலைவர்கள் நிக்கராகுவா, கிறெனாடா, அங்கோலா, மொசாம்பிக் மற்றும் தெற்கு யேமன் ஆகிய நாடுகளில் அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள்.

ஊசலாடிக்கொண்டிருந்த தமது நட்பு ஆட்சிக்கு முண்டு கொடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் மீது சோவியத் நாடுகள் படையெடுத்தன. ஈரானில் ஷா (Shah) எனப்படும் மன்னர் ஆட்சி வீழ்ச்சியடைந்து, அடிப்படைவாத இசுலாமிய ஆட்சியால் அந்த அரசு மாற்றியமைக்கப்பட்டதால், அமெரிக்கா அதன் முக்கிய நட்பு நாடொன்றை இழந்தது. அந்த அடிப்படைவாத இசுலாமிய ஆட்சி, அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்து, ஒரு பூகோள இசுலாமியப் புரட்சியை ஊக்குவித்தது. 

சோவியத்தின் ஒரு எழுச்சிபெற்ற 'முதற்தர-தாக்குதல்' திறன், அமெரிக்காவின் விரிவாக்கப்பட்ட தாக்குதல் தடுப்புமுறை மூலோபாயத்தைப் பலவீனமடையச் செய்யும்வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதன் காரணமாக, மூலோபாய அணுவாயுதச் சமநிலை ஆனது சோவியத்தின் நலனுக்கு அமைய மாறிக்கொண்டிருந்தது.

இவ்வாறு, சோவியத்தின் மிகவும் சவாலான போட்டியை முறியடிப்பதற்காக அமெரிக்காவின் ஒரு எதிர் நடவடிக்கையாக, 'நீண்ட கால மற்றும் குறுகிய கால வழிமுறைகளை ஒருங்கிணைத்து,' சோவியத்தின் பொருளாதாரம், படைத்துறை, இராசதந்திரம் மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றை முற்றுகை செய்யக்கூடிய ஒரு நடவடிக்கைக்கு நிக்சன் அழைப்புவிடுத்தார். இதனை "முற்றுகைக்குள் வசப்படுத்தும் மூலோபாயம்" என்ற கொள்கைத் தந்திரத்துக்குள் அடக்கலாம். 

பிருத்தானியாவின் பூகோள அரசியற் தத்துவ ஞானியான ஹல்போர்ட் மக்கின்டரை (Sir Halford Mackinder) எதிரொலித்து, 'யுரேசியாவின் இதயநிலத்தின் (Heartland) மத்தியில் நிலைகொண்டுள்ள' உலகின் நில மேலாதிக்க சக்தியாக சோவியத் ஒன்றியத்தை நிக்சன் பார்த்தார்.

அதேவேளை, கடல் ஆதிக்க வலுவில் முதன்மையாகத் தங்கியுள்ள, பூமியைச் சுற்றிலும் அதன் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய  'ஒரு தீவு நாடு' என அமெரிக்காவை நிக்சன் அழைத்தார். 

சோவியத் நாடுகள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தூரக் கிழக்கு நாடுகளை நோக்கிய அனைத்துத் திசைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருந்ததால், அமெரிக்கா சோவியத்தின் இதயநிலத்தை ஒட்டிய முக்கிய பிராந்தியங்களில் அதன் நட்பு நாடுகளுக்கு ஆதரவு வழங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்து.

அமெரிக்காவின் பூகோள அரசியல் தத்துவ ஞானியான ஜேம்ஸ் பூர்ன்ஹாம் (James Burnham) அவர்களை எதிரொலித்து, அமெரிக்கா - சோவியத்துக்கு இடையேயான மோதலை, இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு முன்னரே ஆரம்பித்த 'மூன்றாம் உலகப் போர்' எனவும் அதுவே 'முதலாவது உண்மையான உலகப் போர்' எனவும் நிக்சன் விளக்கினார். 

'உலகின் எந்த மூலையிலும் அந்த போர் வெடித்திருக்கலாம்,' என அவர் எழுதினார். 'உலகின் வல்லரசுகளாக அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உருவெடுத்தன. அதேவேளை, இந்த நாடுகளுக்கு இடையே எங்காவது அதிகாரச் சமநிலை என்ன வடிவிலாவது பாதித்தால், அது உலகெங்குமுள்ள சமநிலையையும் பாதிக்கும்,' என அவர் எழுதினார்.

மிக அதிக நுண்ணறிவு உட்பார்வை கொண்ட பகுதியான உண்மையான போர் என்ற நூல், நிக்சனின் கொள்கைப் பரிந்துரைப்புகளாக அமைந்துள்ளது. அந்த நூலில் அவர் எழுதியுள்ள கொள்கைப் பரிந்துரைப்புக்கள், சோவியத் பேரரசின் அமைதியான உடைவுக்கு வித்திட்ட றீகன் மற்றும் ஜோர்ச் H.W.புஷ் (Reagan and George H.W. Bush) ஆகியோரின் நிருவாகங்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளோடு வெளிப்படையாக ஒத்திருந்தன. 
றீகன் மற்றும் புஷ்
முதலாவதாக, அமெரிக்காவின் கணிசமான அணுவாயுதப் பலத்தை கட்டுதல்மரபுசார் படைகளை கட்டுதல் மற்றும் சோவியத்துக்கு எதிரான திட்டவட்டமான கடற்படை மேலாண்மையைப் பேணவேண்டியதன் அவசியம் ஆகியவற்றை நிக்சன் பரிந்துரைத்தார்.

இரண்டாவது, ஆசியாவில் சோவியத்தின் நில மேலாதிக்கத்துக்கு எதிரான சமநிலையைப் பேணுவதற்காக சீனாவுடன் அமெரிக்கா அதன் மூலோபாய உறவைத் தொடர்ந்து வளர்க்க வேண்டுமென அழுத்தமாக அவர் வலியுறுத்தினார். 

மூன்றாவது, பூமியின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு படைத்துறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் உதவிகளை வழங்கி 'நிக்சனின் கோட்பாட்டுக்கு' உயிர்கொடுக்குமாறு அழைப்புவிடுத்தார். 

நான்காவது, 'றீகனின் கோட்பாட்டை' முன்மொழிந்து, மூன்றாவது உலக நாடுகளில் சோவியத்துக்கு ஆதரவான தலைவர்களின் முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் அரசாங்கங்களுக்கு அமெரிக்காவின் உதவியை வழங்கவேண்டுமென வாதிட்டார். முன்னாள் அமெரிக்க சனாதிபதி றீகனின் ஐ.நா.வுக்கான தூதுவர் ஜேன் கிர்க்பற்றிக் அவர்களுடைய உணர்வுகளை எதிரொலித்து, எதேச்சாதிகார மற்றும் சர்வாதிகார (authoritarian and totalitarian) ஆட்சிகளுக்கு இடையேயான முக்கிய வேறுபாடுகளை அறிந்துகொள்ளுமாறு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை நிக்சன் ஊக்குவித்தார்.

ஐந்தாவது, சோவியத் நாடுகளுக்கு எதிராக அதிகளவு மூர்க்கத்தனமான பிரச்சாரப் போரை முன்னெடுக்குமாறு வாதிட்டார். 

ஆறாவது, சோவியத் மண்டலத்துக்குள்ளே உள்ள விடுதலை அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குமாறு வாதிட்டார். 

ஏழாவது, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக சோவியத்தை பலவீனப்படுத்துமாறு அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் வலியுறுத்தினார். 

இறுதியாக, ஆற்றல்மிக்க இராசதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைகளுடன் (diplomacy and negotiations) மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம் அமெரிக்கா போர் இல்லாத வெற்றியை சாதிக்க முடியும் என அவர் நம்பினார். 

மிகவும் துல்லியமாக இதனையே றீகன் தனது இறுதி சனாதிபதி ஆட்சிக்காலத்தில் பின்பற்றினார். அதேவேளை, சனாதிபதி ஜோர்ச் H.W. புஷ் அவர்களும் பனிப்போரின் முடிவை வெற்றிகரமாக வழிநடாத்தும்போது இதனையே பின்பற்றினார்.

