![]() |
ஃகான்சு மோர்கெந்தாவு |
பூகோளஅரசியல் தலைப்பு: 06 :
சர்வதேச உறவுகளில் எதார்த்தவாதத்தின் (realism) தந்தையான ஃகான்சு மோர்கெந்தாவு சீனாவின் எழுச்சி, அமெரிக்காவின் மீள்சமநிலைக் கொள்கை மற்றும் ஆசியாவின் நூற்றாண்டு ஆகியவற்றை எதிர்வுகூறியுள்ளார்.

நன்றாக அறியப்பட்ட, கட்டுரைகளின் ஒரு தொகுப்பான உண்மையும் ஆதிக்கமும் என்ற நூலை அவர் 1960 களில் எழுதினார். அந்த நூலில், தூரக் கிழக்கு என்ற தலைப்பின் கீழ், ஆசியாவில் ஆதிக்கச்
சமநிலையை நிறுவுவதற்குத் தனது எதார்த்தவாத அணுகுமுறையை வழங்கியுள்ளதோடு, பூபிமியிலேயே மிக அதிக சக்திவாய்ந்த நாடாகச் சீனா இருக்கின்ற ஓர் உலகை அதில் மோர்கெந்தாவு எதிர்வுகண்டுள்ளார்.
யேர்மனியில் 1904 ஆம் ஆண்டு பிறந்த மோர்கெந்தாவு அவர்கள் பேர்ளின், ஃபிறாங்பூர்ட், மியூனிச் ஆகியவற்றின் பல்கலைக் கழகங்களில் கல்விபயின்றதோடு, சிறிது காலம் சட்டம் பயின்று, 1937 இல் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் பிறாங்பூட், ஜெனீவா, மட்றிட் ஆகிய இடங்களில் கற்பித்தார். அமெரிக்காவுக்குச் சென்ற அவர் அங்கே புறூக்கிளின், கன்சாஸ் ஆகிய நகரங்களில் சிறிது காலம் கற்பித்ததைத் தொடர்ந்து, 1943 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியத்துவத்தைப் பெற்றதுடன், அதே பல்கலைக்கழகத்தில் அடுத்த 30 ஆண்டுகள் கல்வி கற்பித்தார். பின், தனது ஆசிரியத் தொழிலை நியூயோர்க் நகரப் பல்கலைக்கழகத்தில் முடித்துக்கொண்டார்.
மோர்கெந்தாவு அவர்கள், அனைத்துலக அரசியலை 'ஆதிக்கத்துக்கான சண்டை' மற்றும் 'ஆதிக்க அரசியல்' என தேசங்களுக்கு மத்தியில் அரசியல் என்ற நூலில் வரையறுத்துள்ளார். 'ஆதிக்கத்துக்கான ஆசையே சர்வதேச அரசியலின் தனித்துவமான மூலக்கூறு' என அவர் எழுதியுள்ளார். 'ஆதிக்கத்துக்கான சண்டை ஆனது, காலப் பெருவெளியில் பொதுவானதும் மறுக்கப்படமுடியாத அனுபவ உண்மையுமாகும்.'
அரசியல் எதார்த்தவாதத்தின் (political realism) ஆறு கோட்பாடுகளை மோர்கெந்தாவு பின்வருமாறு முன்மொழிந்தார்:
01. அரசியல்: மனித இயல்பில் வேர்களைக் கொண்டுள்ள புறநிலைச் சட்டங்களால் ஆளப்படுகிறது.
02. இராசதந்திரிகள் (அரசியல்வாதிகள்): ஆதிக்கத்துக்கென வரையறுக்கப்பட்ட நலனின் அடிப்படையில் தம்மை நடத்துகிறார்கள்.
03. நலன் (interest): வெளிவிவகாரக் கொள்கை இயற்றப்பட ஏதுவான அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழலுக்குட்பட்ட அரசியல் நடத்தையைத் தீர்மானிக்கிறது.
04. மதிநுட்பம்: அனைத்துலக அரசியலில் போற்றுதற்குரிய நல்லொழுக்கமாக விளங்குகிறது.
05. நாடுகள்: ஆதிக்கத்தால் வரையறுக்கப்பட்ட அவற்றின் நலன்களைப் பின்பற்றுகின்ற நிறுவனங்கள் ஆகும். அவை, உலகளாவிய அறநெறிக் கோட்பாட்டு வரையறைக்கு உட்படாதவை.
06. அரசியல் எதார்த்தவாதம்: அனைத்துலக அரசியலுக்கான சட்டபூர்வமான மற்றும் அறநெறியான அணுகுமுறையை நிராகரிக்கிறது.
மோர்கெந்தாவு அவர்கள், தேசிய ஆதிக்கத்தின் கூறுகளைப் பின்வருமாறு அடையாளப்படுத்தினார்: அவை புவியியல், இயற்கை வளங்கள், தொழில்துறைத் திறன், படைத்துறைத் தயார்நிலை, குடித்தொகை, தேசியப் பண்பு, தேசிய உளவுரண், இராசதந்திரத்தின் தராதரம், அரசாங்கத்தின் தராதரம் என்பன ஆகும்.
மேற்குறிப்பிட்டவற்றுள் மிகவும் முக்கியம் வாய்ந்த காரணியாக இராசதந்திரத்தின் தராதரத்தை அவர் மதிப்பிட்டார். 'ஒரு நாட்டின் இராசதந்திரம் என்பது, மேற்குறித்த வேறுபட்ட கூறுகளை ஓர் ஒன்றிணைந்த முழுமைக்குள் இணைத்து, அவற்றுக்கு இயக்கத்தையும் சக்தியையும் வழங்குகிறது. அதேவேளை, உண்மையான வலுவின் ஆழ அகலத்தை அவற்றுக்கு வழங்குவதன் மூலம் அவற்றின் உறக்கநிலையிலுள்ள முக்கியத்துவங்களை விழித்தெழவைக்கிறது,' என அவர் எழுதியுள்ளார்.
ஆசியாவில், குறிப்பாக சீனாவில் மேற்கொள்ளப்படும் அபிவிரித்திகள், நீண்டகால ஓட்டத்தில் முழு உலகிற்கும் ஆபத்தான தாக்கங்களை எடுத்துச் செல்லலாம் என தேசங்களுக்கு மத்தியில் அரசியல் என்ற நூலில், மோர்கெந்தாவு பரிந்துரைத்துள்ளார்.
"பெருவெளி, இயற்கை வளங்கள், மிகப்பெரும் மனிதவளம் ஆகியவற்றைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஆசியா, தற்போதுதான் அரசியல் அதிகாரம், நவீனத் தொழினுட்பம் மற்றும் நவீன அறநெறிச் சித்தாந்தங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆசியாவின் விழித்தெழும் நாடுகள், விரைவாகவோ அல்லது தாமதமாகவோ நவீன தொழினுட்பத்தின் கருவிகளை – குறிப்பாக அணுவாயுதத் துறையில் – முழுமையாகக் கொண்டிருக்கப் போகின்றன. அண்மைக் காலம்வரை அது மேற்குலகின் வலுமிக்க ஏகபோக உரிமையாக இருந்துவந்துள்ளது. இந்த அபிவிருத்தியானது, ஒரு தீவிரமான ஆதிக்கப் பரவலை ஏற்படுத்துவதோடு, எதிர்கால உலகிற்கு எந்தவித வேறு காரணிகளை விடவும் இந்த அபிவிருத்தியே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்," என அந்த நூலில் அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
உண்மையும் ஆதிக்கமும் என்ற நூலில், இந்தப் பூகோளஅரசியல் தொலைபார்வையை மோர்கெந்தாவு விலாவாரியாக எழுதியுள்ளார். "திறந்த கதவுக் கொள்கையுடன் கூடிய 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆசியாவில் அமெரிக்காவின் நலன்கள், அனைத்துப் பெரும் அரசுகளின் போட்டிமிக்க சுரண்டலுக்காக சீனாவை திறந்து வைத்திருக்கத் தலைப்பட்டது," என மோர்கெந்தாவு சுட்டிக்காட்டியுள்ளார்.
"தொடக்கத்தில் வர்த்தகக் கொள்கையான திறந்த கதவுக் கொள்கையாக இருந்து பின்னர், ஆசியாவில் ஒரு ஆதிக்கச் சமநிலையை உறுதிசெய்வதற்கு வேண்டிய படைத்துறை மற்றும் அரசியல் கொள்கை வரை சீனா பரிணாமம் பெற்றது."
