தமிழீழத்தில் வாழ்ந்த நினைவுகள்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

பிரதேசத்திற்கு ஒரேயொரு பணிமனை. கிராமத்திற்கு ஓரிரண்டு தமிழீழக் காவற்றுறையினர். என விடுதலைப்புலிகளின் மிக நேர்த்தியான நிர்வாகம்.


எமது விடுதலை இயக்கத்தின் தலைமையால் போராளிகளுக்குப் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மக்களும் தாங்களாகவே பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.

அதனாலேயே விடுதலைப் புலிகளின் நிர்வாகக் காலப்பகுதியில் குற்றச் செயல்கள், சமுதாயச் சீர்கேடுகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டிருந்தது. அதையும் மீறி ஆங்காங்கே ஒருசில சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் அவை நாளடைவில் கட்டுப்படுத்தப்பட்டன.

பிரதேசத்திற்கு ஒரேயொரு பணிமனை, கிராமத்திற்கு ஓரிரண்டு தமிழீழக் காவற்றுறை உறுப்பினர்கள். வீதிகளில், கடைகளில், பள்ளிகளில், பொது மண்டபங்களில், கோயில்களில் என எங்கும் கண்காணிப்புக் 'கமராக்கள்' பொருத்தப் பட்டிருக்கவில்லை; நகைமாடங்களில் கூட காவலாளிகள் நிறுத்தப்படவில்லை; இரும்புச் சங்கிலிகளால் வாயிற்கதவுகள் பிணைக்கப் படவில்லை; வீட்டு வாசல் கதவுகளை யாரும் பூட்டி வைப்பதில்லை.

முற்றத்தில் பாய்போட்டமர்ந்து அப்படியே அங்கேயே விடியும்வரை படுத்துறங்கி எழும்பும் அச்சமற்ற வாழ்வை மக்கள் உணர்ந்து வாழ்ந்தனர்.

யாரும் தண்ணீர் போத்தல்களுடன் பயணிப்பதில்லை; யார் வீட்டு வாசலில் நின்றேனும் தண்ணீர் என்றால் அங்கே தண்ணீருடன் படலை திறக்கும் பல கரங்கள்.

வீதியில் கோழி அடிபட்டால்கூட அங்கே கூட்டம் கூடி, அது ஏது எப்படியென விசாரித்துச் செல்வார்கள்.
மக்கள் அனைவரும் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் நடத்தப்பட்டனர். நாளடைவில் மக்கள் தங்களுக்குள்ளும் அதனை வளர்த்துவந்தனர்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் இப்படித்தான் கட்டமைக்கப் பட்டிருந்தார்கள்.

அதனாலேயே விடுதலைப்புலிகளால் அவற்றைச் சாதிக்க முடிந்தது.
மிக நல்லொழுக்கத்துடன் வீட்டையும் நாட்டையும் நேசிக்கக்கூடிய மாணவ இளையோர் சமுதாயம் அங்கே வளரத் தொடங்கியிருந்தது. எந்தச் சாம வேளையிலும் ஒரு இளம்பெண் தனித்து வீதியால் சென்று வருமளவிற்கு பாதுகாப்பான நிர்வாகக் கட்டமைப்புக்குள் மக்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். 

வீதியில் படுத்திருக்கும் நாயும், ஆங்காங்கே உலவித்திரியும் ஆடு மாடு கோழி கூட பாதுகாப்பை உணர்ந்த தருணங்கள் அவை.
மக்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிணக்குகள் தொடக்கம் பெரும் சச்சரவுகள் வரை வழக்குப் பதிவுகளின்றியே சாதாரண தமிழீழக் காவற்றுறை உறுப்பினர்களாலேயே மிக இலகுவாகத் தீர்த்துவைக்கப் பட்டிருந்தது.

இதனால், மக்களுக்குள் ஒருவருக்கொருவர் குரோத மனப்பான்மைகள் வளர்வது தடுக்கப்பட்டு, சமூகப் பிணைப்புக்கள் பலப்படுத்தப்பட்டன. ஏற்றத்தாழ்வுகள் அடியோடு களையப்பட்டது.

சாதிப் பாகுபாடுகளும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும்; மதப் பிரிவினைகளும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் அடியோடு இல்லாமல் போயிருந்தது.

பாதைமாறி, திசைமாறிப் பயணித்துக் கொண்டிருந்த ஈழத்தமிழினத்தை இழுத்துநிறுத்தி தன்மானத் தமிழர்களாய்த் தலைநிமிரச் செய்ததில் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றியும் அடைந்திருந்தது.
விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் தங்களைப் பெருமையாக நினைத்து வாழ்ந்த காலம். அது, ஈழத்தமிழர் வரலாற்றின் பொற்காலம்.


குறிப்பு:- முகநூல் பதிவு : மூலம், புலவர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!