தமிழின அழிப்பை முன்னின்று நடாத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுத மௌனிப்புக்கு உட்படுத்தி, தமிழரின் உரிமைகளை மீட்பதற்கான பேரம்பேசும் சக்தியை அழிக்கக் காரணமான பல வல்லாதிக்க சக்திகள் தாங்களே மோதிக்கொள்ளும் யுத்தப் பெருங்கடலாக இந்து சமுத்திரம் மாறிவருகிறது.
துரிதமாக மாறிவரும் இந்து சமுத்திரத்தின் மூலோபாயச் சூழமைவு கடந்த ஆண்டுகளாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற பெரிய வல்லாதிக்க நாடுகளுக்கிடையேயான வளர்ந்துவரும் மூலோபாயப் பொட்டியாகவே இருந்துவந்தது. தற்போது புதிய பல போட்டியாளர்கள் தமக்கான சொந்தச் செல்வாக்குப் பரப்பையும் தமக்கான கூட்டணி நாடுகளையும் இந்துமாக் கடலில் நிறுவத் தொடங்கியுள்ளதால் மிகுந்த குழப்பம் நிறைந்த ஒரு புதிய இந்து சமுத்திர ஒழுங்கு உருவாகிவருகிறது.
இந்துமாக் கடலை ஆதிக்கம் செலுத்தும் பெரிய வல்லாதிக்க சக்திகளாக அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகியனவும் மேற்கு நாடுகள் சார்பு நடுத்தர ஆதிக்க சக்திகளாக ஆசுத்திரேலியா, பிரான்சு, யப்பான் போன்றனவும் இருந்துவருகின்ற.
இந்நிலையில் "புதிய" நடுத்தர ஆதிக்க சக்திகளாக ஐக்கிய அரபு எமிரேட்சு, சவூதி அரேபியா, துருக்கி, பாக்கிசுத்தான், ஈரான், இந்தொனேசியா போன்ற நாடுகள் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் புதிய நடுத்தர ஆதிக்க சக்திகள், குறைந்தபட்சம் இப்போதைக்கு, இந்திய - அமெரிக்க நலன்களுக்கு எதிராக இருக்கப் போவதில்லை. எனினும், அவை அனைத்தும் தமது சொந்த நலன்களையும் நிகழ்ச்சி நிரல்களையும் பின்பற்றியே இயங்கப்போகின்றன.
இந்தியா தனது பிராந்தியத்துக்குள் சீனாவின் முத்துமாலை, பட்டுப்பாதை போன்ற வர்த்தகத் திட்டங்கள் மூலமான உள் நுழைவால் எரிச்சலடைந்து, அதை முறியடிப்பதற்கு கடல் மாலை, ஆசிய ஆப்பிரிக்க வளர்ச்சிப் பாதை, வடக்குத் தெற்குப் போக்குவரவுப் பாதை போன்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதேவேளை, மலாக்கா நீரிணைக்கு அருகே தனது சொந்தத் தீவுகளான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இராணுவ நடவடிக்கைத் தளங்களை கட்டுவதோடு, மொறிசியசு, சீசெல்சு போன்ற தீவு நாடுகளில் நடவடிக்கை வசதிகளுக்கான தளங்களை நிறுவுகிறது. மேலும், இந்து சமுத்திரத்தின் மேற்குப் பிராந்தியத்தில் சிபுட்டி, றியூனியன் (Djibouti and Reunion) போன்ற வற்றில், பிரான்சின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஒரு வழங்கல் பரிமாற்ற ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தாகி உள்ளது. அத்துடன், ஓமனில் உள்ள டுக்கும் (port of Duqm) துறைமுகத்துக்கு இந்தியக் கடற்படை வழங்கல் மற்றும் பராமரிப்புப் பணிக்காகச் சென்றுவருவதற்கான ஒரு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மூலோபாய எண்ணைச் சேமிப்பின் ஒரு பகுதியாக எண்ணைக் களஞ்சிய வசதிகளை ஓமனின் டுக்கும் இற்கு அருகே இந்தியா அமைத்துக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் பின்புலத்தில், அமெரிக்க அதிபர் திறம்புவின் நிருவாகம் "சுதந்திரமான