சமாதானத்துக்கு அப்பால் என்ற நூல்  1994 இல் அவரது இறப்புக்கு சிறிதுகாலம் முன்னர் எழுதப்பட்ட நிக்சனின் இறுதி நூலாகும். அது, அமெரிக்கசோவியத் பகைமை நீண்டகாலத்துக்கு ஆதிக்கம் செலுத்தாத ஓர் உலகில் முன்னோக்கிய பார்வையாகளாக அமைந்துள்ளது.
அந்த நூலின் தொடக்கத்தில், பனிப் போரின் முடிவு என்பது மோதலின் முடிவு என்றோ அல்லது நிரந்தர அமைதியின் தொடக்கம் என்றோ பொருளல்ல என அவர் அமெரிக்கர்களுக்கு எச்சரித்துள்ளார். 'இந்த உலகம், எமது பார்வையை (vision) வரையக்கூடிய ஒரு வெற்றுச் சித்திரத் தாள் அல்ல,' என வாசகர்களுக்கு அந்த நூலில் அவர் நினைவூட்டியுள்ளார்.

மேலும், எதேச்சாதிகாரப் போக்கிற்கு மாறிய ரசியா ஆனது, உக்கிரைன் மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீது அதன் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பரப்புவதற்காக முனையும் என நிக்சன் முற்கூட்டியே கணிப்பிட்டுள்ளார்   அதுவே துல்லியமாக ரசிய அதிபர் புட்டினின் ஆட்சியின் கீழ் நேரிட்டுள்ளது. 

'தீவிர ரசியத் தேசியவாதிகள் அதிகாரத்துக்கு வரும் சந்தர்ப்பத்தில் கிழக்கில் இருந்து வரக்கூடிய புதிப்பிக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு காப்புறுதியாக' ஒரு புது வலிமை மிக்க நேட்டோவுக்கு (NATO) அவர் அழைப்பு விடுத்தார்.

'சீனா, பொருளாதார மற்றும் படைத்துறை ரீதியான ஒரு வல்லரசாக அடுத்த நூற்றாண்டில் (21ஆம்) உருவாகும்,' என அதில் நிக்சன் எழுதியுள்ளார். 

சீனாவுடைய தவிர்க்கமுடியாத எழுச்சியானது யப்பான், ரசியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு 'நுட்பமான அதிகாரச் சமநிலை ஒப்பந்தத்தில்' (a delicate balancing act) முடிவாகும் எனவும், அது பசுபிக் றிம் (Pacific Rim) உடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எனவும் அந்நூலில் அவர்  எதிர்வுகூறியுள்ளார். 

அமெரிக்கா, ஆசியாவில் ஒரு பலமான 'அதிகாரச் சமநிலைப் பாத்திரத்தை' வகிக்க வேண்டும், இல்லையெனில் 'எரிமலை போன்ற பிராந்திய உறுதிப்பாடற்ற நிலையை' தூண்டக்கூடும், என அவர் எழுதியுள்ளார். 

மிகத் தெளிவாக 1970 களின் ஆரம்பத்தில் சீனாவுடனான அமெரிக்காவின் மூலோபாய உறவை போலித்தனமாக ஏற்படுத்திக்கொண்ட சனாதிபதி நிக்சன் அவர்கள், 21ஆம் நூற்றாண்டில் சீனாவுக்கு எதிரான ஆசியப் பசுபிக் இற்கான அமெரிக்காவின் அச்சை (U.S. pivot) அவர் முன்னுணர்ந்து எழுதியுள்ளார்.

சமாதானத்துக்கு அப்பால் என்ற நூலில் இறுதியாக, முசுலிம் உலகிற்கான ஒரு அதிநவீன அணுகுமுறையைக் கையாளுமாறு அமெரிக்கத் தலைவர்களுக்கு நிக்சன் அழைப்புவிடுத்துள்ளார்.