"சீனாவின் மகத்தான ஆதிக்கத் திறனுக்கு வலுவை வழங்கக்கூடிய ஐரோப்பியா அல்லது ஆசியாவில் உள்ள எந்த நாடும் சீனாவை ஆசியாவின் தனித்துவமான "மாஸ்டராக" மட்டுமல்ல இந்த உலகின் "மாஸ்டராகவும்" உருவாக்கும் எனக் குறிப்பிட்டு, இது அமெரிக்க இராசதந்திரிகளை அதிகாலையில் துயிலெழுப்பியுள்ளது," என மோர்கெந்தாவு அந்த நூலில் தொடர்ந்து எழுதியுள்ளார்.
முக்கிய வரலாற்று நிகழ்வுகளை அவர் அதில் விவரித்துள்ளார். சனாதிபதி தியோடோர் றூஸ்வெல்ட் ரசியா-யப்பான் போரை (Russo–Japanese War) முடித்துவைப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார், அது ஆசியாவில் ஆதிக்கச் சமநிலையைப் பேணியது. 1922 இல் செய்துகொள்ளப்பட்ட வோஃசிங்டன் கடற்படை ஒப்பந்தமானது பிருத்தானிய–யப்பானியக் கூட்டணியை சிறப்பாக முடித்துவைத்ததோடு, அது எழுச்சிபெற்றுவந்த யப்பானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நாடியது. 1931 இல் Stimson Doctrine என அழைக்கப்பட்ட கோட்பாடு, யப்பானுடைய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை இலக்காகக் கொண்ட, பலவந்தமாக அபகரிக்கப்பட்ட நிலங்களை அங்கீகரிக்க மறுத்தது.
ஆண்டு 1941 இல், சனாதிபதி பிறாங்கிளின் றூஸ்வெல்ட் அவர்கள், யப்பானுடைய விரிவாதிக்க வடிவங்களை முறியடிக்கும் வகையில் அமெரிக்கக் கொள்கையை வழிநடாத்தினார், அது 'பேர்ள் ஃகாபர்' மீதான தாக்குதலில் முடிந்ததோடு, இரண்டாம் உலகப் போருக்குள் அமெரிக்காவை நுழைத்தது.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாகவே யப்பானின் விரிவாதிக்க மறுமலர்ச்சிக்கு எதிரான ஒரு தூணாக, ஒரு பலம்வாயந்த சீனாவை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவின் கொள்கை நாடியது. அந்தக் கொள்கை, சீனாவில் பொதுவுடைமை ஆதிக்கம் ஓங்கியபோது முறிவடைந்தது. அன்றிலிருந்து, அமெரிக்காவின் கொள்கை பொதுவுடைமைச் சீனாவை முற்றுகைக்குள் அடக்குவதில் குறியாக இருந்துவருகிறது என மோர்கெந்தாவு அந்நூலில் விளக்கி எழுதியுள்ளார்.
அடுத்ததாக, மோர்கெந்தாவு சீனாவின் தனித்துவமான கொள்கைகளையும் அதன் நிலையையும் ஆராய்ந்துள்ளார். ஆசியக் கண்டத்திலேயே மிகவும் பலம்வாய்ந்த நாடு சீனா என அவர் எழுதியுள்ளார். 1949 இல் இருந்து நகரும் பொதுவுடைமைச் சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை, சீனாவின் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருந்துவருகிறது.
இந்தியாவுடன் எல்லைக் கோட்டுடனான பிரச்சினையாகவோ, திபெத்தியப் பிரச்சினையாகவோ அல்லது அமெரிக்கப் படைத்துறை தென்கிழக்காசியாவில் நகருவதை கட்டுப்படுத்துவதிலான பிரச்சினையிலோ எதுவாயினும், சியாங்க் காய்-ஃசேக் இன் ஆட்சிக்கு உட்பட்ட சீனாவுக்கும் மாவோவின் சீனாவுக்கும் இடையே எந்த மாறுதல்களும் இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோர்கெந்தாவு, சீனாவை நோக்கிய அமெரிக்காவின் 'புறவட்டப் படைத்துறை முற்றுகை' (peripheral military containment) கொள்கைக்கு அழைப்பு விடுத்தார். தாய்வானில் இருந்து தாய்லாந்து வரையான சீனப் பேரரசின் புறுவட்டப் பரப்பில் பலம்வாய்ந்த படைத்துறை நிலைகளின் கட்டமைப்பு என அந்தக் கொள்கையை அவர் விபரித்தார். அதேவேளை, அந்த புறுவட்ட எல்லைக் கோடுகளைத் துடைத்தழிக்கப் போதிய பலம் சீனாவிடம் இருந்தால், அவ்வாறான கொள்கை தாக்கவலுவாக இருக்குமா எனச் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவால் எதிர்காலத்தில் முற்றுகைக்குள் அடக்கப்பட இருக்கும் சீனா, வெறுமனே ஒரு பலம்வாய்ந்த அரசு மட்டுமல்ல, அது பூமியிலேயே மிகவும் அதிக சக்திவாய்ந்த நாடாக இருக்கப் போகிறது, என அவர் எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் புறவட்டப் படைத்துறை வழிமுறைகளைச் சீனா குறிப்பிட்ட நாட்களில் துடைத்தெறியக் கூடியதான பலம் பெற்றிருக்கும், எனவும் அவர் எதிர்வுகூறியுள்ளார். அமெரிக்காவின் அவ்வாறான புறவட்டப் படைத்துறை முற்றுகையானது, வெறுமனே திறனற்றது மட்டுமன்றி, அது சீனாவுக்கு ஆத்திரமூட்டுவதாகவும் இருக்கும் எனவும் எழுதியுள்ளார்.
பலம்மிக்க சீனா, தாய்வானில் இருந்து தாய்லாந்து வரையான அமெரிக்காவின் படைத்துறைத் தளங்கள் கொண்ட ஒரு முற்றுகை வளைவை அனுமதிக்கப் போவதில்லை, என அவர் விளக்கியுள்ளார்.
சீனா மேலதிக நிலங்களை ஆக்கிரமிக்க நாடும் என்பதில் மிக அதிக நம்பிக்கையோடு சந்தேகித்தார் மோர்கெந்தாவு. ஆனால், அது அவ்வாறு செய்யுமாக இருந்தால், சோவியத் ஒன்றியத்தை முற்றுகைக்குள் அடக்கிய அதே வழியில் – சீனாவை முற்றுகைக்குள் அடக்குவதற்கான அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் பலத்தை வழங்குவதன் மூலம் – சீனாவையும் அமெரிக்காவால் முற்றுகைக்குள் அடக்க முடியும் எனப் பரிந்துரைத்துள்ளார்.
அதைச் சீனாவுக்குத் தெளிவுபடுத்துவதானால் எடுத்துக்காட்டாக, சீனா இந்தியாவை வெற்றிகொள்ள முயற்சித்தால், அதைத் தடுப்பதற்கு, ஆயுதப் போரில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவிதமான அவசிய வழிமுறையையும் அமெரிக்கா எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீனா உட்பட முழு ஆசியாவையும் நோக்கிய மிகவும் காத்திரமான செயற்றிறன் மிக்க அமெரிக்கக் கொள்கையே, மிகச் சிறந்ததாக இருக்குமெனத் தான் கருதுவதாக மோர்கெந்தாவு குறிப்பிட்டுள்ளார்:
ஆசியாவின் தலைநிலப் பரப்புக்கு (mainland of Asia) அப்பால், யப்பானில் இருந்து பிலிப்பைன்ஸ் வரையான தீவுத் தொடரைப் பின்பற்றிய ஒரு புறவட்டப் பாதுகாப்பை நிறுவித் தக்கவைத்திருப்பது அவ்வாறான சிறந்த அமெரிக்கக் கொள்கையாகக் கருதினார்.
நில மேலாதிக்க சக்தியாக சீனா விளங்கும் அதேவேளை, கடல் மற்றும் வான் மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா உள்ளது, என அவர் எழுதியுள்ளார். அடிப்படையாக இந்தக் கொள்கையின் நோக்கமானது, ஆசியாவில் எந்தவொரு அரசும் மேலாதிக்க நிலையை அடையவிடாது தடுப்பதற்கான அமெரிக்காவின் மிகப்பெரிய நலன்களில் உள்ள பூகோள அரசியல் ஆகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே உண்மையும் ஆதிக்கமும் என்ற நூலில் ஃகான்சு மோர்கெந்தாவு அவர்கள் சீனாவின் எழுச்சி, அமெரிக்க மீள்சமநிலைக் கொள்கை மற்றும் ஆசியாவின் நூற்றாண்டு ஆகியவற்றை எதிர்வுகூறியிருந்தார்.
***
(ஆனி 2015, அகரம் இதழுக்காக நான் எழுதிய கட்டுரையைச் சிறிது சீரமைத்து வெளியிடுகிறேன்)
த.ஞா.கதிர்ச்செல்வன்.