திறந்தவெளி இந்திய-பசுபிக்கு (FOIP)" என்னும் மூலோபாய கொள்கையை அண்மையில் அறிவித்துள்ளது. நடைமுறையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தப் போகிறது என்பது தற்போது தெளிவின்மையாக இருக்கலாம். ஆனால், அந்த கொள்கையானது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சிறிதளவு திறந்த, சுதந்திரத்தையே மற்றவர்களுக்கு வழங்கப் போகிறது என்பதை நம்பமுடிகிறது. அதாவது, பசுபிக் சமுத்திரத்தில் இருந்து இந்து சமுத்திரம் வரை, கிழக்கு மேற்காக யப்பானில் இருந்து இந்தியா வரைக்கும் சீனாவைச் சுற்றி ஒரு மூலோபாய முற்றுகை வளையத்தை அமெரிக்கா அமைக்கவுள்ளது. அதன்வாயிலாக, சீனாவின் பட்டுப் பாதைத் திட்ட முன்னெடுப்பு மூலம் சீனா வாங்கிவரும் செல்வாக்கை முறியடிப்பதற்கு அமெரிக்கா சீரிய போட்டியில் ஈடுபடப் போகிறது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத விதமாகச் சீனா முன்னெப்போதும் இல்லாதவாறு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் படைத்துறை நிலைகளைக் கட்டுவதற்கு மிக வேகமாக நகர்வுகளை எடுத்துவருகிறது. இந்து சமுத்திரத்தைச் சுற்றிய கரையோரங்களில் கடற்படை மற்றும் படைத்துறைத் தளங்கள் கொண்ட ஒரு வலையமைப்பை மேம்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு, சிபுட்டியில் சீனா அதன் முதலாவது கடல்கடந்த படைத்துறைத் தளத்தை அமைத்தது. மேலும், பாக்கிசுத்தானின் குவதார் துறைமுகத்துக்கு அருகே ஒரு புதிய கடற்படைத் தளத்தைக் கட்டிவருகிறது. அத்துடன், இந்து சமுத்திரத்தின் மத்தியில் அல்லது கிழக்கில் அல்லது கிழக்கு ஆப்பிரிக்காவில் சீனா எதிர்காலத்தில் தளங்களை அமைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. அதேவேளை, தென்னிலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனா படைத்துறை சார்ந்த தளங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அரசு இப்போதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்குள் சீனாவின் நகர்வுகள், அதை முறியடிக்க அமெரிக்க - இந்திய எதிர்வினைகள் என்பன புதிய ஒரு பனிப் போரைத் தோற்றுவிக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்ற இவ்வேளையில், அந்தப் புதிய போட்டியாளர்களின் வரவு எந்த நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.
சமீப காலமாக இந்து சமுத்திரத்தின் புதிய போட்டியாளர்களாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்சு, துருக்கி ஆகியன ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) எனப்படும் பகுதியில் கடற்படை மற்றும் படைத்துறைத் தளங்களை அமைப்பதற்கான ஓட்டத்தில் ஈடுபவதைப் பார்க்க முடிகிறது. சவூதி அரேபியா சிபுட்டியில் ஒரு கடற்படைத் தளத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதன் கூட்டணி நாடான ஐக்கிய அரபு எமிரேட்சு எரித்திரியாவுக்கு அருகில் உள்ள அசாப்பில் (Assab) மிகப்பெரிய கடற்படை மற்றும் வான்படை வசதிகளுக்கான தளங்களைக் கட்டிமுடித்துள்ளது. அதேவேளை, அது சோமாலியாவின் மொகடிசுவில் (Mogadishu) ஒரு பயிற்சி நடுவத்தையும் நடாத்திவருகிறது.
