வெளித்தெரியாத வேர்: கேணல்.மனோகரன் 'மனோமாஸ்டர்'

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான கேணல்.மனோகரன் ஆசிரியரின் 9ஆம் ஆண்டு வீரச்சாவு நினைவு நாள். அவர் குறித்த நினைவுப் பகிர்வு இது. 

கேணல்.மனோகரன் (மனோமாஸ்டர்)
கதிரவேல் சந்திரகாந்தன் 
திருகோணமலை.

கேணல்.மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப் புலிளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.
இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.
போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பின்னாலும் இந்த மனிதரின் உழைப்பு உயர்ந்து நிற்கின்றது.
'ஜெயசிக்குறு' படைநடவடிக்கை காலத்தில் அவர் வன்னியில் நின்றபோது ஜெயந்தன், அன்பரசி படையணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் மட்டுமன்றி பல்வேறு படையணிகள், பிரிவுகளுக்கும் தனது படைத்துறைப் பங்களிப்பை வழங்கினார்.
முன்னாள் உயர்தரக் கணித ஆசிரியரான இவர், பௌதீகம், வேதியியல் பாடங்களிலும் சிறந்த அறிவைக் கொண்டிருந்தார். இதனால்தான் அவரால் போராளிகளை அரச மருத்துவர்களாகக் கூட ஆக்கிக்காட்ட முடிந்தது. தமிழ் அடிச்சுவடி அறியாத பல போராளிகளை இந்த மனிதரால் ஆங்கிலம் கூட பேசவைக்க முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நாட்களில் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டார். அவரது பணிகளில் சில இன்றுவரை நீட்சி பெறுவது அந்த மனிதரின் அன்றைய உழைப்பின் வெளிப்பாடு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக கடினமாக உழைத்து 29.04.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மிக எளிமையான இந்த மனிதன் பற்றிய விரிவான பதிவொன்றை வலராற்றில் பதிக்கவேண்டியது இந்தப் போராட்டத்தில் அவருடன் பயணித்த அனைவரினதும் கடமையாகும்.
******
வீரவணக்கம்:
கேணல்.மனோகரனுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சாந்தன், அந்தச் சம்பவத்தில் விழுப்புண் அடைந்திருந்து பின்னர் வீரச்சாவடைந்த மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல்.கீர்த்தி ஆகியோரையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவில் நிறுத்தி இவர்கள் அனைவருக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
********
கேணல்.மனோகரன் ஆசிரியர் குறித்து அரசியல் ஆய்வாளர் திரு.இதயச்சந்திரன் அவர்கள்  தனது முகநூலில் பதிந்திருக்கும் அவரது நினைவுக் குறிப்பு பின்வருமாறு:
"என் இளமைக்கால நண்பன். வீரச்சாவடையும் வரை அவனோடு பேசிக்கொண்டிருந்தேன். 29.04.2009 அன்று குருவியிடமிருந்து துயரச்செய்தி வந்தது. 'அண்ணே எறிகணை வீச்சில் வாத்தி இறந்துவிட்டார்'. இப்படி எத்தனையோ இழப்புகள். வலிகளால் நிறைந்தது எம் வாழ்க்கை."


Parani Krishnarajani

பரணி கிருட்ணரயனி அவர்களின் பதிவு:
கருணாவை உருவாக்கிய ஆளுமை மட்டுமல்ல, கருணாவின் துரோகத்தினால் தடம் புரள இருந்த தமிழீழ வரலாற்றை மீள ஒருங்கிணைத்த வெளியில் தெரியாத வேர்களில் ஒன்றான கேணல் மனோ மாஸ்டர் நினைவு நாள். 
கருணா வரலாற்று துரோகத்தை இழைத்தபோது அப்போது தராக்கி சிவராமின் பெயரும் கேள்விக்குட்படுத்தப்பட்டது.
எனக்கு தெரிந்த வரையில் அப்போது தராக்கி சிவராம் ஒருத்தரை தொடர்பு கொண்டு அவருக்கு மட்டும் தன்னிலை விளக்கம் அளித்தார்.
அவர்தான் கேணல் மனோ மாஸ்டர்.
அடுத்து கருணாவின் துரோகத்தைக் கண்டித்தும் வன்னி பின் தளத்தின் தேவை குறித்தும் அதன் படைத்துறை மூலோபாய சிந்தனைகளை விபரித்தும் சிவராம் "வீரகேசரியில்' கருணாவை விளித்து ஒரு கடிதம் எழுத முன்பாகவும் சிவராம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு ஆளுமை கேணல் மனோ மாஸ்டர் மட்டுமே..
அன்று மனோ மாஸ்டர் சிறிது சலனப்பட்டிருந்தாலும் வரலாறு வேறு வகையில் எழுதப்பட்டிருக்கும்..
'வெற்றி தோல்வி முக்கியமில்லை, அடுத்த தலைமுறைக்குத் தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்' என்ற தலைவரின் கோட்பாட்டிற்கமைவாக அன்று காய்களை நகர்த்தி தென் தமிழீழத்தின் மீது விழ இருந்த கறையை துடைத்து தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத்தியவர் மனோ மாஸ்டர்.
****

Nilavan Leema என்னும் முகநூலைக் கொண்டவர் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்:
"கேணல்.மனோகரன் ஆசியர் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆணிவேராவார். மட்டு/அம்பாறை மாவட்டங்களில் எண்ணற்ற போராளிகளை பயிற்சி அளித்து தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தியவர். அது மட்டுமின்றி சிங்கள இராணுவ முகாம்களைத் துல்லியமாக வேவுபார்து, அந்த முகாம்களைத் தாக்கி அழித்திடும் வரைகும் இவர் உறங்குவதில்லை. தலைவர் அவர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர். இந்த உன்னதமான வீரனைப் பற்றிய பதிவினை - இவர் வளர்த்த ஏராளமான போராளிகள் இன்னும் உள்ளார்கள் - அவர்களில் மருத்துவர் திரு.வாமன் உட்பட பலர் உள்ளார்கள் - இந்த வெளிவராத சூரியனின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவது, உடன் இருந்த போராளிகளின் கடமையாகும். நன்றி, வணக்கம்."

குறிப்பு:-  தமிழன் வன்னிமகன் என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!