![]() |
படம்: ஓவியர் புகழேந்தி
மரணித்து மீண்ட எச்சங்களாக வாழ்ந்துவரும் எங்கள் நினைவுகளைப் பேசுவோம்!
|
அன்று... ஒன்பது ஆண்டுகளுக்கு முன், எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக ஒன்றுபட்டு எம் கண்முன்னே நாள்தோறும் மரணமாகிப்போன இலட்சக் கணக்கான எங்கள் உறவுகளை... தாய் தந்தையரை... அக்கா தங்கைகளை... அண்ணா தம்பிகளை... பிஞ்சுக் குழந்தைகள், பெற்ற பிள்ளைகளை... கர்ப்பிணிகளை... சிசுக்களை... கருக்களை...
போராடி மடிந்த வீரமறவர்களை, நாட்டுப் பற்றாளர்களை... பட்டறிவு மிக்க அணித்தலைவர்களை, பொறுப்பாளர்களை... ஈடிணையற்ற போராளிகளை, கரும்புலிகளை... வீரஞ்செறிந்த உயர் தளபதிகளை... அதி மூத்த உயர்பெருந் தளபதிகளை...
திரைகடலும் ஆழ்கடலும் அளாவித் திரவியம் சேர்த்தவர்களை, அரிய கடலோடிகளை... விண்ணை அளாவி விடுதலைப் போரில் புதுப் பரிணாமத்தைப் படைத்த அரிய வீரர்களை...
போராட்ட அறிஞர்களை, தொழினுட்ப அறிவியலாளர்களை, படைத்துறை விஞ்ஞானிகளை, கண்டுபிடிப்பாளர்களை, நீருக்கு அடியில் போர்புரியும் வித்தைகளை உருவாக்கிக் கொண்டிருந்த விஞ்ஞானிகளை...
போரியல் தந்திரோபாய மேதைகளை, போரியல் மூலோபாயவாதிகளை, புலனாய்வுத்துறை நிபுணர்களை, அரசறிவியலாளர்களை, பொருளாதார நிபுணர்களை, அரச சட்டநெறியாளர்களை, அரசியல் ஆசான்களை, பட்டறிவுமிக்க அரிய போர்க்கல்வி ஆசிரியர்களை...
கவிஞர்களை, எழுத்தாளர்களை, பண்டிதர்களை, படைப்பாளிகளை, அறிவாளிகளை, மாணவர்களை, எதிர்காலச் சிற்பிகளை...
அரிய பொக்கிசங்களை, நூல்களை, ஏடுகளை, பல்துறை சார் அரிய வழிகாட்டல் கற்கை நெறிகளை, இரகசிய ஆவணங்களை...
தமிழீழத்தின் சொத்துக்களை, வழங்களை, எல்லைகளை, காணிகளை, உரிமைகளை, தமிழ் இறைமையை...
இவை அனைத்தையும், அந்த அனைத்துக்கும் அப்பாற்பட்டவற்றையும் கட்டமைத்து, நெறிப்படுத்தி, கட்டுப்படுத்தி, ஒருங்கிணைத்து, வழிநடத்தி, வழிகாட்டிய உயர்பெரும் அதி மேதகு மா தலைவனை, என்றும் இறவா அருட்பெரும் ஒளியாக விளங்கும் தமிழினத்தின் சரித்திர விடுதலைப் போராட்ட மா வீரனை...
இன்று, "பிரபாகரனியம்" என்னும் தத்துவ மெய்ப்பொருளாகத் தமிழினத்துக்கு வழிகாட்டும் ஓர் அதிமானுடனை... ...
என இப்படி இறைமையுள்ள தமிழீழத்தின் அத்தனை சொத்துக்களையும் இழந்த நிலையில்,
அடுத்தகட்டம் நோக்கி நாம் அனைவரும் எழுந்து அடியெடுத்து நிற்கின்றோம்!
வல்லாதிக்க அரசுகளின் துணைகொண்டு அவை எல்லாமும் அழித்தொழிக்கப்பட்ட நிகழ்வுக்குப் பெயர்தான் "தமிழ் இனப்படுகொலை."
அந்த இனப்படுகொலை நினைவுகளைச் சுட்டிநிற்கின்ற சொல்லே "முள்ளிவாய்க்கால்."
வீழ்ந்தாலும் வீரத்தை விதைத்து, அந்த விதை முளைவிடுவதற்கான புதிய போராட்ட அரசியல் வெளியை உருவாக்கிவிட்ட தமிழ் வீரத்தின் குறியீடுதான் "முள்ளிவாய்க்கால்", "நந்திக்கடல்" போன்ற சொற்களின் தத்துவமும் கோட்பாடுகளும்.
அந்த தத்துவமும் கோட்பாடுகளும் தான் தமிழ் இனத்தை அடுத்த கட்டத்துக்கு வழிநடாத்திச் செல்கின்றன.
வெற்றிக்கு விதையாகிய வீரர்களை நெஞ்சில் இருத்தி, விடுதலையின் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி விடுதலை நோக்கி உறுதியோடு பயணிப்போம்! நிச்சயம் விடுதலை பெறுவோம்!
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."
- த.ஞா.கதிர்ச்செல்வன்.
"முள்ளிவாய்க்கால்" குறித்த எனது முந்தைய பதிவுகள் கீழே: