தமிழீழ வழங்களைப் பாதுகாப்பதில் புலிகள் முன்னெடுத்த திட்டங்களுள் சிலவற்றை, தனது நேரடிச் சாட்சியாக திரு.சி.சேனன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மூலம், சி.சேனன் (https://www.facebook.com/nallur.nallur)
சமாதான ஒப்பந்த காலப்பகுதியில் வன்னியில் விடுதலைப்புலிகள், மண் வளங்களை கெடுக்கும் இந்த நெகிழிப் பைகளை (பொலித்தீன் பைகளை) தடை செய்தார்கள். அவர்கள் பெயருக்காக சும்மா அதனைச் செய்துவிட்டுப் போகவில்லை. மாற்றேற்பாடாக முன்று மாதங்கள் மட்டுமே ஆயுளைக்கொண்ட, அதன் பின்னர் உக்கிப் போகக்கூடிய, அதேநேரம் மண் வளத்திற்கு கேடு விளைவிக்காத நெகிழிப் பைகள் உற்பத்திச் சாலை ஒன்றினை கிளிநொச்சியில் நிறுவி,அங்கு தயாராகும் நெகிழிப் பைகளையே மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்கள்.
அதுமட்டுமல்ல ஏலவே அவர்கள் வனவளப் பாதுகாப்புப் பிரிவு என்ற பிரிவு ஒன்றினை தோற்றுவித்து அதனூடாக மரங்களை தொடர்ச்சியாக நடுகை செய்து காட்டுவளத்தினைப் பெருக்கிக்கொண்டே வந்தார்கள். பெரியளவில் பண்ணைகளை உருவாக்கினார்கள். அத்தோடு நில்லாது மரங்கள், காட்டு விலங்குகள், மற்றும் பறவைகளை வேட்டையாடி அழிக்க எத்தணிப்போர்களுக்கு எதிராக தமிழீழ நீதிமன்றங்கள் ஊடாக சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்த நேரிடும் என்ற நிலையினையும் தோற்றுவித்தார்கள்.
அவர்கள் வெறுமனே அதிகாரத்தை அடைவதற்காக, சிங்கள பேரினவாதத்திடமிருந்து விடுபட்டு தனிநாடு பெற்றுக்கொண்டால் போது என்ற எண்ணத்தில் போராடிக்கொள்ளவில்லை. அதுதான் அவர்களது எண்ணமென்றிருந்தால் ஒருபோதும் அவர்கள் நில, நீர் வளங்கள், வனவளங்கள் என்று தன்னிறைவான பொருண்மிய மேம்பாட்டில் இவ்வளவு கரிசனையும்,அக்கறையும் கொண்டவர்களாக இருந்திருக்கமுடியாது. இதுபோன்ற செயல்களில் ஆர்வம் கொண்டவர்களாக விளங்கியிருக்கமாட்டார்கள்.
இதன் காரணத்தினால்தான் அவர்கள் உணவுத் தேவையில் தன்நிறைவு பெற்றிருந்தார்கள். அரசு ஆட்சி செய்த சிங்கள தேசத்தில் உணவின்றி பலபேர் பட்டினியால் மடிந்தபோதிலும், இவ்வளவு பொருளாதார தடைகள்,சுமைகள், அரசின் நெருக்குவாரங்கள் என்று இருந்தபோதிலும் வன்னி மண்ணில் பட்டினியால் ஒருவர் இறந்தார் என்கிற வரலாறில்லை.
ஏன் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான வன்னியில் ஒரு பிச்சைக் காரர்களைக்கூட நீங்கள் கண்டுகொள்ள முடியாது.
நிதிப் பற்றாக்குறை, பல வித வளப் பற்றாக்குறை, எந்த உலகின் உதவியுமின்றி தனித்து நின்று போராடிய ஓர் அமைப்பு யுத்தச் சுமைகளுக்கு அப்பால் எதற்காக இவ்வளவு வேலைத் திட்டங்களையும் சிரத்தையோடு முன்னெடுத்தார்கள். ஏனென்றால் அவர்கள் தாய்மண், வருங்கால எமது சந்ததிகள் குறித்து தொலைநோக்கு பார்வை கொண்டிருந்தார்கள். அத்தோடு சாதாரண மனித மற்றும் பிற இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள், மனித மாண்பு மற்றும் போற்றத்தக்க விழுமியங்களையும் கொண்டிருந்தார்கள்.
புலிகளை பயங்கரவாதி என்று கற்பிதம்கொள்பவர்கள்! உண்மையில் இவைகளைப் புரிந்துகொள்வார்களா? உலகில் எந்தப் பயங்கரவாத அமைப்பு அல்லது பயங்கரவாதிகள் தமது மண்ணுக்கும், மக்களுக்கும், தாய் நாட்டிற்குமாக இதுபோன்ற போற்றத்தக்க செயற்திட்டங்களை செய்யும்? அல்லது செயற்படுத்தித்தான் உள்ளன?
***