'முழுவட்ட உலகும் சமாதானத்தை வெற்றிகொள்தலும்.'
இரண்டாம் உலகப் போரின்போது, பெரிய பிருத்தானியாவின் அரசியற் புவியியலாளர் தனது இயல்பான தொலைநோக்கு முன்னுணர்தல் மூலம் அவரது இதயநிலக் கோட்பாட்டை இற்றைப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், 'Foreign
Affairs' என்ற சஞ்சிகையின் ஆசிரியர், பிருத்தானியாவின் பூகோள அரசியல் சிந்தனையாளரான ஃகல்போர்ட் மக்கின்டரிடம் அவரது பூகோள உலகப்பார்வையை இற்றைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதாவது, 'இதயநிலக் கோட்பாட்டின்' (Heartland theory) தந்தை என அறியப்படும் மக்கின்டர் தனது உலகப்பார்வையை, 'வரலாற்றின் புவியியல் அச்சு' என்னும் 1904 இல் வெளியான தனது கட்டுரையிலும், 1919 இல் 'சனநாயகக் கருத்தியல்களும் மெய்மையும்' என்ற அவரது நூலிலும் ஏற்கெனவே எழுதியிருந்தார்.
இவற்றையே இற்றைப்படுத்துமாறு (update) அந்த சஞ்சிகையின் ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, "முழுவட்ட உலகும் சமாதானத்தை வெற்றிகொள்தலும்" என்ற தலைப்பிலான கட்டுரையைப் படைத்தார். அப்போது அவருக்கு 82 வயது இருக்கும்போது, யூலை-1943 இல் வெளியான Foreign
Affairs சஞ்சிகையில் அந்தக் கட்டுரை வெளியானது. அதுவே, உலகளாவிய ஆதிக்கச் சமநிலை குறித்து வெளியிட்ட அவரது இறுதிப் படைப்பு ஆகும்.
மக்கின்டரையும் அவரது பூகோள அரசியற் கோட்பாடுகளையும் கற்ற ஆய்வாளர்கள் கூட "முழுவட்ட உலகும் சமாதானத்தை வெற்றிகொள்தலும்" என்ற கட்டுரையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்திருந்தார்கள் அல்லது குறைத்து மதிப்பிட்டிருந்தார்கள். அந்தக் கட்டுரையில் மக்கின்டர், "இதயநிலக் கோட்பாட்டை" மட்டும் இற்றைப்படுத்தவில்லை; பசுபிக், இந்து சமுத்திரக் கடல்கள் மற்றும் எதிர்காலத்தில் உலகளாவிய ஆதிக்கச் சமநிலையில் ஒரு முக்கியபங்கு வகிக்கும் என அவர் எதிர்வுகூறிய இந்தியா, சீனா ஆகியவற்றின் 'Monsoon lands” எனப்படும் மழைக்கால நிலங்கள் உள்ளிட்ட ஏனைய பூகோள அம்சங்களையும் அந்தக் கட்டுரையில் அவர் அடையாளப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்குவகிக்கும் "மொன்சூன் நிலங்கள்" என அவர் குறிப்பிட்டிருப்பது தமிழ்நாட்டையும் குறிக்கின்றது என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
அவரது அந்த இரண்டு படைப்புக்களிலும் (1904 மற்றும் 1919 ஆண்டுகளில் வெளியான), யுரேசியாவின் பெருநிலப்பரப்பின் (Eurasian landmass) வட மத்திய மையத்தை, உலகின் 'அச்சுப் பிராந்தியம்' அல்லது உலகின் 'இதயநிலம்' என அடையாளப்படுத்தியுள்ளார்.
