விலாசம் மறந்த வீரனின் சுவடுகள்: கட்டளைத் தளபதி யெயம்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசம் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத முகவரியாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி யெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன்.

கதாநாயகத் தகுதியையோ, கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல 'சொல்லுக்கு முன் செயல்’ இதுவே விடுதலைப் புலிகள் வரலாற்றின் வெற்றி. திறமைகள் மட்டுமே அந்தந்தத் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாசறைகளிலிருந்து வளர்ந்து வெளிவந்த வரலாறுகளே யெயமண்ணா போன்ற தளபதிகளுக்கான முகவரிகளும் தகுதிகளும். 

வன்னிக்கிராமங்களில் ஒன்றான பாவற்குளம் மண்தான் சுவேந்திரன் என்ற யெயமண்ணாவைப் பெற்ற தாய்மடி. பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் தொடந்து வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தார். சிங்களம் திட்டமிட்டு தொடர்ந்த தமிழின அழிப்பானது வன்னிக் கிராமங்களையும் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது. 

சிங்கள எல்லைக் கிராமங்களிலிருந்த பாவற்குளம் போன்ற கிராமங்களின் வாழ்வுரிமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது. விவசாயத்தையே பலமாகக் கொண்ட இந்தக் கிராமங்களில் விவசாயிகளின் கால்நடைகளைத் திருடுவது முதல் இங்கு வாழ்ந்த தமிழர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத காலம் அது. ஒவ்வொரு தமிழரையும் போராடு என்ற விதியையும் எழுதிய காலமும் அதுவே.

காலம் சுவேந்திரனை புலியாக்கியது. இந்தியாவில் 3வது பயிற்சிப்பாசறைப் போராளியாய் புடம்போட்டு வளர்த்துத் தாயகம் அனுப்பியது. அச்சுறுத்திக் கொண்டிருந்த சிங்களப் படைகளுக்கு அச்சுறுத்தலாக யெயமண்ணா ஆயுதம் தாங்கிய வீரனாய் தோழர்களுடன் நிலத்தில் வந்திறங்கிய போது, அந்தப் பாதங்கள் பதிந்த இடங்களெங்கும் தலைநிமிர்ந்தது. 

வன்னியின் வீரவரலாற்றுக் கதைகளாக வீழ்ந்த வீரத்தின் நிமிர்வாக யெயமண்ணாவின் பணிகள் வன்னி நிலத்திலும் வன்னிக் காடுகளிலும் ஆரம்பித்திருந்தன. இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய யெயமண்ணா புதிய போராளிகளை உருவாக்கும் பொறுப்பில் பணியை ஆரம்பித்தார். 

துணுக்காய் தென்னியங்குளம் பயிற்சி முகாமின் பயிற்சியாசிரியராகினார். இங்கிருந்தே வன்னிக்கான பணிகளுக்கான அணிகள் பிரித்து அனுப்பப்பட்டதன. இங்கிருந்தே யெயமண்ணா வவுனியா மாவட்ட பணிக்காக போராளிகளோடு அனுப்பப்பட்டிருந்தார். 

ஆரம்பகாலச் சண்டைகளான கொக்குளாய் தாக்குதல் அணியில் ஒரு அணியோடு களம் சென்றது மட்டுமன்றி, பூநகரி 4ஆம் கட்டைச் சண்டை, ஒட்டுசுட்டான் 'பொலிஸ் நிலையம்' மீதான தாக்குதல் எனப் பல சண்டைகளிலும் பங்கேற்றிருந்தார். ஆரம்பகாலம் மிகவும் சிரமங்களைச் சந்தித்த கடுமையான சண்டையனுபவங்கள். பின்னர் பெரும் தளபதியாய் நிமிரும் வரையான யெயமண்ணாவின் ஆற்றலின் அடையாளங்களும் சாதனைகளும் கால நதியோடு கைகோர்த்துக் கொண்டே நடந்தது. 

