பிரிகேடியர் யெயம் அண்ணாவுடன் சந்திப்பு!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

கடைசியாக யெயம் அண்ணாவை சாலைப் பகுதியின் முன்னரங்க மறிப்பு வரிசையில் வைத்துத்தான் சந்தித்து உரையாடியிருந்தேன். 
***
மன்னார் களமுனை, ஆரம்பத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி பிரிகேடியர் யெயம் அண்ணாவும் மற்றைய பகுதி பிரிகேடியர் பானு அண்ணாவும் கட்டளைத் தளபதிகளாகச் செயற்பட்ட வேளை, பிரிகேடியர் பால்ராச்சு அண்ணா இவர்களின் மேலாளராக ஒருங்கிணைப்புக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்தார். பின்னர் பால்ராச்சு அண்ணாவின் உடல்நிலை மோசமானதால், அந்தப் பணியை அவரால் தொடரமுடியாமல் போனது. 

அப்போது, சமராய்வுப் பணிகளுக்காக யெயம் அண்ணாவின் கட்டளைப் பணியகத்தில் இருந்து செயற்பட்ட போது அவருடன் நல்ல பளக்கம் ஏற்பட்டது. அதேவேளை, அவரது துணைவியார் நளா அக்கா அப்போது சமராய்வுப் பிரிவுக்குப் பிரிவு மாற்றப்பட்டு, எங்களோடு கடமையாற்றினார். இதனால் யெயமண்ணா, நளாக்கா ஆகியோருடன் மிகவும் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. அவர்கள் சொந்தச் சகோதரர்களாகவே எம்முடன் பளகினார்கள். மிகவும் அன்பான குடும்பம். அவருடைய கட்டளைப் பணியகத்தில் செயற்பட்ட அவரது போராளிகளும் மிகவும் பண்பான, திறமையான, உறுதியான போராளிகள். 

பணி நிமிர்த்தமாக என்ன விடயமாகச் சென்றாலும், எந்த தகவல் தேவைப்பட்டாலும் உடனடியாகவே மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, சிறந்த ஒத்துழைப்புக் கொடுத்து, நிருவாக வசதிகளை ஏற்படுத்தித் தந்தார்கள். இன்று யெயமண்ணா, அவரது மனைவி, அவரது கட்டளைப் பணியகப் போராளிகள் ஆகிய அனைவருமே (ஒருசில போராளிகளைத் தவிர) களங்களிலும் இறுதிவரையும் போரிட்டு வீரச்சாவடைந்துள்ளனர்.

இறுதியில், சாலைக் களமுனையில் நான் பணியாற்றிய போது, அங்கே கள நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக யெயமண்ணா அங்கு வந்திருந்தார். எதிர்பாராத சந்திப்பு அது. என்னுடைய பெயரைச் சொல்லி, எனது முதுகில் தட்டி நலம் விசாரித்துவிட்டு, களநிலைமைகள் பற்றி விசாரித்தார். அந்தப் பகுதிக் களமுனை நிலைமைகளை அவருக்குத் தெரிவித்தேன். சில இடங்களை நேரில் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.

அவருடன் நான் உரையாடிய கடைசிச் சந்தர்ப்பம் அதுதான். அது, 2009 தை மாதத்தின் நடுப்பகுதி என நினைக்கிறேன். (களங்களின் சமர் நிலைமைகளை விரிவாக பின்னர் எழுதவேண்டியுள்ளது)

இறுதியில், மண்ணை அணைத்து நெஞ்சில் வைத்தபடி, 'சயனைட்' குப்பி கடித்தவாறு தன்னைத் தானே சுட்டு, எந்தச் சந்தர்ப்பத்திலும் எதிரியிடம் சரணடைய மாட்டேன், இறுதிவரை போரிட்டு மடிவேன் என்பதைத் தெரிவிக்கும் விதமான அவரது வீரச்சாவுப் புகைப்படத்தையே பார்க்க நேர்ந்தது.

கனத்த உணர்வுகளோடு பிரிகேடியர் யெயம் அண்ணாவுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
ஓவியர் திரு.புகழேந்தி அவர்களைச் சந்தித்த போது எடுத்த படம்.

***
- த.ஞா.கதிர்ச்செல்வன்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!