அத்துடன், அந்த இதயநிலத்திலிருந்து போதிய படைக்கலக் கட்டுமானத்தைக் கொண்டதும், ஒழுங்கமைக்கப்பட்டதுமான ஒரு பெரும் அரசு அல்லது பல அரசுகளைக் கொண்ட ஒரு கூட்டணி உலகளாவிய ரீதியில் மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கலாம் எனவும்,
தொழினுட்பமும் இனத்தொடர்பு கொண்ட சனத்தொகைப் பரவலும் இதயநிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிலமேலாதிக்க அரசைத் தோற்றுவிக்கலாம் என்றும்,
அது, யுரேசியாவின் கடற்கரை நிலங்களை அரசியல் ரீதியாக ஒரு வலுவான கட்டுப்பாட்டுக்குள் எடுக்கலாம் எனவும்,
அதன்காரணமாக பிருத்தானிய மற்றும் அமெரிக்கக் கடல் ஆதிக்க அரசுகள் அதிக தரம்வாய்ந்த ஒரு கடற்படையைக் கட்டுவதற்கு வழிகோலலாம் எனவும் அந்த இரு படைப்புக்களிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்காரணமாக பிருத்தானிய மற்றும் அமெரிக்கக் கடல் ஆதிக்க அரசுகள் அதிக தரம்வாய்ந்த ஒரு கடற்படையைக் கட்டுவதற்கு வழிகோலலாம் எனவும் அந்த இரு படைப்புக்களிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கின்டர், 1904 இல் வெளியான அந்த சஞ்சிகையில் பின்வருமாறு எழுதியுள்ளார்: ஆதிக்கச் சமநிலை குலைந்து, இதயநிலத்துக்குச் சார்பான அல்லது அதனைத் தளமாகக் கொண்டு உருவாகக்கூடிய ஒரு அரசு அல்லது பல அரசுகளைக் கொண்ட ஒரு கூட்டணி அமையுமானால் அது, யுரேசியாவின் விளிம்புக் கரையோரங்களை ஆக்கிரமிப்பதில் முடியும். அவ்வாறு யுரேசியாவின் விழிம்புக் கரையோரங்களை ஆக்கிரமிப்பதன் வாயிலாக, கூட்டுக் கடற்படைக் கட்டுமானத்துக்கான யுரேசியாவின் மிகப்பெரும் வளங்களைப் பயன்படுத்துவதற்கான சாதகம் ஏற்படுவதுடன், முழு உலகிற்கான ஒரு பேரரசு உருவாகுவதற்கும் அது வழிசமைக்கும். ரசியாவுடன் யேர்மனி கூட்டுச் சேர்ந்தாலோ அல்லது யப்பானுடன் சீனா கூட்டுச் சேர்ந்தாலோ அவ்வாறு நடப்பதற்குச் சாத்தியம் உண்டு என அதில் அவர் தொடர்ந்து எழுதியுள்ளார்.
மக்கின்டர் 1919 இல் வெளியான தனது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: உண்மையில், ரசியாவையும் பிரான்சையும் வெற்றிகொண்டிருந்த யேர்மனி, உலக வரலாற்றிலே மிகப்பெரும் பரந்துபட்ட தளத்தில், மிகப்பெரும் சாத்தியமான தளத்தில் அதன் கடல் ஆதிக்கவலுவை நிறுவியிருந்திருக்கலாம். ஆனால், யேர்மனி அதைச் செய்யவில்லை.
பூமியிலே மிகப்பெரும் நிலப்பரப்பையுடைய யுரேசியாவின் பெரும் பகுதி, ஒரு காலத்தில், ஓர் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்டு ஒன்றுபட்டு நிற்கக்கூடிய சாத்தியப்பாடு குறித்தும், அதனை ஒட்டி உருவாகக்கூடிய வீழ்த்தமுடியாத ஒரு கடல் ஆதிக்கவலு குறித்தும் நாம் ஏன் எண்ணிப்பார்க்கக் கூடாது? என மக்கின்டர் கேள்வியெழுப்பி எச்சரித்துள்ளார்.
பூமியிலே மிகப்பெரும் நிலப்பரப்பையுடைய யுரேசியாவின் பெரும் பகுதி, ஒரு காலத்தில், ஓர் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்டு ஒன்றுபட்டு நிற்கக்கூடிய சாத்தியப்பாடு குறித்தும், அதனை ஒட்டி உருவாகக்கூடிய வீழ்த்தமுடியாத ஒரு கடல் ஆதிக்கவலு குறித்தும் நாம் ஏன் எண்ணிப்பார்க்கக் கூடாது? என மக்கின்டர் கேள்வியெழுப்பி எச்சரித்துள்ளார்.
"முழுவட்ட உலகும் சமாதானத்தை வெற்றிகொள்தலும்" என்ற கட்டுரையை மக்கின்டர் எழுதியபோது, யேர்மனியும் ரசியாவும் இதயநிலத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பெரும் போரைத் தொடுத்துக்கொண்டிருந்தன.
"இதயநிலம்" என்ற கோட்பாட்டுக்கான சிந்தனை தோன்றுவதற்குக் காரணமான பின்வரும் இரு நிகழ்வுகளை விளக்கியவாறு அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதியுள்ளார் மக்கின்டர்: ஒன்று, Boer War எனப்படும் தென்னாபிரிக்காவில் குடியேறிய டச்சு இனத்தவர்களுக்கு எதிரான பிருத்தானியாவின் போர், இரண்டு, Russo-Japanese War எனப்படும் ரசியாவுக்கும் யப்பானுக்கும் இடையேயான போர்.
