மூத்த அரசியல் ஆய்வாளர் திரு.நேரு குணரத்தினம் அவர்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு தொடர்புபட்ட தனது கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். வரலாற்றுக் குறிப்புகளுக்காக அதனை சமராய்வு இணையம் இணைத்துக் கொள்கிறது:
நிகழ்வு 1:
ஆண்டு 1979இல், தமிழ் ஈழவிடுதலையுடன் தன்னை இணைத்துக் கொண்டதன்பின் இந்தியாவில் அதிகம் வதிய ஆரம்பித்தார் பாலா அண்ணா. இவ்வாறு சென்னையில் பல இடங்களில் வாழ்ந்து 1984 பிற்பகுதியில் கடற்கரை பகுதியாக பேசன்ட் நகரில் ஒரு மாடிக்குடியிருப்பில் குடியமர்ந்தார். பாலா அண்ணாவிற்கு இயற்கை நிறைய பிடிக்கும். கடற்கரையோர அந்த வாழ்க்கை அவருக்கு நிறைவே பிடித்திருந்தது. இங்குதான் நான் முதலில் 84 பிற்பகுதியில் பாலா அண்ணாவை சந்தித்தேன்.
85இல் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததும் ராயீவ் தலைமையிலான டெல்லி ஆட்சியாளர்களின் கோபம் புலிகள் மீது திரும்பியது. அப்போது பழிவாங்கும் நோக்கில் பாலா அண்ணா நாடு கடத்தப்பட்டார். இது குறித்த பல் சுவாரசியமான விடயங்களை இன்னொரு பதிவில் பார்ப்போம். தமிழகமும் தமிழர்களும் கொந்தளிக்க பாலா அண்ணா மீண்டும் சென்னை வர அனுமதிக்கப்பட்டார்.
இந்த முறுகல் நிலையைப் பயன்படுத்தி தன்னை இந்தியாவிலும் நிலைப்படுத்திக் கொள்ள சிங்களம் முனைந்தபோது தமிழின காழ்புணர்வில் ஈழத்தமிழினத்தை கருவறுப்பதில் முன்னின்ற மலையாள கூட்டத்தின் அணுசரனை கிடைக்கிறது. தமிழக பொலிஸ் துறையில் இருந்த மோகனதாசு மற்றும் றோ அமைப்பின் சென்னை அதிகாரி உன்னிகருசுணன் பின்புலத்தில் சதிகள் முனைப்புப்பெற்றன.
சிங்களத்திற்கு துணைபோகும் தமிழ் துரோகப் பாரம்பரியம் அப்போதும் அரங்கேறுகிறது. கந்தசாமி என்ற உளவாளி அருகில் குடியேறி பாலா அண்ணாவை தீர்த்துக்கட்டும் கைங்கரியத்தில் இறங்குகிறான்.
அவர் இருந்த மாடி குடியிருப்பின் கூரையில் குண்டைவைத்து வெடிக்க வைக்கிறான். தெய்வீகமாக பாலா அண்ணா தப்பிவிட புலிகளுக்குள் ஏற்பட்ட உள்ளக முரண்பாடு என அதை சடையமுற்படுகிறது மோகனதாசின் பொலீசுத்துறை. அதையும் தாண்டி அத்துலக்முதலியின் நேரடி பணிப்புரையிலேயே கந்தசாமி அச்செயலை செய்தது வெளிப்பட, கந்தசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலா அண்ணாவை குறிவைத்து நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அது ஒரு கொந்தளிப்பான சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தியது. முதல்வர் எம்.ஜி.ஆர். கூட வந்து பார்ப்பதாக இருந்தார். பின்னர் பாதுபாப்பு காரணங்களுக்காக அது தவிர்க்கப்பட்டது.
அப்போது புளொட் நீங்கலான ஏனைய அமைப்புகள் ஒரு அணியில் இருந்ததால் நாபா சிறீசபாரத்தினம் பாலகுமாரன் ஆகியோர் வந்து தம் ஒற்றுமையை வெளிப்படுத்திய சமகாலத்தில், புளொட் சித்தார்த்தன் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி சிவசிதம்பரம் ஆகியோரும் வந்து சென்றதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
அதுவரை இயற்கையுடன் வாழ்ந்த பாலா அண்ணா வாழ்வு முற்றுகைக்குள் கொண்டு வரப்படுகிறது. அடையாறில் இருந்த அரசியல் அலுவலகத்திற்கு அருகில் ஒரு வீட்டில் பாதுபாப்பு வலயத்திற்குள் பாலா அண்ணா கொண்டு வரப்பட்டார்.
