தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சியில் நவீனரக ஆயுத தளபாடங்களின் சூட்டுவலு பிரதானமானதாக இருந்துவந்ததென்பது முல்லைப்படைத்தள வெற்றியோடு ஓயாத அலைகளாகப் பரிணமித்த விடுதலைப் புலிகளின் பல வலிந்த தாக்குதல் வெற்றிகள் உறுதிப் படுத்துகின்றன.
சிங்களத்தால் முன்னெடுக்கப்பட்ட பாரிய படையெடுப்பான யெயசிக்குறு எதிர்ப்புச் சமர்கள், அதனை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் தொடர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் வடபோரரங்கில் சிறிலங்காப் படைகளின் வலிமைமிகு முப்படை (கூட்டுப் படைத்) தளமான ஆனையிறவுப் பெரும்படைத்தள வீழ்ச்சிக்கான பன்முனைச் சமர்கள் போன்றவற்றில் பெரு வெற்றிகளை ஈட்டியமைக்கு நவீனரக ஆயுத தளபாடங்களின் சூட்டுவலு மிக முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
இவ்வகை நவீனரகப் போரியல் தளபாடங்களையும், பெருந்தொகையான ஆயுத வெடிபொருட்களையும் ஆழக் கடல்வழியாகப் பலநூறு கடல்மைல்களைக் கடந்து கரை கொண்டுவந்து சேர்த்ததில் கடற்புலிகளின் படையணிகள் மிக முக்கிய பணிகளை ஆற்றியுள்ளன. இதன்போது, பல கடற்புலிப் போராளிகள் கடலுடன் சங்கமித்துள்ளார்கள்.
சிங்களக் கடற்படையோடு மட்டுமல்ல சீறிடும் கடல் அலைகளோடும் மோதியே இப்பாரிய பணியை நிறைவேற்றிவந்தது கடற்புலிகளின் படையணிகள்.
ஆனையிறவுத் தளம் மீதான தாக்குதலுக்காக சுமார் ஆறுமாதகாலத்திற்கும் மேலாகத் தொடர் ஆயுத விநியோக நடவடிக்கைகளில் சர்வதேசக்கடற்பரப்பிலும் தமிழீழக்கடற்பரப்பிலும் கடற்புலிப்போராளிகள் ஈடுபட்டிருந்தார்கள்.
ஆனையிறவுப் பெருந்தள வீழ்ச்சிக்காக தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முதலே பல கடற்புலிமறவர்கள் தங்கள் உயிர்களைக்கொடுத்து கடற்தாய் மடியிலே கண்மூடிப்போயிருந்தார்கள்.
அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்க நடவடிக்கை வெற்றிகரமாக கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பிரிகேடியர் பால்ராச் தலைமையிலான 1200 புலிவீரர்களை ஆழ்கடலால் எடுத்துச்சென்று - சிறிலங்கா கடற்படையின் மூர்க்கமான கடல் யுத்தத்தை எதிர்கொண்டு, இசிறிலங்கா வான்படையின் தொடர் குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியில் - சாதுரியமாக படகோட்டிச்சென்று,
விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணிகளையும் படைக்கலங்களையும் சுமந்துசென்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் படகுத்தொகுதிகள் பத்திரமாகத் தரையிறக்கியிருந்தன.
அதுவானது, உலகவரலாற்றில் "நோர்மண்டி" தரையிறக்கத்திற்கு நிகரான தரையிறக்கமாக இராணுவ வல்லுநர்களால் பேசப்பட்டு, தமிழர் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை தடம்பதித்தது.
அதேவேளை, வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கடற்பரப்பாலும், ஆனையிறவு-கிளாலி கடல்நீரேரி ஊடாகவும் ஆனையிறவுப் பெரும் படைத் தளத்துக்கான சிறிலங்காப் படைகளின் கடற்போக்குவரத்து உதவிகள் அனைத்தையும் வழிமறித்து தொடர் கடற்தாக்குதல்களில் இரவுபகலாக கடற்புலிகள் ஈடுபட்டனர்.
சிறிலங்கா கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க நடவடிக்கைகள் அனைத்தும், காப்பு-மறைப்புகள் எதுவுமற்ற வெட்டைவெளிக் கடற்பரப்பில் - சிறிலங்காவின் வான் தாக்குதல்களையும் எதிர்கொண்டு - தீரமுடன் போராடி, முற்றாகத் தவிடுபொடியாக்கியது எமது கடற் சண்டைப்படகுத் தொகுதிகள்.
இந்த ஆனையிறவுப் பெருந்தள வெற்றிகரத் தாக்குதல் நடவடிக்கைகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி வீரமறவர்கள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களுக்கும் இந்நாளில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
---
புலவர்
கடற்புலிகள்.
குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.