இன அழிப்பையும் அதன்தொடர்ச்சியான பயங்கரத்தையும் பட்டுணர்ந்த மக்களால் தான் அதையொத்த சிரியா மக்களின் இழப்புக்களையும், மனிதக் கொலைகளையும், வலிகளையும், பரிதவிப்புக்களையும், துயரங்களையும் புரிந்துகொள்ள முடியும்!
பல இலட்சக்கணக்கான சிரயா அகதிகள் ஐரோப்பா எங்கும் வாழ்ந்தாலும், சொந்த இனஅழிப்புக்கு எதிராக அவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்களா என்று எமக்குத் தெரியாது.
ஆனால், எமது மக்கள் அவர்களுக்காகவும் போராடுகிறார்கள்.
ஆக்கிரமிப்பாளர்களே! சிரியாவில் அப்பாவிப் பொதுமக்கள் கொன்றொழிக்கப் படுவதை நிறுத்துங்கள்! சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சிரியா மக்கள் மேல் வீசப்படுகின்ற குண்டுமழைகள் எங்கள் நெஞ்சுகளையும் துளைக்கின்றன!அப்பாவி உயிர்களுக்கு எதிரான அநியாயங்களை சக மனிதர்களாக எங்களால் பொறுக்க முடியவில்லை! என்று எமது மக்கள் குரல்கொடுக்கின்ற போது, அது உலகின் கவனத்தை ஈர்க்கும். ஈழத்தில் முற்றுப் பெறாது தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு இன்னும் தீர்வு இல்லை என்பதை பன்னாட்டு அரங்கில் உரக்கச் சொல்வோம்!
கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், போராட்டத்திலும் எமது நீதிக்கான குரல்களை எழுப்புவோம்! உலக ஆக்கிரமிப்பாளர்களின் செவிகளுக்கு எமது நீதிக்கான குரல்கள் ஒலிக்காவிட்டாலும், நாம் எமது குரல்களை சக மனித குலத்தை நோக்கி எழுப்புவோம்!
மற்றவர்களுக்காகவும் போராடுகின்ற எம்மை உணர்ந்த மனித சமூகம் நிச்சியம் எமது போராட்ட நியாயங்களை ஓர் நாள் அங்கீகரித்து, எமது விடுதலைக்கு உதவ முன்வருவார்கள்.
இவ்வாறாக அநீதியை எதிர்க்கின்ற மக்கள் சமூகத்தோடும், நீதிக்காகப் போராடுகின்ற மக்கள் சமூகத்தோடும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான மக்கள் சமூகத்தோடும், விடுதலையை நேசிக்கின்ற மக்கள் சமூகத்தோடும் கைகோர்க்க வேண்டும்.
அதன்மூலம் ஒரு பலமான மென்வலுவை உருவாக்கி, அதனை ஒரு கருவியாக் கொண்டு எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுபட்டுப் போராடுவோம்.
நன்றி.
த.ஞா.கதிர்ச்செல்வன்.