நிகழ்வு 2:
1986 நவம்பர் 22ஆம் நாள் எனக்கு நடேசண்ணையிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.. பாலா அண்ணா உடனும் வந்து பார்க்கட்டாம்.. என்பது செய்தி.. நானும் என்ன பிரச்சனை என யோசித்தபடி பிரதான அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பு முற்றுகைக்குள் இருந்த பாலா அண்ணாவை சென்று பார்த்தபோது வீட்டு வாசலில் நின்றிருந்த அவர் முகத்தில் இனம்தெரியாத ஒரு கலவரம் தெரிந்தது.
என்ன அண்ணா என்று வினாவியவாறு சென்றபோது உள்ளே சென்றார், பின்தொடர்ந்தேன். உள்ளே கட்டிலில் அண்ணை அமர்ந்திருந்தார். இவர் ஏன் இங்கே தனியாக இருக்கிறார் என எனக்குள் பல கேள்விகள்.. பாலா அண்ணா பேச ஆரம்பித்தார்.
தொலைத்தொடர்புகளை பறித்து விட்டார்கள். தம்பி சாகும்வரை உண்ணாநோன்பை ஆரம்பித்து விட்டார். இப்படியே விட்டால் சாகடிச்சிடுவான்கள்..
என்ன செய்வியோ ஏதுசெய்வியோ எனக்குத் தெரியாது இதை உடன இதைப் பெரிய பிரச்சனையாக்க வேண்டும் என்றார். தலைமையின் ஆணித்தரம், உறுதி தெரிந்தமையால் நிலைமையின் அதிஉச்ச விபரீதம் எனக்குப் புரிந்தது. சில நாட்களுக்கு முன்னரே கைதாகி மோசமாக அவமானப்படுத்தப்ட்டு வெளியில் வந்திருந்தோம். அதை தொடர்ந்து பலவிடங்களிலும் வீட்டுக்காவல் தொடர்ந்தது. நிலைமை கட்டு மீறிச் செல்வதை உணர்ந்து தற்காலிகமாக எனது மாணவர் விடுதிக்குள் முடங்கிக்கிடந்த நான் மீண்டு வேகமாக களங்களைத் திறக்க ஆரம்பித்தேன்.
அன்றும் அனைத்து இடங்களும் இருக்க பாலா அண்ணா வீட்டை தெரிவு செய்து அவர் வீட்டில் வந்திருந்து அவரிடம் மட்டும் சொல்லிவிட்டே அண்ணை தனது உண்ணா நோன்பை ஆரம்பித்தார். அதுதான் அவர்கள் இருவருக்குமான உறவும் புரிதலும்.. இதை நான் அவ்வாறே 2003இலும் கண்டேன். மார்ச் 2003 டோக்கியோ சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நான் வன்னியில் இருந்தேன். அப்போது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய உளவுத்தகவலின் அடிப்படையில் புலிகளின் கப்பலை சிறீலங்கா கடற்படை தாக்கியளித்தது.
தமிழர் தலைமை கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அரசியல் செயற்பாட்டில் இருந்த போராளிகள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்பினர். போர் மூள்கிறது என்ற அச்சம் எங்கும் வியாபித்திருந்தது. நான் பாலா அண்ணாவுடன் ஒரு வீட்டில் இருந்தேன். நடேசண்ணை வந்தார். கதைத்தார். போனார். பின்னர் பாலகுமாரன் வந்தார், கதைத்தார், போனார்.
இவ்வாறு மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து போயினர். அனைவரின் வேண்டுதலும் தம்பியோடை கதைத்து சமாதானபடுத்துங்கோ என்பதிலேயே இருந்தது. அதாவது முக்கியவிடயங்களை கதைப்பதற்கு அனைவருக்கும் பாலா அண்ணாவே எப்போதும் தேவைப்பட்டார். இது தான் அந்த உறவின் ஆழம். அதைப் புரிந்துகொள்ளாது கதை சொல்பவர்களை நான் என்னவென்று சொல்ல..
இரண்டு நாட்களுக்குள் பாலா அண்ணா எதிர்பார்த்தமாதிரி தலைமையின் உண்ணாநோன்பு தமிழகம் தழுவி கொதிப்பலைகளை எழுப்ப கோரிக்கை சுமூகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்பின்னணி மற்றும் ஏனையவிடயங்கள் குறித்து இன்னொரு பதிவில் பார்ப்போம்.
நிகழ்வு 3:
இந்திய இராணுவத்துடனான சண்டைக்காலம். ஆம் 1987இன் பிற்பகுதி. புலிகளின் தலைவர்களைப் பிடித்துவிடவேண்டும், அழித்துவிடவேண்டும் என மலையாள உளவுத்துறை துணைகொண்டு அலைகிறது இந்திய இராணுவம். புலிகளுக்கு உதவுகிறார்கள் எண்டு சொல்லி தமிழக 'றெஜிமன்ட்' வெளியேற்றப்படுகிறது. மலையாள உளவுத்துறையின் கொட்டம் அதிகதிக்க பாலா அண்ணா குறிவைக்கப்டுகின்றார். அவரை பிடித்துவிட்டால் பிரபாகரனை கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என அவர்கள் கணக்குப் போடுகின்றனர். வடமராட்சியில் மறைந்திருந்த பாலா அண்ணாவை காப்பாற்றுவதில் கைதுகளும் உயிர்பலிகளும் நடந்தேறுகின்றன.
தலைமை வன்னிக்காட்டிற்கு நகர, பாலா அண்ணா உடல்நிலை கருதி தமிழகத்திற்கு நகர்த்தப்படுகின்றார். வேதாரணியம் சென்ற பாலா அண்ணாவும் அன்ரியும் சில நாட்கள் அங்கு மறைவாக இருந்தனர்.
தொடர்ந்தும் ஒரு இடத்தில் இருப்பது ஆபத்தென்பதால் பின்னர் நகர்ந்து திருச்சியில் சில நாட்களும் பின்னர் கர்நாடகாவில் பெங்களூரை சென்றடைந்து மறைந்து வாழ்ந்தனர். தாயகத்தில் போர் முடிவடைந்ததும் மீண்டும் தாயகம் திரும்புவதே திட்டம்.
ஆனால் போரின் போக்கு அது விரைவில் முடிவடைவதற்கான எத்தகைய போக்கையும் காட்டாத நிலையில் அங்கு தொடர்ந்திருப்பது ஆபத்தாகிவிடும் என்பதால் லண்டன் திரும்புமாறு பணிக்கிறது தலைமை. இப்போது சவால் என்னவென்றால் இந்தியாவினூடாக பிடிபடாமல் எவ்வாறு லண்டன் செல்வது.
தனது தனிப்பட்ட தொடர்பில் இருந்த அந்த உயர் தமிழ் பொலீசு அதிகாரியை உதவிக்கு அழைக்கிறார் பாலா அண்ணா. அவரும் உதவுவதாக உறுதியளிக்க சென்னை திரும்பினர். விமானம் ஏறுவதற்கு முன்னர் வீட்டுக்காவலில் இருந்த மூத்த தளபதி கிட்டுவை சந்தித்துவிட்டுச் செல்ல விரும்பினர். சுற்றிவர 24 மணிநேரமும் பொலிசு காவலில் உள்ள கிட்டுவை எவ்வாறு சந்திப்பது.
கிட்டுவே அதற்கான வழியையும் உருவாக்கினார். அப்போது வந்த இரண்டு புதிய தமிழ் படங்களை தருவித்த கிட்டு, அன்றிரவு அனைத்து பொலிசு காரர்களுக்கும் விசேட திரைக்காட்சி போட்டார். அவர்கள் அதை ஆவெனப்பார்த்துக் கொண்டிருந்தபோது பின்புற முள்வேலி கடந்து உள்ளே சென்று கிட்டுவை சந்தித்தார் பாலா அண்ணா. பின்னர் விமானநிலையம் சென்றபோது இருவருக்கும் வேறு பெயரிலேயே 'டிக்கெட்' இருந்தது.
டிக்கெட்டை வாங்கிய 'ஏஜென்ட்' அதை அவர்களிடம் திருப்பிக் கொடுத்தபோது பாலசிங்கம் குடும்பமே மகிழ்ச்சியாக சென்று வாருங்கள் என அதில் எழுதப்பட்டிருந்தது. முதல் காண்டம் தப்பியாகியது அடுத்து குடிவரவுப்பகுதியைக் கடக்கவேண்டும்.
இங்கு கடவுச்சீட்டு யார் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். இரண்டாவது இந்தியாவில் முறைப்படி தங்கியமைக்கான எவ்வித அனுமதியும் அதில் இல்லை. இவர்கள் கடவுச்சீட்டை கொடுத்தபோது அதை வாங்கிய குடிவரவு அதிகாரி மறைவில் நின்ற ஒருவரைப் பார்த்தார். அவர் தலையசைத்தார். கடவுச்சீட்டு ஒப்படைக்கப்பட்டது. பாலா அண்ணா குடும்பம் சிங்கத்தின் வாய்குள்ளாலேயே பயணித்து லண்டன் பயணமாகினார்.
ஆம், தன் உயர் பதவி நிலையையும் கடந்து தமிழின உணர்வோடு செயற்பட்ட அந்த உயர் அதிகாரி பின்னர் விசயம் கசிந்து தன்னை நோக்கி வலையம் இறுகியபோது சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை சோகவரலாறு.
இவ்வாறு தான் இந்த வீரவரலாற்றில் எத்தனையோ அர்ப்பணிப்புக்கள்.
மூலம்:- நேரு குணரத்திணம்.