சமுத்திரத்தைக் கடந்து ஆறாயிரம் மைல்கள் தொலைவில் போயர்கள் எனப்படும் டச்சுக் குடியேற்ற இனத்தவர்களுக்கு எதிராக பெரிய பிருத்தானியா தொடுத்த போரையும், தரையிலிருந்து குறிப்பிட்ட மைல்கள் தொலைவைக் கடந்து யப்பானுடன் போரிட்ட ரசியாவின் போரையும் ஒப்பிட்டு அதன் வேறுபாடுகளைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
இதற்கு இணையான மற்றுமொரு விடயமாக, 15ஆம் நூற்றாண்டின் முடிவளவில் வாசுக்கொட காம என்பவர் தனது இந்தியாவுக்கான (Indies) பயணத்தின் போது, தென்னாபிரிக்காவின் முனையான Cape of Good Hope என்ற பகுதியைச் சுற்றிவந்ததையும், 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குதிரைப் படைக்குப் பேர்போன கொசாக்கியரான (Cossack) யேர்மாக் (Yermak) என்பவர் (சைபீரியாவை வெற்றிகொண்டு ரசியாவை வழிநடத்திய வீரன்) தனது குதிரைப் படைகளை உரால் என்ற ஆற்றைக் கடந்து சைபீரியாவுக்குச் சென்றடைந்த அந்தக் குதிரைப் பயணத்துக்கும் இடையேயான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது ஐரோப்பியா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக ஸ்ரெப்பி பழங்குடியினத்தவர்கள் மேற்கொண்ட நாடோடித் தாக்குதல்களை (nomadic raids) மீளாய்வுசெய்ய அவருக்கு வழிவகுத்தது என மக்கின்டர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வரலாற்றில் புவியியலின் தாக்கம், சமகால நிகழ்வுகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதாயின், புவியியல் நிபந்தனைகளோடு வரலாற்று நிகழ்வுகளைத் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய சாத்தியப்பாட்டை இந்த நிகழ்வுகள் அவருக்குப் புலப்படுத்தின எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கின்டரின் இதயநிலம் குறித்த கோட்பாடு இருபது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழ்நிலையை விட, தற்போது மிக அதிகப் பயனுள்ளதாகவும் மிகவும் சரியானதாகவும் இருப்பது அவருடைய துல்லியமான கணிப்பீட்டை வெளிப்படுத்தியுள்ளது.
பூகோளரீதியாகப் பார்க்கும் போது இதயநிலமானது, இலேனா நதிக்கு கிழக்கே அமைந்துள்ள நிலப்பரப்பைக் கழித்தால், சோவியத் ஒன்றியத்தின் நிலப்பரப்புக்குச் சமமானது ஆகும். சோவியத் ஒன்றியம் யேர்மனியைத் தோற்கடித்திருந்திருந்தால், அது பூமியிலேயே மிகப்பெரிய நில மேலாதிக்க சக்தி என்ற நிலையில் இருந்திருக்க வேண்டும், அத்துடன் வரலாற்றிலே முதற்தடவையாக இதயநிலம் படைக் கட்டுமானத்தில் துருப்பினரின் எண்ணிக்கையிலும் தராதரத்திலும் போதியளவு வலுமிக்கதாக இருந்திருக்க வேண்டும் எனவும் அவர் எழுதியுள்ளார்.
அநேகமாக இதயநிலத்துக்கு இணையான முக்கியத்துவம் வகிக்கக்கூடிய இரண்டாவது மிகப்பெரும் பூகோள அம்சமாக Midland Ocean எனப்படும் "மத்தியதரைச் சமுத்திரத்தை" மக்கின்டர் கணிப்பிட்டார். அதனை அவர், "வட அத்லாந்திக் மற்றும் அதனைச் சார்ந்த கடல்களும் ஆற்றுப் படுக்கைகளும்" என விபரித்துள்ளார். அவர் அதை எழுதியதிலிருந்து 06 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட "வட அத்லாந்திக் கூட்டணி" (North Atlantic Alliance) அவரது குறிப்பிடத்தக்க ஒரு தீர்க்கதரிசனமாக அமைந்திருந்தது.
அவர் தனது இறுதிப் பூகோள அம்சமாக "இந்தியா மற்றும் சீனாவின் மொன்சூன் நிலங்களை" வரையறுத்துள்ளார். அதனை அவர், "கீழைத் தேசப் பண்டைய நாகரிகத்துக்குச் சொந்தமான ஆயிரம் மில்லியன் மக்களைக் கொண்டுள்ள" பிராந்தியம் எனவும், அது தன்னை அபிவிருத்திசெய்து வளர்ச்சிபெறுவதோடு, ஏனைய பெரும் புவியியல் பிராந்தியங்களையும் சமநிலைப்படுத்தும் என விவரித்துள்ளார்.
அந்தக் கட்டுரை Foreign
Affairs என்ற சஞ்சிகையில் வெளியாகியதிலிருந்து ஒரு வருடம் கழித்து, சார்ள்ஸ் பி.டலி (Charles P. Daley medal ) என்ற பதக்கத்தை அமெரிக்கப் புவியியல் சமூகம் என்ற அமைப்பிடம் இருந்து மக்கின்டர் பெற்றுக்கொண்டார்.
அது, 1944 மார்ச்-31 இல் பிருத்தானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து அவருக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அமெரிக்கத் தூதுவர் ஜோன் வினான்ட் என்பவர், "ஆட்சிக்கலைக்கு உதவியாக புவியியலை முழுமையாகப் பட்டியலிட்ட முதல் மனிதர்" என மக்கின்டரைப் பாராட்டியிருந்தார்.
***
(ஆடி 2015 அகரம் இதழில் வெளியான எனது கட்டுரையைச் சிறிது சீரமைத்து வெளியிடுகிறேன்.)
த.ஞா.கதிர்ச்செல்வன்.