துருக்கியும் அதன் பங்கிற்கு அண்மையில் சூடானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. அதன்பொருட்டு, செங்கடலில் அதன் பழைய ஒட்டோமன் காலத்து சுவாகின் துறைமுகத்தை (port of Suakin) துருக்கி மீளக் கட்டப்போகிறது. அந்த ஒப்பந்தத்தில் கடற்படை வசதிகளை மேம்படுத்துவதும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கட்டாரிலும் மொகடிசுவிலும் ஏற்கெனவே 3000 துருப்புக்களை அது நிலைப்படுத்தி வைத்திருக்கிறது.
ஆப்பிரிக்கக் கொம்பில் ஏற்படுகின்ற இந்த நகர்வுகளுக்குப் பின்னாலுள்ள திடீர் முக்கியத்துவமானது, மத்திய கிழக்கின் புதிய இருதுருவ ஆதிக்கக் கூட்டணிகளுக்கு இடையேயான போட்டியாக உருவெடுத்துள்ளது. சவூதி அரேபியா ஐக்கிய அரபு எமிரேட்சு, எகிப்து ஆகியன ஒரு பக்கமும் துருக்கி, கட்டார், ஈரான் ஆகியன மற்றைய பக்கமுமாக ஒரு புதிய மத்திய கிழக்காக இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இரு தரப்புக் கூட்டணிகளுக்கு இடையேயான போட்டியானது, அந்தப் பிராந்தியத்தில் ஏற்கெனவே நீண்டகாலமாக இருந்துவந்த பல முரண்பாடுகளையும் போட்டிகளையும் மீண்டும் மறு உருவம் எடுக்கவைத்துள்ளது..
இந்தப் போட்டிகள் குமரிக் கடலான இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய முசுலிம் தீவு நாடுகளான மாலைத்தீவு, கொமொறோசு (Comoros) வரை நீடித்துள்ளது. பிராந்தியப் போட்டியாளரான ஈரானை ஓரங்கட்டுவதற்கு சவூதி அரேபியா இந்தத் தீவு முசுலிம் நாடுகளுடன் காசோலை இராசதந்திரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறித்த இரு நாடுகளும் ஈரான் மற்றும் கட்டாருடனான இராசதந்திர உறவுகளை முறித்துக்கொண்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான சவூதியின் இசுலாமிய இராணுவக் கூட்டமைப்பில் (IMAT) இணைவதற்கு கையெழுத்து இட்டுள்ளன. அதேவேளை, மாலைத் தீவு ஊடாக சீனாவுக்குச் செல்லும் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதையைப் பாதுகாப்பதற்கான தளத்தை அமைப்பதற்கு சவூதி அரேபியா மாலைத் தீவை நாடுயுள்ளது. மாலைத் தீவுடனான சவூதியின் இந்த நெருங்கிய உறவு இந்தியாவுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சவூதியின் நெருங்கிய கூட்டாளியான ஐக்கிய அரபு எமிரேட்சும் அதன் கிளைகளை இந்துமாக் கடலெங்கும் பரப்புகிறது. இந்து சமுத்திரத்தின் சிறிய தீவு நாடுகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்சு நிதி மற்றும் அரசியல் உதவிகளை நீண்ட காலமாக வழங்கிவருகிறது. அது, சீசெல்சுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உதவியையும் வழங்கிவருகிறது. அதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்சு இந்து சமுத்திரத்தில் ஒரு பரந்த அரசியல் பாத்திரத்தைக் கட்டமைத்து வருகிறது. 2019 இல் இருந்து இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்துக்கு (IORA) அது தலைமை வகிக்கப் போகிறது. மறுவளத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சுவின் எதிரியான ஈரான், இந்து சமுத்திர கடற்படைக் கருத்தரங்கிற்கு (IONS) தலைமை ஏற்க உள்ளது.