ஆண்டு 1987களில் வன்னி மாவட்டத்தின் பொறுப்பாளராகச் செயற்பட்ட யெயமண்ணாவின் பணிகளானவை மிகவும் முக்கியம் வாய்ந்தவை. போராளிகள் மக்களுடன் மக்களாக கிராமங்களில் விழித்திருந்த காலங்கள் அது. அக்காலத்தில் காட்டில் தலைவருக்கு மெய்ப்பாதுகாவலில் ஈடுபட்ட போராளிகள், தளபதிகளுடன் தளபதி யெயமண்ணாவும் தலைவனைக் காக்கும் பணியில் ஈடுபட்டு, தலைவருக்கு அருகில் தனது பணிகளைத் தொடர்ந்தார். 

புதிய போராளிகளை உருவாக்குதல் தொடக்கம் அந்தக்கால இறுக்கத்திற்கு ஏற்ப திட்டமிடல் பணிகளை விரிவுபடுத்துதல், செயற்படுத்துதல் என ஓய்வு மறந்து இயங்கிக் கொண்டிருந்த போராளி தளபதி யெயம். பல சண்டைகளில் தனது ஆழுமையை, சாதுரியத்தை வெளிப்படுத்திய, சத்தமில்லாத சாதனையாளன். 

இயல்பிலே அமைந்த தனித்துவப் பண்புகள் மக்களின் மனங்களை வென்ற தளபதியாக இனங்காட்டியது. 1990இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து புலிகளின் போரியல் வீச்சும் மாற்றம் கண்ட காலம். 1990 இற்குப் பின்னர் தலைவரின் பாதுகாப்பணியில் செயற்படத் தொடங்கினார். 

தலைவனின் நம்பிக்கை, தலைவனின் பாதுகாப்பு, போராளிகளின் அன்பையெல்லாம் பெற்றிருந்த போராளியின் தியாகத்திற்குச் சவாலாக 1993 காலப்பகுதி அமைந்தது. தலைவனை, தலைவனின் பாதுகாப்பை, தமிழரின் விடிவையுமே சிந்தித்துக் கொண்டிருந்த யெயமண்ணா அக்காலத்தில் நிகழ்ந்த அத்தனை துயர்களையும் தாங்கினார். 

தனது கொள்கையில் என்றுமே தலைவனுக்குரிய போராளியாகவே வாழ்ந்தார். அக்காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் யாவையும் உறுதியோடு கடந்தார். தளபதியாக என்றும் கோலோச்ச விரும்பாத தளபதி அவர். ஒரு வீரவேங்கையாக இறுதிவரை வாழ்ந்து, வன்னியில் அமைந்த துயிமில்லம் ஒன்றில் தன்னை விதையாக்கவே விரும்பிய, சுயநலம் மறந்த, மக்கள் மனங்களை வென்ற மாவீரன். 

“என்னதான் நடக்குது நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் கலங்காதே. ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே,” என்ற பாடலை சக தோழர்களுக்கு எழுதிக்காட்டி தைரியம் கொடுத்து, நடந்து முடிந்த எல்லாத்துயரையும் தலைவனை நினைத்தபடியே வென்றார். அரிச்சந்திரன் கதையை மட்டுமே அறிந்த போராளிகளுக்கு முன்னே அரிச்சந்திரனாய் வாழ்ந்துகாட்டிய அதிசயம்தான் தளபதி யெயமண்ணா. 

'உண்மைகள் ஒருபோதும் உறங்காது' என்ற உண்மையை யெயமண்ணாவின் காலம் மீண்டுமொருமுறை உணர்த்தியிருந்தது. அமைதியோடு ஏற்பட்ட கசப்புகளை, கவலைகளையெல்லாம் தகர்த்தெறிந்து மெல்லெனப் பாய்ந்தோடிய யெயம் என்ற நதியின் கால்கள் உண்மையை வெளியில் கொண்டுவந்து தன் இலக்கில் உறுதியோடு பயணித்தது. 

காலம் 1997, வன்னியை இரு துண்டமாகப் பிரித்து உட்புக முயன்று கொண்டிருந்த சிங்களப்படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிங்களத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான சகல விநியோகமும் கடல் மார்க்கமாகவே நடந்து கொண்டிருந்தது. 

அதுவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தது. சிங்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வவுனியா நகருக்கும் யாழ்ப்பாணத்திற்குமான முதன்மை வழியான ஏ-9 நெடுஞ்சாலையானது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தை ஏ-9 ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏ-9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றினால் மட்டுமே சிங்களத்தால் இலகுவான வழங்கலை யாழ் பகுதிக்குச் செய்ய முடியும். ஏ9 பாதையை கைப்பற்றுவதற்கு முதல் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பாதையைப் பிடிப்பதற்கான முயற்சியில் ’எடிபல’ என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது சிங்களம். 

அந்நடவடிக்கையின் மூலம் தமிழர்களின் வீடுகள் சொத்துக்கள் பெரும் அழிவை எதிர்கொண்டு இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலத்தைவிட்டு இடம்பெயர்ந்தார்கள். அடுத்த கட்டமாக 13.05.1997அன்று 'யெயசிக்குறு' எனப் பெயரிடப்பட்டு சிங்களம் ஏ-9 பாதையைக் கைப்பற்றும் நோக்கில் 20ஆயிரம் படைகளைக் கொண்டு போரைத் தொடங்கியது. 

இந்நடவடிக்கையானது ஒரேநாளில் இருமுனைகள் ஊடாக சிங்களம் படைநகர்வுகளை ஆரம்பித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தையை நோக்கிய ஒரு நகர்வும், மணலாற்றிலிருந்து நெடுங்கேணியை நோக்கிய மறு நகர்வுமாக அவை இருந்தன. இந்நடவடிக்கை மூலம் ஓமந்தையைக் கைப்பற்றி, ஏ-9 பாதையூடாக முன்னேறும் படைகளும் நெடுங்கேணியிலிருந்து முன்னேறும் படைகளும் இணைந்து புளியங்குளம் வரை கைப்பற்றுவது; அத்துடன், அவ்விரு நகர்வுகளும் புளியங்குளத்தில் சந்தித்து, அதிலிருந்து கிளிநொச்சியைக் கைப்பற்ற ஏ-9 பாதைவழியே முன்னேறுவது என்ற திட்டமிடலுடன் தொடங்கப்பட்டது. 

அரசின் உச்ச பலமும் இந்நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. வான், தரை உள்ளிட்ட சகல ஆதரவோடும் நகரத் தொடங்கியது சிங்களம். புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் நிகழ்ந்த பெரும் சமர்களாகும். நீண்டகாலம் நீடித்த இச்சமரில் எதிரியால் மாங்குளம் வரையுமே நகர முடிந்தது.

புலிகளின் போராட்ட வரலாற்றில் 'யெயசிக்குறு' சமரானது புதிய வடிவத்தில் நடைபெற்ற சமராக வரலாற்றில் பதிவாகியது. இப்பெரும் சமரில் களமுனைத் தளபதிகளான கேணல் தீபன், கேணல் யெயம் ஆகியோரின் படையணிகளின் பங்கானது அந்தச் சமரின் வெற்றியில் கணிசமான பங்கை வழங்கியன.

அடுத்து, புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட கிளிநொச்சி முகாம் அழிப்பு நடவடிக்கையில் திருவையாறு பகுதியால் சென்ற அணியின் தளபதியாக யெயமண்ணாவும் அவரது படையணியும் சென்றிருந்தது. புலிகளால் வெல்லப்பட்ட கிளிநொச்சி வெற்றியில் யெயமண்ணாவும் அவரது படையணியும் தங்களுக்கான கடமையை நேர்த்தியாக முடித்தார்கள். 

மீண்டது கிளிநொச்சி. எப்போதுமே தனக்கு வழங்கப்படும் பணியை நேர்த்தியுடன் செய்து முடிக்கும் தளபதியாக யெயமண்ணா விளங்கினார். வெற்றி தந்த சமரான கிளிநொச்சி மீட்பிலும் அவர் தனது பணிகளை செவ்வனே நிறைவேற்றினார். அடுத்து, வீழ்ந்தது ஆனையிறவுப் பெருந்தளம்.

