இது, தமிழீழக் கவியரசு புதுவை இரத்தினதுரை அவர்களின் இறுதிக் கவிவரிகள். இதுதான் அவருடைய இறுதிக் குரல்வடிவமும்..!
இந்த ஆவணப்படம் 2009 இல், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழ் மக்கள் ஈவிரக்கம் இன்றிச் சரமாரியாகவும் கொத்துக் கொத்தாகவும் கொல்லப்படுவதைக் காட்சிப்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டு வாசல் வரைக்கும் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், அது திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது. பின்னர், முடிந்தவரை இணையம் வாயிலாகவும் வேறுவழிகள் ஊடாகவும் பரப்பப்பட்டது. அது, பெரியளவில் மக்களிடம் போய்ச் சேரவில்லை.
இதன் நோக்கம் ஒன்றுதான். அந்தப் போரை நிறுத்துவதற்கான பொறுப்பும் பலமும் தமிழ்நாட்டிடம் இருந்தது. அந்தப் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அந்தக் காணொளி அனுப்பப்பட்டது. மக்களின் அவலங்களைச் சாட்சிகளோடு உணர்த்துவதற்காகவே இந்த ஆவணப் படம் செய்து அனுப்பப்பட்டது. இருந்தாலும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் இந்த ஆவணப்படத்தைப் பார்த்திருந்தும், அந்தப் போரை நிறுத்துவதற்காக இதயசுத்தியோடு பொறுப்பை உணர்ந்து செயற்படவில்லை.
கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் போன்ற சில பாசாங்கான போராட்டங்கள் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தி விடவில்லை. மாறாக, அது உண்மையான மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காகக் கையாளப்பட்டது.
தார்ப்பரியங்களை உணர்ந்து தமிழ்நாட்டில் உண்மையாகப் போராடியவர்கள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். பலர் தீக்குளித்து மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்திப் போராடினார்கள். பல ஆயிரக்கணக்கான மக்களின் போராட்டங்கள் திட்டமிட்டு அடக்கப்பட்டது.
ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் அந்தப் போரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பல கோடி தமிழ்மக்களும் தமிழ்நாட்டு அரசும் போராடியிருந்திருக்கு மேயானால், தமிழ்மக்களை அழித்தொழித்த அந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கும்.
அந்தப் போரை நிறுத்துவதற்கு உலகநாடுகளிடம் இருந்த பொறுப்பைவிட தமிழ்நாட்டிடம் அதிகம் இருந்தது.
ஆனால், தமிழ்நாடு அந்தத் தார்ப்பரியத்தையும் பொறுப்பையும் உணர்ந்து அந்தப் போரை நிறுத்த ஒன்றுபட்டு சரிவரப் போராடவில்லை. அதற்கான காரணம், அப்போது இருந்த கருணாநிதி தலைமையிலான தமிழ்நாட்டு ஆட்சி என்பதை வரலாறு பதிவுசெய்து கொண்டது.