போதாக் குறைக்கு துருக்கியும் இந்து சமுத்திரத்தில் ஒரு பங்கை மீளவும் கட்டிவருகிறது. ஒட்டோமன் பேரரசுக் காலத்துக்குப் பின்னர் ஒரு நூற்றாண்டாக இந்தப் பிராந்தியத்துக்கு துருக்கி அடியெடுத்து வைக்கவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, ஒட்டோமன் பேரரசின் புகழைத் தேசிய அளவில் நினைவுகூருவது உட்பட, அந்நாடு ஒரு "பூகோள மீளெழுச்சிக்கு" உட்பட்டுவருகிறது. துருக்கி அதிபர் றிசெப் துய்யிப் எர்துகான் பிராந்தியம் எங்கும் பாதிக்கப்படும் முசுலிம் இனக்குழுக்களுக்கான ஒரு பாதுகாவலராக வலம்வருகிறார். மியன்மார் றொஃகிஞ்சா முசுலிம் மக்களின் முக்கிய அனைத்துலக ஆதரவாளர்களில் ஒருவராக இருந்துவருகிறார். மியன்மார் ஆட்சியால் இழைக்கப்பட்ட பிந்திய இனச் சுத்திகரிப்பின் போது, செப்ரெம்பர் 2017 இல், றொஃகிஞ்சாக்களுக்கு உதவி வழங்கிய முதல் நாடு துருக்கி.
துருக்கிக் கடற்படை ஒட்டோமன் காலத்துக்குப் பின்னர் மீண்டும் இந்து சமுத்திரப் பரப்புக்குள் கால்வைக்கிறது. கடற்கொள்ளையர் முறியடிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் ஒரு செயற்பாட்டுப் பங்கேற்பாளராக இருந்துவருகிறது. செங்கடலில் துருக்கியின் வரலாற்றுத் துறைமுகமான சுவாகினில் கடற்படைத் தளத்தைக் கட்டுவதானது, துருக்கிக் கடற்படை அந்தப் பிராந்திய வருகையைக் கணிசமானளவு நீட்டிக்கும். அதேவேளை, செங்கடலின் கடற்படை மேலாதிக்கத்துக்காக எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் போட்டிபோடக்கூடிய சூழலும் ஏற்படலாம்.
இவ்வாறாகப் பெரிய வல்லாதிக்க சக்திகள், நடுத்தர ஆதிக்க சக்திகள் என எல்லா நாடுகளும் போட்டிபோட்டு இந்து சமுத்திரப் பிராந்தியம் எங்கும் கட்டுமானங்களை மேம்படுத்தி வருவது, ஒரு புதிய இந்து சமுத்திர மூலோபாய ஒழுங்கின் தொடக்கத்துக்கான அறிகுறியாக உள்ளது.அதிகளவில் குழப்பம் நிறைந்த, பல்துருவப் பிராந்தியங்களை உடைய எண்ணுக்கணக்கான பெரு வல்லாதிக்க மற்றும் நடுத்தர ஆதிக்க சக்திகள் தமது நிலைக்காகவும் செல்வாக்கிற்காகவும் மோதிக்கொள்ளுகின்ற சூழல் உருவாகிவருவதை அவதானிக்க முடிகிறது.
அந்தப் பிராந்தியத்திலே மிகப்பெரிய படைத்துறை ஆதிக்கவலுவாக அமெரிக்கா இருந்துவந்தாலும், தலைமைப் பாத்திரத்தை இனிமேல் வகிக்க முடியாத அளவுக்கு மிக அதிகக் குழப்பமான ஒரு சூழமைவு உருவாகிவருகிறது.
இந்நிலை பனிப் பொரில் முடியுமா, ஆயுதப் போரில் முடியுமா, அதற்கும் மேலே சென்று முடியுமா என்று எதிர்வுகூறுவது கடினமானது. ஆனால், தமிழீழத்திலும் சிரியாவிலும் அப்பாவி உயிர்கள் இனக் கொடுங் கொலைக்குப் பலியானதைத் தடுக்க முடியாத ஒரு பலமற்ற நிலை அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு நீடிக்குமேயானால், அது சீனாவின் நகர்வுகளுக்கு பெரிய பாதிப்புகள் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை.
***
த.ஞா.கதிர்ச்செல்வன்.
04.03.2018.