எத்தனையோ இழப்புகளை 1991இல் இருந்து ஆனையிறவு மீட்புக்காக நேர்ந்தன. அவை எல்லாவற்றின் வெற்றியாக 2000ஆம் ஆண்டு புலிகளால் ஆனையிறவுப் பெருந்தளம் வெற்றிகொள்ளப்பட்டது. உப்பளக்காற்றில் வாசனையில் யெயமண்ணாவின் பணிகளும் கலந்தேயிருந்தன. 

ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்மண்நோக்கிய புலிகளின் பாய்ச்சலிலும் யெயமண்ணாவின் தடங்களும் அந்த வெற்றியில் பதிந்தன. 2001இல் நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையிலும் தளபதி யெயம் என்ற ஆழுமையும் ஆற்றலும் வெற்றிக்கு உரமாக விளங்கின. 

காலஓட்டம் யெயமண்ணாவின் திறமைகளைத் தன்னோடு எழுதிக் கொண்டே சென்றது. புலிகளின் வேவு அணியின் வளர்ச்சியானது புதிய பரிமாணத்தையும் புதிய வடிவத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டிய காலத்தேவை எழுந்தபோது, வேவு அணியின் பொறுப்பு யெயமண்ணாவுக்கு வழங்கப்பட்டது. 

அதிகளவிலான போராளிகளை உள்வாங்கி, உருவாக்கி, வேவு அணியின் வீரியத்தை வேகப்படுத்திய பெருமையின் வேரில் யெயமண்ணாவின் அர்ப்பணிப்பும் தியாகமும் வெளியில் தெரியாதவை. ஆனால், அவருடைய அந்தப் பணிகள் போராட்ட வரலாற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.

ஆண்டு 1998, மன்னார் மாவட்டத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு மன்னாரில் தனது பணிகளை ஆரம்பித்திருந்தார். போராட்டத்தில் இன்னொரு இக்கட்டான காலத்தை புலிகள் எதிர்கொண்ட காலமாக அமைந்த அக்காலத்தில் யெயமண்ணாவின் ஆற்றலும் சாதனைகளும் காலங்களால் மறக்க முடியாத பதிவுகள். 

அப்போது தலைவரால் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் மாவீரர் துயிலுமில்லங்கள் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்பு, பாதுகாப்பு, கவனிப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உரிய கடமைகளுடன் ஒன்றாக வழங்கப்பட்டிருந்தது. 

களமுனைப் பகுதிகளின் பிரதான தளபதிகளான தளபதி தீபன் கிளிநொச்சி துயிலுமில்லம், தளபதி பானு வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம், தளபதி துர்க்கா ஆலங்குளம் துயிலுமில்லம், தளபதி கேணல் சங்கர் முள்ளியவளை துயிலுமில்லும், நிதித்துறை சிறப்புப் பொறுப்பாளர் பாலதாசு பண்டிவிரிச்சான் துயிலுமில்லம், கேணல் ரமேசு விசுவமடு துயிலுமில்லம் என வழங்கப்பட்டிருந்தது. 

தமிழீழக் கனவோடு களமாடி வீரச்சாவடையும் ஒவ்வொரு மாவீரரின் கல்லறைகளையும் தானே நேரில் நின்று வடிவமைப்பாளர்களோடு தானும் பணியாளனாகி மாவீரர்களின் கல்லறைகளை வடிவமைத்து முழுமையான வெற்றியை அடைந்தவர் என்றால் அதில் யெயமண்ணாதான் முதன்மையானவர். 

மாவீரர் துயிலுமில்லங்களை வடிவமைக்க வழங்கப்படும் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. ஆனால், கொடுக்கப்பட்ட வளங்களை வைத்து மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் மாவீரர் துயிலுமில்லங்களை செய்து முடித்த தளபதியாக தலைவரால் பாராட்டுப் பெற்ற ஒரேயொரு தளபதி யெயமண்ணாவே. 

ஆண்டான்குளம் துயிலுமில்லத்தின் உறுதியின் உறைவிடத்தின் கல்லறை வடிவமைப்பை மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். அதேபோல மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தின் கல்லறைகள் வடிமைப்பில் யெயமண்ணாவின் பணியை, அர்ப்பணிப்பை மறக்கவே முடியாதளவு சிறப்பாகச் செய்து முடித்தார். 

மாவீரர் துயிலுமில்லங்களில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறைகளில் சிலமணிகள் ஓய்வெடுத்துக் கொண்டு கால நேரமின்றிச் செயற்பட்டு மாவீரர்கள் உறங்கிய மாவீரர் உறங்குமிடங்களை உருவாக்கும் பணியில் ஒரு சாதாரண பணியாளனாகச் செயற்பட்டவர் தளபதி யெயம். ஒரு தளபதியாக அந்த மாவட்டத்தின் நிர்வாக விடயங்கள் முதல் கிராமங்கள் ரீதியான நிர்வாக ஒழுங்குகளையெல்லாம் ஒருங்கே கவனிக்கும் பாரிய பொறுப்பினை இலகுவாகச் செய்து கொண்டதோடு மக்களோடு மக்களாகி அவர்களது பிரச்சனைகள், இடைஞ்சல்களை அறிந்து அதற்கான தீர்வை வழங்கும் முதன்மையான போராளியாகத் திகழ்ந்தார். 

புலிகளின் அரசியல் நிர்வாக ஒழுங்குகளில் எங்கேனும் ஏற்படும் மக்களுக்கான அசௌகரியங்களை என்றுமே அலட்சியம் செய்ததில்லை. அங்கெல்லாம் தானே நேரடியாக நின்று மக்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை தலைமைக்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்கிற துணிச்சல் மிக்க மனிதன். 

குறிப்பாக தமிழீழ ஆயத்துறையின் வரி அறவீட்டு விடயத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளைத் தானே தலைமையிடம் கொண்டு சென்று சரியான தீர்வையும் பெற்றுக் கொடுத்து, ஆயத்துறைப் போராளிகளின் தொடர்ந்த பணிகளுக்கான வழிகாட்டியாகவும் மாறியிருந்தார். மக்களின் மனங்களை வென்று, மக்களோடு நல்லுறவைப்பேணி, மக்களுடனேயே வாழ்ந்தார் தளபதி யெயம். 

போராட்டத்திற்குத் தேவையான ஆட்திரட்டலை மிகவும் திறம்படச் செய்தவர்களில் யெயமண்ணாவின் பங்கு மறக்க முடியாதது. தனது பேச்சாற்றலால் உண்மைகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி, பறிபோகும் நிலத்தை மீட்க போராளிகளை இணைக்க அந்த நாட்களில் மன்னாரில் யெயமண்ணாவின் பங்கை காலத்தினால் மறக்க முடியாது. 

சமாதான காலம். ஆற்றலின் வடிவமாய் அமைதியின் உருவாய் கடந்து வந்த பாதைகளின் காலத்தை வென்ற போராளியாயிருந்த தளபதி, அரசியல் பேச்சு மேடைகளில் கூட வெளிநாடுகளிற்கும் சென்று கலந்துகொண்டு வந்திருந்தார். என்றுமே தனது வாழ்வை தனது தாயக விடுதலைக்காகவே கொடுத்து வாழ்ந்ததோடு தனது வாழ்க்கைத் துணைவியையும் போராளியாகவே தேர்ந்தெடுத்தார். 

வெளிநாட்டு வாழ்வையும் பணபலத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையெல்லாம் பெற்றிருந்தும், கடைசிவரை தலைவனுடன் தலைவனின் பாதையில் சென்றுமுடியும் நினைவோடே இறுதிக்காலம் கணவன் மனைவி இருவருமே களத்தில் நின்றார்கள். 

விடுதலைப் புலிகளின் பல ஆள ஊடுருவும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியிருந்தார். மட்டு மற்றும் அம்பாறை மாவட்டப் பகுதிகளில் பல ஆழ ஊடுருவல் தாக்குதல்களை வழிநடத்தியவர் கேணல் யெயம் அவர்கள்.

2006 தொடக்கம் 2007 4ஆம் மாதம் வரையிலும் கிழக்கு மாகாணத்தில் நின்று அந்தக் களங்களை வழிநடத்திய ஆற்றலின் வடிவம். கேணல் யெயம் என்னும் பெயரைக் கேட்டாலே இலங்கை இராணுவம் கிலி கொள்ளும் அளவுக்கு அவருடைய தாக்குதல் உத்திகள் இருந்தன. 

