தமிழீழத்தில் கிளிநொச்சிப் பெரு நகர்; நினைவுக் குறிப்பு!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
 கிளிநொச்சிக்குப் போவதெல்லாம் 
அந்நாட்களில் எமக்கு
அமெரிக்காவிற்குப் பயணப்படுதல் போன்றது.
பரந்தன் சந்தி கடந்ததும் வரும் 
பக்கவாட்டு வயல்களின் வாசம்
ஆம்சுரடாம் பூக்களுக்கு நிகரானது.
கனிட்ட வித்தியாலத்தடியில்
கரையும் காகங்களின் சத்தமே
எமக்கான வரவேற்புப் பாடல்.  
அன்றைய காமதேனுவிலும்,
அதன் பின்வந்த பாண்டியனிலும்,
உண்டு களிக்கவில்லையாயின்;
பாரிசு போயும் ஈபிள்கோபுரம்
காணாமல் வந்தவன்போல்
கணிப்பர் நண்பர்கள். 
கருப்பட்டியோ, சர்க்கரையோ
கந்தன் களஞ்சியத்தில் வாங்குவதே
குடும்பத்துக்குப் பெருமை.
கூரையோடுகள் கலைந்துகிடப்பினும்
கண்டி வீதி ஒக்சுபோர்ட் எனலாம்
மகாவித்தியாலயத்தை...,
அண்ணாந்து பார்த்துப் பெருமையடையும்
ஐம்பத்தைந்தாம் கட்டை கோபுரம்,
ஊரிலிருந்த என்வயதினருக்கு - அன்றெல்லாம்
உலக அதிசயம்...
பின்புறச் சந்தையூடு செல்லும்
புகையிரதத் தண்டவாளங்களில் நடந்தால்
கொழும்பு போகமுடியுமா... என்ற
குறுக்குக் கேள்விக்கு
குட்டு வாங்கியது இன்னும் நினைவு.
தண்ணீர்த்தாங்கியைப் பார்த்து;
மழைக்காளானின் மட்டற்ற வளர்ச்சியோவென
மனதுக்குள் நினைத்தது நினைக்க
இப்போது சிரிப்பு.
பச்சை வரிகீறிய
கறுப்புக்கண்ணாடி ஊர்திகள்
கடந்து செல்லும்போதெல்லாம்
கம்பீரமாய் நிமிர்ந்துநிற்கும் உள்ளம்.
இப்போதெல்லாம்;
அதை நினைத்தாலே கண்களில் வெள்ளம்.
இப்போதெல்லாம் யாரும்
எம்மளவிற்கு இரசிப்பதில்லையாம்  கிளிநொச்சியை ..மனிதரும் அந்தளவு
மனநிலையில் இல்லையாம்.
மின்சாரம் வந்து
மிளிரும் குமிழ்களாலும்
வெசாக் கூடுகளின் வெளிச்சத்தாலும்
இப்போது
மினுமினுக்கிறதாம் கிளிநொச்சி.
ஆனாலும்;
அன்றைய குப்பிவிளக்குத் தந்த
ஒளி போலில்லையாம் ...!!!
- தேவன்-

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!