முள்ளிவாய்க்கால் போயிருந்தேன்- அந்த
முல்லைத்தீவையும் மோதிவந்தேன்
முள்ளில் கிழிந்த என் கண்கள்- நீர்
முட்டித் தெறித்ததை யாரறிவார்?
ஆனந்த புரத்தைக் கடக்கயிலே- என்
ஆவி துடித்ததை என்ன சொல்ல?
நானந்தத் துயரம் சொல்வதற்கு- என்
நாபடும் பாடு கொஞ்சமல்ல
இந்த இடம் தான் அந்த இடம்- எம்
இலட்சம் உயிர்களைக் கொன்ற இடம்
சொந்தம் சொல்லி நானழுதால் - விண்
சுற்றும் கோள்கள் நின்றுவிடும்
சாகாத காற்றின் சப்தங்களில் - எம்
சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்
ஆகாயம் எரித்த சாம்பல்துகள் - மண்ணில்
ஆங்காங் கலைவதைக் கண்டறிந்தேன்
எரிவாய்ப் பட்டசருகுகளாய்- உடல்
இற்றுப் போனவர் எத்தனையோ?
நரிவாய்ப் பட்ட நண்டுகளாய்- இங்கு
நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ?
தாயிடம் பால்கொண்டபிள்ளையரை -ஒரு
தடயம் இன்றியே எரித்தாராம்
ஆயிரம் எலும்புக் கூடுகளைச்- சீன
அமிலம் ஊற்றியே அழித்தாராம்
படர்ந்து கிடக்கும் வெறுமையிலே- இனம்
பட்ட பெருந்துயர் சில அறிவோம்
நடந்த மெய்க்கதை மொத்தமென-ஏ
நந்திக்கடலே நீயறிவாய்
தோண்டு மிடத்தில் தங்கம் வரும் - என்று
சொல்லிக் களித்த ஈழத்தில்
தோண்டுமிடத்தில் குருதி வரும் - என்று
சொல்லிப் புலம்பும் நிலையுற்றோம்
மைநீட்டிச் செய்த நிறம்படைத்த - பல
மங்கையர் கூந்தலில் பூவுமில்லை
கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே - சிலர்
கரங்களுமில்லை கைகுலுக்க
மண்ணில் விழுந்த மழைத்துளிகள் - அவை
மண்ணில் தொலைந்து போவதில்லை
எண்ணில் அடங்கா உயிர்த்தியாகம் - வெறும்
இறப்புக் கணக்கில் சேர்வதில்லை
அழிந்து போனது போலிருக்கும் - ஆயின்
அருகம்புல்லுக் கழிவேது?
பொழியும் ஒருதுளிபட்டவுடன்- அது
பொட்டென் றெழுமே அழியாது
எந்த யுகத்தில் போர்களில்லை? - அட
எந்த யுகத்தில் தோல்வியில்லை?
அந்த யுகத்தை எருவாக்கு - நீ
அடுத்த யுகத்தை உருவாக்கு!
***