தேசியத் தலைவரின் நம்பிக்கைக்குரிய போராளியாக அவர் என்றும் விளங்கினார். குடும்பிமலைப் பகுதியை இராணுவம் கைப்பற்ற முன்னேறிய வேளை, அங்கே நிலைகொண்டு இராணுவத்துடன் பாரிய போரைத் தொடுத்தவர் பிரிகேடியர் யெயம் அவர்கள். குடும்பிமலைப் பகுதியைத் தொடர்ந்து தக்கவைத்துப் போரிடுவதற்கு, அப்பகுதிக்கான ஆயுத வெடிபொருள் விநியோகம் இல்லாத நிலையில், வெடிபொருட்கள் தீர்ந்துகொண்டிருந்ததால், அந்தப் பகுதியை விட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கலை மேற்கொண்டனர். பின்னர், அங்கிருந்து காட்டு வழியூடாக, எதிரியின் பலத்த பதுங்கித் தாக்குதல்களையும் முறியடித்துக்கொண்டு, கால் நடையாக அவர் தலைமையிலான ஒரு பெரிய அணியை பாதுகாப்பாக வன்னிக்குப் பின்னகர்த்தியிருந்தார்.

எப்போதுமே சுயநலமற்ற தேசக்காதலை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழ்ந்த எளிமையின் பெருமையெல்லாம் யெயமண்ணாவின் போராட்ட வாழ்வின் வித்தியாசமான சாட்சிகள். பல விடயங்களில் உதாரணமாகவும் உயர்ந்தவராகவும் வாழ்ந்து காட்டிய வரலாற்றின் புதல்வன். களத்தின் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 17ம் திகதி வரையும் களமாடிய வீரன். 

கையுயர்த்திச் சாவடையும் நிலைமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன்-மனைவி இருவரும் சுடுகலன்களோடே காவலிருந்தார்கள். 

வெளிநாடுகளில் இருந்த நண்பர்கள் யெயமண்ணாவின் துணைவி நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியே வருமாறு வேண்டினர். ''கோல்சர் கட்டீட்டன்…. பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே…,'' எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை, அகரன் ஆகிய இருவரையும் கூட மறந்து, இறுதிவரை போராடுவோம் என்ற உணர்வோடும் உறுதியோடும் நின்றார்கள். அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளும் நண்பர்களிடம் அவர்களது தேசம் மீதான காதலும் தேசியத்தலைவர் மீதான அன்பையும் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகளும் கனவுகளும் நிறைந்து கிடக்கின்றன. 

கடைசிக்கள முடிவினை உலகம் எப்படியோ எல்லாம் எழுதியும் ஆய்வுகள் செய்தும் கொண்டிருக்க, அந்த முள்ளிவாய்க்கால் கரைகளில் தங்கள் இருவரின் உயிரையும் விதைத்து வீழ்ந்து வீ(மீ)ளாத கனவுகளோடு கலந்து போனார்கள் தளபதி யெயமண்ணாவும் அவரது துணைவி நளாக்காவும்.

அவர்களது குழந்தைகளை, குடும்ப உறவுகளை, யாரையுமே எண்ணாது மண்ணுக்காகவே வாழ்ந்து, அந்த மண்ணிலேயே மடிந்து போனார்கள். மறக்க முடியாத வீரமாக…. வீரர்களாக….! 

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்துக் கொண்டன. ஆற்றல் மிக்க தளபதிகள், போராளிகளின் உயிர்கள் அந்தக் கடற்காற்றின் ஓலத்தோடு கலந்து ஒரு காலத்தின் கதையை தன் காற்றோடு சுமந்து நிற்கின்றன….! 

அந்தக் காற்றோடும் கடல் அலைகளோடும் யெயமண்ணா, நளாக்கா ஆகிய இருவருமே காலம் கடந்தும் வாழும் தம்பதிகளாக ஈழ விடுதலை வரலாற்றில் எழுதப்பட்ட வீரர்களாக எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கின்றார்கள்.
***


குறிப்பு:- 'பதிவு' இணையத்தில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!