'அமெரிக்கா முசுலிம் உலகத்தை மேற்குடன் மோதிக்கொள்ளும் ஒரு ஒன்றுபட்ட, தீவிரவாதப் பூகோள அரசியற் படையாக பார்வையிடக்கூடாது எனவும், இசுலாத்தில் கொண்ட ஒரு நம்பிக்கையாலும் அரசியல் கொந்தளிப்புக் கொண்ட ஒரு மரபாலும் கட்டப்பட்ட பல்வேறு கலாச்சார இனக் குழுமமாகவுமே பார்வையிட வேண்டும்,' எனவும் அவர் எழுதியுள்ளார். 

முசுலிம் உலகமானது பாரசீக வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, சுயஸ் கால்வாய் மற்றும் மலாக்கா நீரிணை போன்ற பூமியின் மிகவும் கேந்திரமுக்கியமான பகுதிகளில் குந்திக்கொண்டிருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்

'முழு முசுலிம் உலகிலும்... வேகமாக வளர்ந்துவரும் அடிப்படைவாத இயக்கங்கள் இருக்கின்றன... அவற்றின் முதல்தர விசுவாசம் ஈரானில் அதன் வேர்களைக் கொண்டுள்ள தீவிரவாத முசுலிம் அடிப்படைவாத மதத்துக்கானதாக உள்ளது,' என நிக்சன் இசுலாமிய உலகின் மேல் அமெரிக்கா அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அந்த நூலில் வெளிப்படுத்தியுள்ளார். 

முசுலிம் உலகில் நீண்டகாலம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போவது ஈரான் என நிக்சன் எழுதியுள்ளார். அமெரிக்கா ஈரானின் செல்வாக்கை மட்டும் கட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது எனவும், தெஹ்ரான் ஆட்சிக்கு எதிராக ஈரானில் இன மற்றும் மதக் குழுக்களுக்கு உதவி வழங்கித் தயார்ப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தொடர்ந்து அந்நூலில் வலியுறுத்தியுள்ளார்.

முசுலிம் உலகின் ஒரு பகுதியுடன் 'நாகரிகங்களின் மோதலில்' நாம் ஈடுபடுகிறோம், என நிக்சன் விளக்கியுள்ளார். அடிப்படைவாத இசுலாம் என்பது ஒரு பலமான நம்பிக்கை ஆகும். அதன் கோரிக்கை மதம் மட்டுமே, மதச்சார்பற்றது அல்ல. அதன் கோரிக்கை உயிருக்கானது (soul), உடலுக்கானது அல்ல. மதச்சார்பற்ற மேற்குலகின் பெறுமதிகள் (values) இந்த நம்பிக்கையுடன் போட்டிபோட முடியாது என அவர் தொடர்ந்து எழுதியுள்ளார். 

எனினும், கடிகாரத்தைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் திருப்பிவிட முனையும் ஈரானுடைய ஆட்சியைப் போன்ற அடிப்படைவாத ஆட்சிகளின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதற்குப் பதிலாக, இசுலாமிய உலகின் மக்கள் குழுமங்கள் தமது சொந்தத் தலைவிதியைப் பட்டியலிடக் கூடியவர்களாக இருப்பார்களேயானால், பின் இசுலாமியத் தீவிரவாதம் வெற்றிபெறாது, என நிக்சன் நம்பினார்.

இவ்வாறு இசுலாம் உலகத்தை அமெரிக்கா தனது நலன் சார்ந்து கட்டமைப்பது குறித்த நிக்சனுடைய கொள்கையையும் பார்வையையும் பரீட்சித்துப் பார்க்கின்ற களமாக 21ஆம் நூண்டின் மத்திய கிழக்கு நாடுகளைப் பார்க்கமுடிகிறது.

இந்த இரண்டு மிகச் சிறந்த பூகோள அரசியல் நூல்களில் இறிச்சாட் நிக்சன் அவர்கள், பனிப் போரில் வெற்றிக்கான பாதையை வரைந்துள்ளதோடு, அந்தப் போரின் முடிவிலிருந்து உருவாகக்கூடிய ஓர் உலகை அவர் எதிர்வுகண்டுள்ளார்.
***
(வைகாசி 2015 அகரம் இதழில் வெளியான எனது கட்டுரையைச் சிறிது சீரமைத்து வெளியிடுகிறேன்)

த.ஞா.கதிர்ச்செல்வன்.




Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!