எழுத்து மூலம்:- செய்தியாளர், சுரேன் கார்த்திகேசு.
(ஏப்பிரல்-20-2018 இல் எழுதப்பட்டது)
வைத்தியர் வரதராசா துரைராசா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க அன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009)
“மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம், சனம் நிறைய உள்ளே (சிங்களப் படையினரிடம்) போயிட்டுதாம்,” என்று எம் செவிகளுக்குக் கிடைத்த அந்தச் செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது.
முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்குக் கீழே 'தறப்பாள்' விரிக்கப்பட்டு, அதில் காயமடைந்தவர்களைக் கிடத்தினோம். அன்று காலையில் எம்மால் எந்த விபரங்களையும் எடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அன்று மாலையில் எம்மால் முடிந்த வரையில் காயமடைந்தவர்களின் விபரங்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களைச் சேகரித்தோம். முழுமையாக விபரங்களை பத்திரிகையில் வெளியிடமுடியவில்லை.
முல்லைத்தீவு நகரப் பகுதிக்கு அருகருகே அமைந்துள்ள முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன் ஆகிய கடற்கரைக் கிராமங்களே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் பெருமளவு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களாகும். இன்றைய நாளில் , ஏப்பிரல்-20,2009 அன்று 1983 இற்கு பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்திருந்தனர். எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீண்டும் சுட்டும், பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசியும் படுகொலை செய்த இன்றைய நாளில் நான் சந்தித்த முதலாவது மிகப்பெரிய அவலம் இதுவேயாகும்.
இன்று ஏப்பிரல்-20. அதன் நினைவுகளோடு தான் இன்று நான் வேலைக்குப் போனேன். ஏதாவது எழுதுவம் என்று நினைக்கும் பொழுது தான் “வைத்தியர் வரதராஜா துரைராசா அவர்களின் நினைவு வந்தது”. “படையினர் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு மிகக்கிட்டிய தூரத்தில் நிற்கும் போது அவரும் இன்னொரு மருத்துவ பணியாளரும் வலைஞர்மடம் பகுதியில் இருந்து கடற்கரை வழியாக புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் முக்கியமான மருந்துப்பொருட்களையும் மீட்டு வந்தவர்.
அவரிடம் இன்று பேசியபொழுது மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றி நினைக்காமல் காயமடைந்துவரும் மக்களுக்குச் சிகிச்சை அளித்த அத்தனை பேரும் மதிப்புக்குரியவர்கள் என்று சக மருத்துவப் பணியாளர்களின் பெயர்களைச் சொல்லி பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய முழுமையான பகிர்வு பிறிதொரு சமயத்தில் வெளிவரும்.
அன்றைய நாளில் நடந்தது என்ன? வைத்தியர் வரதாராசா பின்வருமாறு கூறுகின்றார்:
“படையினர் எங்களைக் கண்டுவிட்டனர். எங்களை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். நான் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி, பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்தே புதுமாத்தளன் வைத்தியசாலைக்குள் ஓடினேன்.”
இவ்வாறு இறுதி யுத்தகாலப்பகுதியில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட வைத்தியர் வரதராசா துரைராசா இன்று தெரிவித்துள்ளார். இவரே முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளராக அந்நேரத்தில் கடமையாற்றியவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் எம்முடன் அன்றைய நாட்களில் நடந்த கொடூர நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
வலைஞர்மடம் பகுதியில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். எங்களுக்கு அன்று காலை, "மாத்தளனில் ஆமி வந்திட்டான் என்றும் நடக்கக்கூடிய நோயாளர்கள் மற்றும் பல மருத்துவ பணியாளர்களும் ஆமிக்குள்ள போயிட்டினமாம்” என்று தகவல் வந்தது.
"நான் வெளிக்கிட்டன். அங்க ஒருக்கா போவம் என்று. என்னை ஒருத்தரும் விடவில்லை. காலை 9.30 மணிக்குத் தான் எப்படியாவது போய்ப்பார்ப்பம் என்று நானும் இன்னொரு மருத்துவ பணியாளரும் கடற்கரை வழியாகப் புதுமாத்தளன் பகுதிக்குச் சென்றோம். வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று படையினர் எம்மை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர்.”
“நாங்கள் வாகனத்தை விட்டு இறங்கி அருகில் உள்ள பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்து வைத்தியசாலைக்குள்ளே ஓடிட்டம். அங்கே பலரது உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் காயப்பட்டவர்களின் முனகல் சத்தங்கள் ஒருபுறம், மறுபுறத்தே இடையிடையே சண்டையும் நடைபெறுகிறது. வைத்திசாலை சன்னலால் எட்டிப்பார்த்தால் நூறு மீற்றரில் ஆமி நிக்கிறான். வைத்தியசாலையில் இருந்த காயமடைந்தவர்களுக்குச் சரியாகச் சிகிச்சை அவ்விடத்தில் வழங்க முடியவில்லை. அவர்களை எம்முடன் வரவிரும்பியவர்களையும் முக்கியமான மருந்துப் பொருட்களையும் வைத்தியசாலையில் இருந்த பிறிதொரு வாகனத்தில் ஏற்றினோம். வாகனம் வெளியே எடுத்தால் ஆமி தாக்குதல் நடத்துவானோ அல்லது இல்லையோ எங்களுக்குத் தெரியாது. ஏதோ! கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தை வைத்தியசாலை முன்புறமாக செலுத்தி அருகில் உள்ள ஒழுங்கை ஊடாக கடற்கரைக்குச் சென்று முள்ளிவாய்க்கால் சென்றடைந்தோம். அன்றைய நாளில் மக்களுடைய இழப்புத்தொகையை என்னால் சரியாகச் சொல்லமுடியாமல் இருக்கிறது. எல்லா இடமும் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள். அன்று எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் மிகுந்த சிரமப்பட்டு பலரது உயிர்களைக் காப்பாற்றியிருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது." இவ்வாறு மருத்துவர் பதிவுசெய்தார்.
மருத்துவர் வரதராசா துரைராசா அவர்கள் புதுமாத்தளன் வைத்தியசாலையில் பணிபுரியும் நாட்களில் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளை இதில் காணலாம்: