ஆழ்கடலில் யுத்தநிறுத்தம் இல்லையென கைவிரித்த நோர்வே!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
நோர்வேயின் நடுநிலைமையிலான சமாதான காலத்தில் 10.03.2003 அன்று, அனைத்துலகக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பலான எம்.ரி.கொய், சிறிலங்கா கடற்படையால் தாக்கப்பட்டபோது, எதிரியிடம் பிடிபடாது தங்கள் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான 11 மாவீரர்களின் ஒரு வரலாற்றுப் பதிவு.

















யுத்தம் நின்று சமாதான உடன்படிக்கை கைச்சாத்தாகி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருந்தன. சர்வதேசக் கடற்பரப்பில் ஆயுதவிநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எமது கப்பல் தொகுதிகள் தற்கால ஓய்வு நிலைகளுக்குச் சென்று துறைமுகங்கள் எதுவுமற்ற நட்டநடுக்கடலின் அலைமடியில் அசைந்துகொண்டிருந்தது.

பசுபிக் சமுத்திரத்திலும், இந்து சமுத்திரத்திலும், வங்கக் கடலிலும் பல வருடங்களை அந்த அலைகடலின் மடியின் மேலே இரவுபகலாய் நீர்கிழித்தோடிய நீலப்புலிகள், பல வெற்றிச் சமர்களுக்கெல்லாம் வித்திட்டுநின்ற வீரக் கடற்புலிகள் கரையேறும் நினைவுடனும் தாய்மண்ணில் கால்பதிக்கும் கனவுடனும், பாசத் தலைவனையும் பழகிய போராளிகளையும் பார்த்து மகிழ்ந்திடும் உல்லாசக் களிப்புடனும், தாம் உயிருடன் இருப்பதை உறுதிசெய்வதற்காய் விடுமுறையில் வீடுசென்று உறவுகளோடு பாசமாய் மகிழ்ந்திடலாமெனும் சுகமான சுமையுடனும், இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகள் நிழலாட அந்தச் சமுத்திரக் கடல்களில் வலம்வந்து கொண்டிருந்தார்கள்.

இந்திய ஏகாதிபத்தியம் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கிய "சயுரா" எனப்படும் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலும் மேலும் இரண்டு சீனாவின் "சங்காய்" வகை ஆழ்கடல் ரோந்துக் கலங்களான "நந்தமித்திர", "சுரனிமல" என்கிற கலங்களும் கடற்புலிகளின் அந்த விநியோகக் கப்பலை வழிமறித்தன.

வழிமறித்த சிறிலங்காவின் கடற்படை எமது கப்பலை சோதனையிடப் போவதாக்கூறி கப்பலை நிறுத்தச்சொல்லி அறிவிப்புக் கொடுத்தது. ஆனால், அதனை அனுமதிக்க முடியாதென கப்பலின் கப்டன் சிலம்பரசன் உறுதியாகக் கூறிவிட்டான். அதேவேளை, தளபதி சூசையண்ணைக்கு தகவலை வழங்கி நிலைமையை விளக்கியிருந்தான்.

புதுக்குடியிருப்பு முகாமொன்றில் பிலாமர நிழலில் அமர்ந்திருந்து சமாதான முன்னெடுப்புகள் பற்றி கடற்புலிகளின் இளநிலைத் தளபதிகளுடன் உரையாடிக் கொண்டிருந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள், இச்செய்தியால் கொதித்துப்போனார்.
எமது தாக்குதல் படகுத் தொகுதிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு தலைவரிடம் சென்றுவிட்டார். இவ்விடயத்தை நேரடியாகவே தலைவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அண்ணைக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

அதேவேளை, சிறிலங்கா அரசிற்கும் அன்று சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுநிலை வகித்த நோர்வே தரப்பிற்கும் தெரிவிக்குமாறு ஒரு செய்தியையும் கூறியிருந்தார்.

தலைவர் கூறிய செய்தியில்....
"இலங்கைக் கடற்பரப்பு எல்லைக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் எமது கப்பல் சிறிலங்கா கடற்படையால் வழிமறிக்கப் பட்டதை சமாதான முன்னெடுப்பு களிலிருந்து எம்மை விலகிச்செல்லும் நிர்ப்பந்தத்தை தோற்றுவிப்பதற்கான நடவடிக்கையாகவே பார்க்கின்றோம். எம்மை ஆத்திரமூட்டி மீண்டும் போரைத் தொடங்கவைத்து சமாதானத்தில் எம்மை அக்கறையற்றவர்களாக உலகத்தை நம்பவைக்கவே இது மேற்கொள்ளப்படுகிறது."

"நோர்வேயின் அனுசரணையுடனான இந்த சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சிகளின்போது எமது கப்பலுக்கும், போராளிகளுக்கும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமானால் அதற்கு நோர்வே அரசே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்."

"தொடர்ந்தும் இப்பேச்சுவார்த்தையை நீடிப்பது அர்த்தமற்றதாகிப் போய்விடும்” என வலியுறுத்தியிருந்தார்.

சமாதானத்தில் விடுதலைப் புலிகளுக்கிருக்கும் அக்கறையையும், ஆர்வத்தையும், நம்பிக்கையையும் சிங்களத் தரப்பினருக்கும் நோர்வேயின் சமாதானத் தூதுவராகச் செயற்பட்ட எரிக் சோல்கெய்மிற்கும் தெளிவாக விளக்கியிருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள், சிங்களத் தரப்பு சமாதானக் குழுவின் தலைவர் ஜி. எல். பீரிசிடம் உடனடியாக எமது கப்பலைவிட்டு அகன்றுவிடுமாறு சிறிலங்கா அரசிற்கு கூறுமாறு கேட்டிருந்தார்.

இதன்போது, நோர்வேயின சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் இச்சம்பவத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவற்றை தாம் சுமுகமாகத் தீர்த்துவிடுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.


எமது கப்பலைச் சுற்றிவளைத்திருந்த சிறிலங்கா கடற்படை தொடர்ந்து கப்பலைச் சோதனையிடப் போவதாகவும் இல்லையேல் தாக்குதல் தொடுக்கப் போவதாகவும் மிரட்டிக் கொண்டிருந்தது. பல மணித்தியாலங்கள் கடந்துவிட்ட நிலையில் சிறிலங்காக் கடற்படை முதலாவது பீரங்கிச் சூட்டை எமது கப்பலை நோக்கிச் செலுத்தியது. கப்பலின் மேற்தளத்தில் அது பட்டு வெடித்ததை கப்டன் சிலம்பரசன்  சிறப்புத் தளபதி சூசை அவர்களுக்குத் தெரிவித்தான். 

கப்பல் மீது தாக்குதல் தொடுத்து, அக்கப்பலைச் சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் கொண்டுசெல்வதன் மூலம் "கடற்புலிகள் ஆயுத விநியோக நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர், விடுதலைப் புலிகள் சமாதானத்தில் விருப்பமற்றவர்கள், அவர்கள் போரையே விரும்புகின்றனர், அதனாலே அவர்கள் சமாதானத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதாகப் பாசாங்கு செய்து போருக்கான தயார்ப்படுத்தலில் தம்மைப் பலப்படுத்தி வருகின்றனர்," எனும் குற்றச்சாட்டை சுமத்திவிடலாமென சிங்களம் திட்டமிட்டிருந்தது. 

கப்பலிலுள்ள போராளிகளை உயிருடன் பிடித்து அவர்களைச் சிறைப்படுத்தி, கொடுமைப்படுத்தி இதனைச் சாதித்துவிடலாமென சிங்களம் கனவு கண்டது.

ஆனால், அத்திட்டத்தை ஏற்கனவே மூத்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் இழப்பிற்கு காரணமாய் அமைந்த கடற்புறா படகு சம்பவத்தின்போது பட்டுணர்ந்துகொண்ட தலைவர், தளபதி சூசையண்ணைக்கு அதனை நினைவூட்டி முடிவையும் கூறி அனுப்பியிருந்தார்.

தலைவர் எதிர்பார்த்தது போலவே சிறிலங்கா கடற்படை நடந்துகொள்ள, சிறிலங்கா அரசும் அதற்குத் துணைபோன நோர்வேயின் எரிக் சோல்கெய்மும் கபடநாடகம் ஆடத்தொடங்கினர். இறுதியாக, கடலில் யுத்த நிறுத்த உடன்படிக்கை இல்லையெனக் கூறி, கைவிரித்தது  நோர்வே.
சிறிலங்காக் கடற்படை சரமாரியாகப் பிரங்கிச் சூடுகளை எமது வணிகக் கப்பலை நோக்கிச் சுட்டுக்கொண்டு, அதனை அண்மித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் தொடர்புகள் இல்லாமல் போனது. 

மீண்டும் சிலம்பரசனின் குரல்....
"போராளிகளுக்குக் காயம். நாங்கள் கப்பலைத் தகர்க்கிற முடிவிற்கு வந்திட்டம். எங்கட கப்பலையோ அல்லது எங்களில் ஒருவரைக்கூடவோ அவனைத் தொட விடமாட்டம். எங்கட சாவுகள் சமாதானத்தில் நாம் எவ்வளவு அக்கறையானவர்கள் என்பதை உலகத்துக்கு எடுத்துக்காட்டும். தொடர்ந்து போராடுங்கோ, நாங்கள் வெல்லுவம். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம். கடலிலே காவியம் படைக்கிறோம்."

தொடர்புகள் துண்டித்துக்கொண்டது.

நாம் சென்று சண்டையிட்டு மீட்கமுடியாத தொலைவில், நட்டநடு ஆழ் கடல் வெளியில், பெரும் வெடியதிர்வுடன் தங்களைத் தாங்களே கப்பலுடன் தகர்த்துக்கொண்டார்கள். அவர்கள் அந்தக் கடலன்னை மடியிலே கண்ணுறங்கிப் போனார்கள். அந்தக் கப்பலின் கப்டனும் கடற் கரும்புலியுமான சிலம்பரசனும் அவனோடு கூடவே பத்து வீரக் கடற்புலிகளும் வீர வரலாறாகினார்கள்!


---
மூலம்:-
புலவர்/தும்பன்
கடற்புலிகள்.

குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!